இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் வலுப்பெற்று வரும் நிலையில் தற்போது இந்த போர் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது.
அந்தவகையில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடந்தியதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எனவே இது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் மொசாத் உலகத்தின் சக்தி வாய்ந்த உளவுப் பிரிவு.
அயன்டோம் உலகத்தின் சக்தி வாய்ந்த வான் பாதுகாப்பு கவசம்.
நிலத்திருடர்கள் இத்தனை நாட்கள் கூறி வந்த பொய்யை உடைத்து தள்ளி உள்ளது. #ஈரான்
#அல்லாஹ்_மிகப்_பெரியவன். என தெரிவிக்கப்பட்டு அந்த புகைப்படமானது கடந்த 2025.06.16 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Claim – 2
ஈரான் தயவுசெய்து எங்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்… பாதி இஸ்ரேல் அழிந்துவிட்டது.. நாங்கள் சரணடைகிறோம்..!! எங்களை அழிக்காதீர்கள்.
என்று சொல்லும் நீங்கள் இத்தனை காலம் எங்கே செறீர்கள்? என தெரிவித்து குறித்த காணொளியானது கடந்த 2025.06.16 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இவற்றின் உண்மை அறியாத பலரும் குறித்த புகைப்படம் மற்றும் காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே இரு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் தலைமையகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மேற்குறிப்பிட்ட புகைப்படத்துடனான ஏதேனும் செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.
இருப்பினும் மொசாட் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இஸ்ரேல் அதனை மறுப்பதாக தெரிவிக்கப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளமையை எம்மால் காணமுடிந்தது. Link
மேலும் ஈரான் செய்தி இணையதளமான Tehran Times இல் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தியிலும் மொசாட் மீதான தாக்குதல் குறித்த உறுதியான முடிவுகள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன் குறித்த செய்தியிலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படமானது வெளியடப்பட்டிருக்கவில்லை என்பதுடன் இந்த செய்தியானது நேற்றை தினமே (2025.06.17) வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த சமூக ஊடகப் பதிவில் பகிரப்பட்ட புகைப்படமானது கடந்த 2025.06.16 ஆம் திகதியே பகிரப்பட்டிருந்தது.
மேலும் இந்த புகைப்படத்தினை நன்கு அவதானித்த போது அதில் கட்டிடம் முழுவதுமாக எரிந்த நிலையில் காணப்படுகின்றது இருப்பினும் இஸ்ரேல் நாட்டு கொடி மற்றும் மொசாட்டின் பெயருக்கு எந்த சிதைவுகளும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதனையும் அவதானிக்க முடிந்தது.
அத்துடன் மொசாட் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் MOSSAD என்று எழுதுவார்கள். ஆனால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தில் ஒரு ”S” இல்லாமல் Mosad என்று எழுதப்பட்டிருந்தது. எனவே, இந்த புகைப்படம் உண்மையானதாக இருக்காது என்பதனை அறியமுடிந்தது.
எனவே இதனை உறுதி செய்யும் விதமாக மொசாட் இணையதளத்தில் நாம் ஆய்வுசெய்த போது அதில் Mossad என்றே இருந்தது. அவ்வளவு பெரிய உளவு அமைப்பு எழுத்துப்பிழையுடன் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த புகைப்படமானது எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட ஒன்று என்பது தெளிவானது.
மொசாட் தலைமையக கட்டிடத்தின் புகைப்படத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தினை இணைத்து ஆய்வு செய்வதற்காக நாம் மொசாட் தலைமையகத்தின் புகைப்படத்தினை Google Search இல் தேடிய போது அதன் புகைப்படம் நமக்குக் கிடைக்கவில்லை. மிகவும் பாதுகாப்பாக அந்த பகுதி இருப்பதால் மொசாட் அலுவலக புகைப்படம் கூட ஊடகங்களில் வெளியாகவில்லை. மேலும் Google Map இல் காட்டப்படம் அதன் புகைப்படத்தை மாத்திரம் வைத்தே ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து பகிரப்படும் புகைப்படம் தவறானது என்பதுடன் அந்த புகைப்படமானது எடிட் செய்து உருவாக்கப்பட்ட ஒன்று என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
Claim – 2
தங்களை விட்டுவிடுமாறு இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் ஈரானிடம் அழுதுகொண்டும் கெஞ்சுவதை காட்டும் காணொளி தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
இதன்போது குறித்த காணொளி தொடர்பான ஏதேனும் செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை
எனவே குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்ட சில சமூக ஊடக பதிவுகளை எம்மால் பார்க்க கூடியதாக இருந்தது.
எனவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த காணொளியும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக, நாம் குறித்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
இதன்போது குறித்த காணொளியானது செயற்கை நுண்ணறி தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பது உறுதியானது.
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் தங்களை விட்டுவிடுமாறு இஸ்ரேல் இராணுவ வீரர் ஈரானிடம் கெஞ்சுவது போல் பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன் குறித்த காணொளியானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இஸ்ரேல் – ஈரான் போர் தொடர்பில் பகிரப்படும் காணொளி மற்றும் புகைப்படம் உண்மையானவையா?
Written By: Suji ShabeedhranResult: False
