
சுமந்திரன் நாடகமாடுவதை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக, ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Thalam News என்ற பேஸ்புக் கணக்கில் ” றனில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதற்காக சுமந்திரன் நாடாகமாடுவதை நிறுத்த வேண்டும் – தலைவர் ரவூப் ஹக்கீம்.
எமது சமூகத்தின் பிரச்சினைகளை நாம் பார்த்துக் கொள்கிறோம்
தேவை இல்லாமல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் வட கிழக்கு முஸ்லீம்களின் வாக்குகளை கவர்வதற்காகவும், றனில் விக்கிரமசிங்க அவர்களை பலப்படுத்துவதற்காகவும் நாடகமாட தேவையில்லை
தமிழ் கூட்டமைப்பானது சஜித் பிரேமதாச அவர்களின் வேண்டுகோளையும் ஏற்காமல் அன்றைய பிரதமரின் கூட்டத்துக்கு சமூகமளித்தபோதே அவர்களின் நரித் தந்திர அரசியலை நாம் தெரிந்து கொண்டோம்
இது முழுக்க முழுக்க றனில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதற்கான கொந்தராத்தே அன்றி வேறில்லை
முஸ்லிம்களின் பிரச்சினைகளை எமது பேரியக்கமான ஸ்ரீ லங்க முஸ்லீம் காங்கிரஸ் மாத்திரமே தீர்த்து வைக்கும், மாறாக படம் காட்டும் அரசியல் சித்து விளையாட்டுக்களால் முஸ்லீம் சமூகத்தின் வாக்குகளை சூறையாட யாருக்கும் இடம் வழங்கப்படாது.
முஸ்லீம் ஜனாஸா எரிப்பு தொடர்பாக தேர்தல் முடிந்த கையோடு நாம் ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம், அதனுடாகவே இந்த சர்வாதிகார அரசின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.
சுமந்திரன் நீதிமன்றம் செல்ல எடுத்திருக்கும் முயற்சியானது றனில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதற்காகவும், சஜித் பிரேமதாசவை பலம் இழக்கச் செய்வதற்காகவும் தீட்டப்பட்டிருக்கும் திட்டமேயன்றி வேறு எதுவுமல்ல
சுமந்திரனின் இந்த நரித்தந்திர அரசியலுக்குள் முஸ்லீம் சமூகம் சிக்குண்டு சிதறிப் போகாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
-ரவூப் ஹக்கீம்” என்று இம் மாதம் 4 ஆம் திகதி (04.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் கட்டணமின்றி ஆஜராகுவதற்கு, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இணக்கம் தெரிவித்துள்ளாதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குறித்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று விமர்ச்சித்தாக பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்து செய்தி அனைத்தும் போலியானது என்று ரவூப் ஹக்கீம் தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும், ஜனாஸா விவகாரத்தை ஆரம்பத்தில் கையிலெடுத்தவர்கள் என்ற அடிப்படையில் நாங்களும் நீதிமன்றத்தில் நியாயம் கேட்கவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சுமந்திரன் நாடாகமாடுவதை நிறுத்த வேண்டும் என்று அவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரவித்ததாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சுமந்திரன் நாடகமாடுவதை நிறுத்த வேண்டும் என்று அவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரவித்ததாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Title:சுமந்திரன் நாடகமாடுவதை நிறுத்த வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் கூறினாரா?
Fact Check By: Nelson ManiResult: False