INTRO :
இலங்கையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ள தாமரை கோபுரத்திற்கான நுழைவு சீட்டில் தமிழ் மொழி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக சீன மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ”பெரும்பாலான தமிழனுக்கு சிங்களமும் தெரியும் ஆங்கிலமும் தொரியும் அதுனால இதுல தமிழ் இல்லனு கவல பட தேவையில்ல… பாவம் சிங்களவனுங்களுக்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது போல அதான் சிங்கள மொழியிலும் இருக்கு… இது நமக்கான கௌரவம்தான்…

பல மொழிகள் தொரிந்த திமிரோடு தமிழன்… எங்க…
ஒரு மொழியை மட்டும் தூக்கிப்பிடிக்கும் இவன் எங்க…

அப்போ சைனா பாக்ஷ…?
அவன் நல்லா கொடுத்துட்டு போவான் பொருத்திருந்து பார்… “ என இம் மாதம் 14 ஆம் திகதி (14.09.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த பதிவிலிருந்த டிக்கெட்டில் பதியப்பட்டிருந்த QR குறியீட்டினை ஆய்வு செய்த போது அது Sri Lanka Fuel என்ற சொல் மட்டுமே எமக்கு காட்டப்பட்டது. அதற்கமைய இது போலியாக தயாரிக்கப்பட்ட டிக்கெட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் எமக்கு வலு பெற்றது.

இது தொடர்பாக, நாம் தாமரை கோபுரத்தின் தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி (ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்) பிரசாத் சமரசிங்கவிடம் விசாரணை செய்தோம்.

சமூக ஊடகங்களில் இத்தகைய போலியாக திருத்தப்பட்ட டிக்கெட் படம் பரிமாற்றம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனப் பிரஜைகளுக்கு மாத்திரம் தாமரை கோபுரத்தைப் பார்வையிடுவதற்கு விசேட சலுகை கிடையாது எனவும் வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஒரே விலையே (USD 20) அறவிடப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், நுழைவுச் சீட்டுகள் ஆங்கிலத்தில் மாத்திரமே அச்சிடப்பட்டுள்ளதாக பிரசாத் சமரசிங்க எமக்கு தெரிவித்தார்.

எங்கள் வேண்டுகோளின்படி அவர் எங்களுக்கு அனுப்பிய உண்மையான டிக்கெட்டுகளின் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

2000 ரூபாய் டிக்கெட்டை இணைய வழி மூலம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த சில வாரங்களில் தேவையான தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்ததன் பின்னர் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உத்தியோகபூர்வ பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தாமரை கோபுரத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் மேற்குறிப்பிட்ட விலையில் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளின் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையில் உள்ள சீன தூதரகமும் அவர்களின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் தவறானது என தெரிவித்துள்ளது.

அத்துடன், சமூக வலைத்தளங்கள் ஊடாக பரிமாறப்படுவது நுழைவுச்சீட்டானது போலியானது என சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ஹரின் பெர்னாண்டோ எமது விசாரணையின் போது எமக்கு தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தப் போலிச் சீட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், டுவிட் பதிவொன்றில், தாமரை கோபுரம் அவர்களின் அதிகாரத்தின் கீழ் இல்லை என்றும், The Lotus Tower Management Company Pvt Ltd நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், போலிச் சீட்டில் காட்டப்பட்டுள்ளபடி தாமரை கோபுரத்தைப் பார்வையிடுவதற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அனுமதிச் சீட்டுகளை வழங்கவில்லை என்பதுடன், எதிர்வரும் காலங்களில் எந்தவொரு நுழைவு சீட்டையும் வழங்காது என தெரிவித்துள்ளது.

இதற்கமைய தாமரை கோபுரத்திற்கான நுழைவு சீட்டில் தமிழ் மொழி மறுக்கப்பட்டுள்ளது என பகிரப்படும் புகைப்படம் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:தாமரை கோபுரத்திற்கான நுழைவுச் சீட்டில் தமிழ் மொழி மறுக்கப்பட்டதா?

Fact Check By: S G Prabu

Result: Misleading