
INTRO :
கலெக்டர் ராணி சோயாமோய் தொடர்பாக கதையொன்று சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை…?
மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார்.
கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை.
பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், அவர் முகத்தில் பவுடர் கூட பயன்படுத்தவில்லை.
பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. அவர் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசினார், ஆனால் அவருடைய வார்த்தைகள் உறுதியுடன் இருந்தன.
அப்போது குழந்தைகள் கலெக்டரிடம் சில கேள்விகளை கேட்டனர்.
கே: உங்கள் பெயர் என்ன?
என் பெயர் ராணி. சோயாமோய் என்பது எனது குடும்பப் பெயர். நான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவள்.
வேறு ஏதாவது கேட்க வேண்டுமா?
ஒரு மெல்லிய பெண் பார்வையாளர்களிடமிருந்து எழுந்து நின்றாள்.
கேள், குழந்தை…
“மேடம், ஏன் முகத்துக்கு மேக்கப் போடக்கூடாது?”
கலெக்டரின் முகம் சட்டென்று வெளிறியது. மெல்லிய நெற்றியில் வியர்வை வழிந்தது. அவர் முகத்தில் புன்னகை மறைந்தது. பார்வையாளர்கள் திடீரென அமைதியானார்கள்.
மேஜை மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து கொஞ்சம் குடித்தார். பிறகு குழந்தையை உட்காருமாறு சைகை செய்தார். பிறகு மெதுவாக பேச ஆரம்பித்தார்.
குழந்தை குழப்பமான கேள்வியைக் கேட்டது. இது ஒரு வார்த்தையில் பதில் சொல்ல முடியாத ஒன்று. அதற்குப் பதில் என் வாழ்க்கைக் கதையைச் சொல்ல வேண்டும். என்னுடைய கதைக்காக உங்கள் பொன்னான பத்து நிமிடங்களை ஒதுக்க நீங்கள் தயாராக இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.
தயார்…
நான் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் பிறந்தேன்.
கலெக்டர் சற்று நிதானித்து பார்வையாளர்களை பார்த்தார்.
“மைக்கா” சுரங்கங்கள் நிறைந்த கோடெர்மா மாவட்டத்தின் பழங்குடியினர் பகுதியில் ஒரு சிறிய குடிசையில் பிறந்தேன். என் அப்பாவும் அம்மாவும் சுரங்கத் தொழிலாளர்கள். எனக்கு மேலே இரண்டு சகோதரர்களும் கீழே ஒரு சகோதரியும் இருந்தனர். மழை பெய்தால் கசியும் ஒரு சிறிய குடிசையில் நாங்கள் வாழ்ந்தோம்.
வேறு வேலை கிடைக்காததால் எனது பெற்றோர் சொற்ப கூலிக்கு சுரங்கத்தில் வேலை செய்தனர். அது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது.
எனக்கு நான்கு வயதாக இருக்கும் போது, என் அப்பா, அம்மா மற்றும் இரண்டு சகோதரர்கள் பல்வேறு நோய்களால் படுத்த படுக்கையாக இருந்தனர். சுரங்கங்களில் உள்ள கொடிய மைக்கா தூசியை சுவாசிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது. எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, என் சகோதரர்கள் நோயால் இறந்துவிட்டனர்.
ஒரு சிறு பெருமூச்சுடன் கலெக்டர் பேச்சை நிறுத்திவிட்டு கண்ணீரை துடைத்தார்.
பெரும்பாலான நாட்களில் எங்கள் உணவில் தண்ணீர் மற்றும் ஒன்று அல்லது இரண்டு ரொட்டிகள் தான். எனது சகோதரர்கள் இருவரும் கடுமையான நோய் மற்றும் பட்டினியால் இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டனர். என் கிராமத்தில் பள்ளிக்கூடம் என்று ஒன்று இல்லை. பள்ளிக்கூடம், மருத்துவமனை அல்லது கழிவறை கூட இல்லாத கிராமத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? மின்சாரம் இல்லாவிட்டாலும்? .
ஒரு நாள் நான் பசியுடன் இருந்தபோது, என் தந்தை என்னை, இரும்புத் தாள்களால் மூடப்பட்ட ஒரு பெரிய சுரங்கத்திற்கு இழுத்துச் சென்றார்.
அது புகழ் பெற்ற மைக்கா சுரங்கம்.
இது ஒரு பழங்கால சுரங்கம். கீழே உள்ள சிறிய குகைகள் வழியாக ஊர்ந்து சென்று மைக்கா தாதுக்களை சேகரிப்பது எனது வேலை. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இது சாத்தியமாக இருந்தது. என் வாழ்நாளில் முதல்முறையாக ரொட்டி சாப்பிட்டு வயிறு நிரம்பினேன். ஆனால் அன்று நான் வாந்தி எடுத்தேன்.
நான் ஒன்றாம் வகுப்பு படிக்க வேண்டிய வயதில் நான் விஷ தூசியை சுவாசிக்கக்கூடிய இருட்டு அறைகளில் மைக்காவை முகர்ந்து கொண்டிருந்தேன்.
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உழைத்தால் ஒரு ரொட்டியாவது கிடைக்கும். பசி மற்றும் பட்டினியால் நான் ஒவ்வொரு நாளும் மெலிந்து நீரிழப்புடன் இருந்தேன். ஒரு வருடம் கழித்து என் சகோதரியும் சுரங்கத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். கொஞ்சம் நல்லா வந்தவுடனே அப்பா, அம்மா, அக்கா மூவரும் சேர்ந்து உழைத்து பசியில்லாமல் வாழலாம் என்ற நிலைக்கு வந்தோம்.
ஆனால் விதி வேறொரு வடிவில் நம்மை ஆட்கொள்ளத் தொடங்கியது. ஒரு நாள் கடும் காய்ச்சலால் வேலைக்குப் போகாமல் இருந்தபோது திடீரென மழை பெய்தது. சுரங்கத்தின் அடிவாரத்தில் தொழிலாளர்கள் முன்னிலையில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். அவர்களில் என் அப்பா, அம்மா மற்றும் சகோதரி.
அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழியத் தொடங்கியது . பார்வையாளர்கள் அனைவரும் மூச்சு விடக்கூட மறந்தனர். பலரது கண்களும் கண்ணீரால் நிரம்பி வழிந்தது.
எனக்கு ஆறு வயதுதான் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இறுதியில் அரசு அகத்தி மந்திர் வந்தடைந்தேன். அங்கு நான் படித்தேன். என் கிராமத்தில் இருந்து முதலில் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டவள் நான். இறுதியாக இதோ உங்கள் முன் கலெக்டர்.
இதற்கும் நான் மேக்கப் பயன்படுத்தாததற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம்.
பார்வையாளர்களை பார்த்துக்கொண்டே அவர் தொடர்ந்தாள்.
அந்த நாட்களில் இருளில் ஊர்ந்து நான் சேகரித்த மைக்கா முழுவதையும் ஒப்பனை பொருட்களில் பயன்படுத்துவதை அப்போதுதான் உணர்ந்தேன். மைக்கா என்பது ஃப்ளோரசன்ட் சிலிக்கேட் கனிமத்தின் முதல் வகை.
பல பெரிய அழகுசாதன நிறுவனங்கள் வழங்கும் மினரல் மேக்கப்களில், 20,000 இளம் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்து உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும் பல வண்ண மைக்காக்கள் மிகவும் வண்ணமயமானவை. ரோஜாவின் மென்மை உங்கள் கன்னங்களில் பரவுகிறது, அவற்றின் எரிந்த கனவுகள், அவர்களின் சிதைந்த வாழ்க்கை மற்றும் பாறைகளுக்கு இடையில் நசுக்கப்பட்ட அவர்களின் சதை மற்றும் இரத்தம்.
மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள மைக்கா இன்னும் சுரங்கங்களில் இருந்து குழந்தை கைகளால் எடுக்கப்படுகிறது. நம் அழகை அதிகரிக்க.
இப்போது நீங்கள் சொல்லுங்கள்.
நான் முகத்தில் எப்படி மேக்கப் போடுவது?. பட்டினியால் இறந்த என் சகோதரர்களின் நினைவாக நான் எப்படி வயிறு நிரம்ப சாப்பிட முடியும்? எப்பொழுதும் கிழிந்த ஆடைகளை அணிந்திருக்கும் என் அம்மாவின் நினைவாக நான் எப்படி விலை உயர்ந்த பட்டு ஆடைகளை அணிவது?.
வாய் திறக்காமல் தலையை உயர்த்தி, சிறு புன்னகையுடன் அவள் வெளியே சென்றபோது பார்வையாளர்கள் அனைவரும் அறியாமல் எழுந்து நின்றனர். அவர்கள் முகத்தில் இருந்த மேக்கப் அவர்கள் கண்களில் இருந்து வழியும் சூடான கண்ணீரில் நனைய ஆரம்பித்தது.
ஃபேஸ் பவுடர், க்ரீம், லிப்ஸ்டிக் நிறைந்த பெண்களைப் பார்த்து சிலர் வெறுப்படைந்தால் அவர்களைக் குறை சொல்லாதீர்கள். அதிக தரமான மைக்கா இன்றும் ஜார்க்கண்டில் வெட்டப்படுகிறது. 20,000க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் அங்கு வேலை செய்கின்றனர். சிலர் நிலச்சரிவாலும், சிலர் நோயாலும் புதையுண்டுள்ளனர்.
மலையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
படித்ததில் பிடித்தது. “ என கடந்த மாதம் 28 ஆம் திகதி (28.01.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நமது குழுவினர் முதலில் பகிரப்படும் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, மலப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே 2016 ஆம் வருடத்தில் நடந்த வெடி சம்பவம் தொடர்பான செய்தியில் இந்த பெண்மணியின் படத்தை மலையாள மனோரமா பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டது.
குறித்த வீடியோவில் மலையாள மனோரமா செய்தி பகிரப்படும் புகைப்படத்தினை முகப்பு படமாக பயன்படுத்தியிருந்தமை காணக்கிடைத்தது.
நாம் இது குறித்து மேலும் மேற்கொண்ட ஆய்வின் போது, மலையாள மனோரமா வெளியிட்டிருந்த மலையாள செய்தியை மொழி பெயர்ப்பு செய்து பார்த்த போது படத்தில் இருப்பது அப்போது மலப்புரம் மாவட்ட கலெக்டராக இருந்த சைனாமோல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த மலப்புரம் மாவட்ட கலெக்டராக இருந்த சைனாமோல் தொடர்பாக மேற்கொண்ட தேடலின் போது, அவர் பெயர் சைனாமோல் என்றும், அவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் என்றும், அவரது ஒரு சகோதரி ஐஏஎஸ் அதிகாரியாகவும் சகோதரர் ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருப்பது தெரிந்தது. இதன் மூலம் படத்தில் இருப்பவர் ராணி சோயாமோய் இல்லை என்பது எமக்கு உறுதியானது.

ராணி சோயாமோய் என்று ஐஏஎஸ் அதிகாரி தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் நடத்திய ஆய்வில் அவ்வாறான ஒருவர் இருப்பதற்கான எவ்விதமாக ஆதரமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் வாசிக்க
இது தொடர்பாக எமது மலையாள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி ஒரு சிறுக்கதை தொகுப்பினை யாரோ தவறாகப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
ஹக்கீம் மெரயூர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய கதையை, உண்மையான ஐஏஎஸ் அதிகாரியின் படத்தை வைத்து தவறாக பகிர்ந்து வருவது குறித்து வேதனை பதிவை வெளியிட்டிருந்தார். அதையும் அந்த கட்டுரையில் இணைத்திருந்தமை காணக்கிடைத்தது.
எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் ஏன் மேக்கப் போடவில்லை என பகிரப்படும் கதையில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் ஏன் மேக்கப் போடவில்லை; பரவும் கதை உண்மையா?
Fact Check By: S G PrabuResult: False

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team