INTRO :
“கேன்சர் என்பது நோயே இல்லை… அது வெறும் வியாபாரமே”என்று சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் செய்தி பகிரப்படுகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Farhana Hadhi என்ற பேஸ்புக் கணக்கில் ” #புற்றுநோய் - #CANCER ) கேன்சர் ஒரு #நோய் என்னும் வார்த்தையே பொய்.

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.

"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள், கேன்சர் என்பது நோய் அல்ல; அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி (Scurvy) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல; வைட்டமின் Cன் குறைபாடு என்பது தெரியவந்தது.

கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல; வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியனில் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில், வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சரை எதிர்த்து போராடக்கூடிய வல்லமை பெற்றது. இதில், வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது.

ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோவிலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது.

DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சரை எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார்.

கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள்:

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.

2. பருப்பு வகைகள்- லென்டில் (மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் (பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் (Mullberries )ல் கருப்பு முசுக்கட்டை, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்- எள் (வெள்ளை & கருப்பு), ஆளி விதை

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி (Brown Rice), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:

அப்ரிகாட்

லிமா பீன்ஸ்

ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )

கோதுமை புல் ( Wheat Grass)

பாதாம்

ராஸ்பெரிஸ்

ஸ்ட்ராபெர்ரி

ப்ளாக்பெரி

ப்ளூபெர்ரி

பக் வீட் ( Buck Wheat )

சோளம்

பார்லி

குதிரைவாலி

முந்திரி

மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts )

முளைகட்டிய பீன்ஸ்

இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid, dishwash liquid-ல் அதிகளவு கேன்சரை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ, உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.

இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.

அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊறவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.

உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்." என கடந்த மாதம் 29 ஆம் திகதி (29.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த தகவல் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

உடலில் மாறுபாடடைந்து அபரிமிதமாக வளர்ச்சி அடையும் செல்களையே புற்றுநோய் என தெரிவிக்கின்றனர். நம்முடைய உடலில் தினமும் ஆயிரக் கணக்கான புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அவற்றை நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுக்க 82 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

நம்முடைய உடலில் முடி, நகம் தவிர்த்து எந்த இடத்தில் வேண்டுமானாலும் எந்த உறுப்பில் வேண்டுமானாலும் புற்றுநோய் ஏற்படலாம். இதில், நுரையீரல், மார்பகம், கர்ப்பப்பை, வாய், செரிமான மண்டலம், சினைப்பை உள்ளிட்ட உறுப்புக்களில் ஏற்படும் புற்றுநோயால் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில், நுரையீரல், வாய் புற்றுநோய் உள்ளிட்டவை தவிர்க்கக் கூடிய புற்றுநோயாக இருக்கின்றன.

இது தொடர்பாக விகடன் இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையினை வாசிக்க இங்கே கிளக் செய்யுங்கள்

முதலில் நாம் குறித்த அனைத்து பதிவேற்றங்களிலும் பொதுவாக தெரிவிக்கப்பட்ட ‘வேர்ல்ட் வித் அவுட் கேன்சர் ‘ என்ற புத்தகத்தை பற்றி ஆய்வு செய்த போது, அது G. Edward Griffin என்பவரால் வெளியிடப்பட்ட புத்தகம் என கண்டறியப்பட்டது.


அதே பதிவில் வைட்டமின் பி17 குறைபாட்டால் புற்றுநோய் ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, மது அருந்துவது, காற்று மாசு, புற ஊதாக் கதிர்வீச்சு என புற்றுநோய் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.

www.bbc.com| Archived Link

பி17 என்பது ஒரு வைட்டமினே இல்லை என்கிறது மருத்துவ உலகம். 1970-களின் இறுதியில் இந்த மருந்தை அமெரிக்காவின் எஃப்.டி.ஏ தடை செய்துவிட்டது.

இந்த மருந்து உடலில் சிதைக்கப்படும்போது, சயனைடாக மாறுகிறது. இது புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்று இந்த வதந்தியைப் பரப்புகின்றவர்கள் சொல்கின்றனர். ஆனால், அந்த மருந்துக்கு நல்ல செல், புற்றுநோய் பாதித்த செல் எது என்று கண்டறிந்து அழிக்கும் திறன் இல்லை. இதனால், நோயாளி உயிரிழப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிறது ஒரு ஆய்வு. ஆய்வு முடிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இது குறித்து எமது இந்திய தமிழ் பிரிவினர் 2019 ஆம் வருடம் நடத்திய ஆய்வு அறிக்கையில், சென்னை குளோபல் மருத்துவமனை, புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் இயக்குநர் டாக்டர் ராஜா சுந்தரத்திடம் கேட்டோம். “புற்றுநோய் வர பல காரணங்கள் உள்ளன. வைட்டமின் பி17 பற்றாக்குறைதான் காரணம் என்று கூறுவது எல்லாம் வெறும் வதந்திதான். இது தொடர்பாக எந்த ஒரு ஆய்வு முடிவும் எங்களுக்கு வரவில்லை. ஆரம்பநிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே புற்றுநோயை வெல்ல முடியும்” என்று எமது குழுவினருக்கு தெரிவித்திருந்தார்.

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய கேன்சர் நோய் குறித்து வெளியாகியுள்ள இந்த கட்டுரை முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வினை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கேன்சர் என்பது நோய் அல்ல; வியாபாரம்: உண்மையா?

Fact Check By: Nelson Mani

Result: False