
இலங்கையில் திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேஸ்வர கோவிலின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Rrpestcontrol Raja என்ற பேஸ்புக் கணக்கில் ”இது ஸ்ரீலங்காவின் திருகோனமலையில் உள்ள கொனேஸ்வரம் கோவில். இந்த கோயில் ராவணனால் கட்டப்பட்டது. பெரிதாக்கி, கோவிலின் நுழைவாயிலைப் பார்க்கவும்…
இது ஆச்சரியமாக பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கிறது…
பாறை மீது கோயில் எவ்வாறு கட்டப்பட்டது என்று யோசித்துப் பாருங்கள்…
சிவ சிவ சிவ சிவ சிவ ” என்று கடந்த 8 ஆம் திகதி (08.02.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள முதலில் குறித்த செய்தி புகைப்படங்களை Google Reverse Image Tool-ஐ பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

மேற்கொண்ட தேடுதலில் குறித்த புகைப்படமானது தாய்லாந்தில் உள்ள காவோ பிங் கான் (Khao Phing Kan) என்ற தீவு என்று காணக்கிடைத்தது.
குறித்த தீவின் புகைப்படத்தினை எடுத்து Photoshop மூலம் கோவில் மற்றும் பக்தர்கள் இருப்பது போன்று வடிவமைத்துள்ளனர்.
மேலும் அந்த மலை குன்றின் மேல் பகுதியை குடைந்து படிக்கற்கள் அமைக்கப்பட்டுள்ளதுபோல எடிட்டிங் செய்துள்ளனர்.

குறித்த புகைப்படத்தின் கீழ் பதியப்பட்டுள்ள கமெண்டுக்களை வாசித்த வேளையில் பலரும் இதை உண்மையென நம்பி ஏமாற்றம் அடைந்திருப்பதாக உணர்ந்தோம்.
இலங்கையில் திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேஸ்வர கோவிலின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்த புகைப்படங்களை நாம் ஆய்வு செய்த வேளையில் அது முற்றிலும் வேறொன்றாக இருந்தது.

மேலும் இலங்கையின் அரச பத்திரிக்கை நிறுவனமாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் சிங்கள பிரிவினர் திருகோணேஸ்வர கோயிலை பற்றி மேற்கொண்ட ஆய்வு வீடியோவில் குறித்த இடம் இருப்பதற்கான எவ்வித தடயமும் காணப்படவில்லை.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இலங்கையில் உள்ள திருகோணேஸ்வர ஆலயத்தின் புகைப்படம் எனக் கூறப்படுவது தவறான தகவல் என்று உறுதியாகிறது.

Title:இலங்கையில் உள்ள திருகோணேஸ்வர ஆலயத்தின் புகைப்படம் இதுவா?
Fact Check By: Nelson ManiResult: False