
தையிட்டி விகாரைக்கு எதிராக சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் தையிட்டி விகாரைக்கு எதிராகச் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் என தெரிவித்து கடந்த 2025.05.02 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தாலும் அந்த பதிவில் இது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்ட சிங்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் என கமென்ட் செய்திருந்தமையையும் எம்மால் காண முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே மேற்குறிப்பிட்ட காணொளி தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் இது குறித்த செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்தோம்.
இதன்போது தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய கூட்டு மே தின பேரணி கடந்த 2025.05.01 ஆம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றமை தொடர்பான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது. Link | Link
மே தினத்தன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான குறித்த பேரணி நகர் பகுதி ஊடாக பயணித்து யாழ்.பொது நூலகம் முன்பாக நிறைவுபெற்றது.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தல்,அதிபர்,ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்கு, மலையகத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு, கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கு, விவசாயிகள் எதிர்நோக்கும் உற்பத்தி, சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கு உள்ளிட்ட சில கோரிக்கைகள் இதன் போது முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நாம் இந்த காணொளியை கவனித்த போது அதில் தையிட்டி விகாரையை அகற்றுமாறு தெரிவிக்கப்பட்ட பதாதையை ஒரேயொருவர் மாத்திரமே ஏந்திச் செல்வதனை காணமுடிந்தது.
ஏனையவர்கள் சம்பள முரண்பாடு, காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து தெரிவிக்கப்பட்ட பதாதைகளையே ஏந்தி செல்கின்றனர்.
அத்துடன் இதுவொரு கூட்டு மேதினக் கூட்டம் என்பதனால் அதில் பல்வேறு அமைக்களும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அந்த கூட்டத்தில் தையிட்டி விகாரையை அகற்றுமாறு தெரிவித்து எவரும் கோசங்களை எழுப்பவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 01 ஆம் திகதி இடம்பெற்ற மே தின பேரணி தொடர்பான காணொளி பின்வருமாறு
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் ஜோசப் ஸ்டாலின்
மேற்குறிப்பிட்ட காணொளியில் ஆசிரியர் சங்கத்தின் பதாதைகளை ஏந்திச் செல்வதனால் நாம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்களை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது கடந்த 01 ஆம் திகதி யாழில் நடைபெற்றது, மேதினப் பேரணி என்பதனை அவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.
அத்துடன் இந்த பேரணியில் தொழிற்சங்கங்கள், அமைப்புகள் என பலர் கலந்துக்கொண்டிருந்ததுடன், அதில் சிங்கள மற்றும் தமிழ் மொழி ஆசிரியர்களும் கலந்துகொண்டிருந்தாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் இதில் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கோரிக்கைகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தி இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே யாழில் இடம்பெற்ற மேதினக் பேரணியை, தையிட்டு விகாரைக்கு எதிராண சிங்கள மக்களின் போராட்டம் என தெரிவிப்பது முற்றிலும் தவறான ஒரு விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
நாம் இது குறித்து யாழ். பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலரை தொடர்புகொண்டு வினவியபோது, கடந்த மே முதலாம் திகதி யாழ்ப்பானத்தில் பல தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே தின பேரணியே இது, தவிர இந்த பேரணி தையிட்டு விகாரைக்கு எதிராக சிங்கள மக்கள் நடத்திய போராட்டம் அல்லவெனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் அந்த பேரணியில் தையிட்டி விகாரையை அகற்றுமாறு தெரிவித்து ஒரேயொருவர் மாத்திரமே பதாதையை ஏந்தியிருந்ததோடு அவர் நீண்ட நேரம் அந்த பேரணியில் இருப்பதனை காணக்கிடைக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையம்
இந்த பேரணி குறித்து நாம் யாழ். பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டு வினவியபோது, மே தினத்தன்று பல தொழிற்சங்கள் ஒன்றிணைந்து அனுமதி பெற்று அமைதியான முறையில் நடாத்திய மேதின பேரணியே இது எனவும், இது தையிட்டி விகாரைக்கு எதிராக சிங்கள மக்களினால் நடாத்தப்பட்ட பேராட்டம் அல்லவெனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் தையிட்டி விகாரைக்கு எதிராக சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு பகிரப்படும் காணொளியானது கடந்த மே தினத்தன்று (2025.05.01) இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட கூட்டு மேதினப் பேரணி என்பது தெளிவாகின்றது.
அத்துடன் குறித்த பேரணியில் ஒரேயொருவர் மாத்திரமே தையிட்டு விகாரையை அகற்றுமாறு தெரிவித்த பதாதையை ஏந்தி செல்வதுடன், வேறு எவரும் அது குறித்த பதாதைகளையோ, கோஷங்களையோ எழுப்பவில்லை என்பதுவும் புலனாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:தையிட்டி விகாரைக்கு எதிராக சிங்கள மக்கள் யாழில் போராட்டம் நடத்தினார்களா?
Fact Check By: suji shabeedharanResult: False
