
INTRO :
இலங்கையில் குரங்கு கடித்து சிகிச்சைக்கு மருந்தின்றி சிறுவன் ஒருவர் பலி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” Fack Government #225Gojail
குரங்கு கடிக்கி உளாகி சிறுவன் அமான் வபாத்
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹிர் ராஜியும் …
மருந்து தட்டு பாடு நிலவும் கால கட்டத்தில் இருப்பதால் பிள்ளைகளை கவனமாக பார்த்து கொள்ளும் படி வைத்தியர் ஒருவர் குடும்பதாரிடம் அறிவுறுத்தி உள்ளார் “ என இம் மாதம் 26 ஆம் திகதி (26.06.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குரங்கு கடித்து சிறுவன் பலி என பரவும் வீடியோ என பரவுகின்ற வீடியோ தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த வீடியோவில் சிங்கள மொழியில் பூனை கடித்ததினால் மரணம் என்று மேற்கொள் காட்டி பகிரப்பட்டு வருகின்றமையும் எம்மால் காணக்கிடைத்தது.
சிங்கள மொழியில் பரவுகின்ற குறித்த வீடியோவில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பகிரப்பட்டிருந்தமையினால், நமது குழுவினர் புத்தளம் ஆதார வைத்தியசாலை ஊழியர்களிடம் வினவியபோது, சிறு குழந்தையொன்று இவ்வாறு பூனை கடித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை எனவும், காணொளி காட்சிகளில் காட்டப்பட்டுள்ளவாறு புத்தளம் வைத்தியசாலை அமையவில்லை என தெரிவித்தார்.
இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்துவதற்காக நமது குழுவினர் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திரு.அன்டன் பெர்னாண்டோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவிய போது, மருந்துப் பற்றாக்குறையால் இப்படி ஒரு குழந்தை இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள் உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், புத்தளம் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியொருவரும், இந்தக் குறிப்புகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும், அவ்வாறான சம்பவம் எதுவும் வைத்தியசாலையில் இடம்பெறவில்லை எனவும் முகநூலில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் குழந்தையின் உறவினர் என கூறிக்கொள்ளும் பெண்ணொருவர் இது உண்மைக்கு புறம்பானது எனவும், காணொளியில் உள்ள குழந்தை பள்ளத்தில் விழுந்துள்ளதாகவும் பாணந்துறை வைத்தியசாலை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை நாம் உறுதி செய்துக்கொள்ள அவரை நாம் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு வினவியபோது, இது கடந்த ஜூன் 17 ஆம் திகதி வீட்டில் உள்ள கழிவறை குழியில் விழுந்து உயிரிழந்த ஒரு வயது மற்றும் 6 மாதம் ஆன உறவினர் ஒருவரின் குழந்தை என உறுதி செய்தார்.
மேலும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பொய்யான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி சம்பவம் பாணந்துறை வைத்தியசாலையுடன் தொடர்புடையது என கூறப்பட்டதால்,நாம் குறித்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இது தொடர்பில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை தொடர்புக்கொண்டு வினவினோம்.
பூனை கீறல் காரணமாக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மருந்துப் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.
மேலும் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தையொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் கழிவறை குழிக்குள் விழுந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின்னர், பாணந்துறை வைத்தியசாலை வளாகத்தில் குழந்தை மற்றும் தாயின் காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு தவறான தகவல்களை பகிர்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவும் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
ஜூன் 17ஆம் திகதி பாணந்துறை, பள்ளியமுல்ல பிரதேசத்தில் 01 வயதும் மற்றும் 8 மாத ஆண் குழந்தையொன்று தனது வீட்டின் மலசலகூடத்தில் விழுந்து உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் மேற்கொண்ட தேடலின் போது, குரங்கு கடித்து சிறுவன் பலி என பரவும் வீடியோ என பகிரப்படும் வீடியோ வீட்டின் கழிவறை குழியில் விழுந்து மரணித்த குழந்தையின் வீடியோ என உறுதி செய்யப்படுகிறது.
எமது சிங்களப்பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team