
INTRO :
ஈரானில் 1500 ஆண்டுகளுக்கு பழமையான பைபிளில் எஸ்தர் சுருள் ஏடு கிடைக்கப்பெற்றதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” Original gold வேதாகம எஸ்தர் புத்தகம் சுருள் வடிவில். 1500வருடம் பழமைவாய்ந்தது. ஈரானில் கண்டுபிடிப்பு. “ என கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி (22.03.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
பரிசுத்த வேதாகமத்தின் எஸ்தர் புத்தக சுருள் என பரவுகின்ற வீடியோவின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.
கிறிஸ்தவர்களின் திருவிவிலியத்தில் பழைய ஏற்பாடு பகுதியில் எஸ்தர் என்ற புத்தகம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. யூதர்களின் புனித நூலாகவும் எஸ்தர் கருதப்படுகிறது. எஸ்தர் கதை பாரசீக நாட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, இன்றைய ஈரான் நாட்டில் நடந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எஸ்தரின் கல்லறை கூட ஈரானில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், எஸ்தர் புத்தகம் ஈரானில் கிடைத்தது என்று கூறப்பட்டதால் உண்மையாக இருக்கலாம் என்று கருதி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றமை காணக்கிடைத்தது.
நாம் முதலில் கூகுளில் எஸ்தர் புத்தகம், 1500 ஆண்டு பழமை, ஈரான் என சில தேடல் வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். ஸ்பெயின் பகுதியில் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எஸ்தர் சுருள் கிடைத்ததாக செய்திகள் கிடைத்தன. ஈரானில் எஸ்தர் உள்ளிட்ட எந்த ஒரு பழமையான பைபிள் புத்தகம் எதுவும் கிடைத்ததாக செய்தி கிடைக்கவில்லை. இதுவரை கிடைத்த மிகப் பழமையான எஸ்தர் புத்தகம் 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று ஒரு செய்தி கூட கிடைத்தது. அதைவிட பழமையான எஸ்தர் புத்தகம் கிடைத்ததாக எந்த செய்தியும் எமக்கு கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் சர்வதேச உண்மை பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஏ.எஃப்.பி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்த ஃபேக்ட் செக் கட்டுரைகள் மட்டுமே நமக்கு கிடைத்தன. ஏ.எஃப்.பி வெளியிட்டிருந்த கட்டுரையில், வீடியோவில் ஒரு நபர் எந்த ஒரு பாதுகாப்புமின்றி சுருளைத் திறக்கிறார். மிகப் பழமையானது என்றால் இப்படி திறக்க முடியாது. மேலும், அதில் உள்ள எழுத்துக்களை வைத்துப் பார்க்கும் போது அது எஸ்தர் புத்தகமாகவோ, 1500 ஆண்டுகளுக்கு முந்தைய முத்தமாகவோ இருக்க வாய்ப்பு இல்லை என்று ஹீப்ரு மொழி அறிஞர்கள் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
நியூயார்க் பல்கலைக் கழகத்தில் உள்ள யூத ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளரும் பேராசிரியரும், இயக்குநருமான லாரன்ஸ் ஷிஃப்மேனிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எஸ்தர் புத்தகம் கிடைத்ததாக கூறப்படுவது உண்மையில்லை. இது போலியானது. ஈரானில் கிடைத்ததாக குறிப்பிடப்படும் சுருளில் இடம் பெற்ற சில எழுத்துக்கள், சின்னங்கள் மிகவும் பிற்காலத்தைச் சார்ந்தவை. சமீப காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பைபிள் தொடர்பான புராதன பொருட்கள் கிடைத்ததாக சில பொருட்களை பலரும் விற்பனைக்கு வைக்கின்றனர். ஒன்றும் அறியாதவர்களை ஏமாற்றலாம், யூதம், ஹீப்ருவை அறிந்தவர்கள் ஏமாற மாட்டார்கள்” என்று கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், ஈரானில் 1500 ஆண்டுகள் பழமையான பைபிள் எஸ்தர் சுருள் கிடைத்துள்ளதாக பகிரப்படும் வீடியோ போலியானது என உறுதி செய்யப்படுகிறது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஈரானில் 1500 ஆண்டுகள் பழமையான பைபிள் எஸ்தர் சுருள் கிடைத்ததா?
Fact Check By: S G prabuResult: False

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team