INTRO:
வேழமாலிகிதன் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கைதாகினார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூக வலைத்தளங்களில் “ நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் சென்ற சிறிதரனின் வலது கையான வேழமாலிகிதன் மற்றும் அவரது சகாவான சேதுபதி ஆகியோர் மது போதையில் கைதாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த இருவரும் சிறிதரனின் அரசியல் செல்வாக்கில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பலர் கைது செய்யப்பட்டு 25,000 ரூபா குற்றமும், 3 மாத சாரதி அனுமதிப்பத்திரம் இரத்தாகும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், இவர்களை விடுவிப்பது மிகப்பெரிய ஊழல் ஆகும்.
இதற்காக பொலிஸ் நிலைய போக்குவரத்து தரப்பினரும் ஊழலில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
வேழமாலிகிதன் என்பவர் கரைச்சி பிரதேச சபை தவிசாளராக இருந்த போது, போராளி குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் காணி பிரச்சினையை தீர்க்க கொத்து ரொட்டியுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவர் மீதான அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
வேழமாலிகிதன் அவர்களே உமக்கு வெட்கம் இல்லையா???.”இம் கடந்த மாதம் 21 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (21.02.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூகவலைத்தளங்களில் பரவுகின்ற குறித்த தகவல் தொடர்பாக பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றனவா என ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான எவ்விதமான செய்திகளும் எமக்கு கிடைக்கபெறவில்லை.
பொலிஸ் தலைமை காரியாலயம்
நாம் குறித்த சம்பவம் தொடர்பாக உண்மையினை கண்டறிய பொலிஸ் தலைமை காரியாலத்தின் ஊடகப்பிரிவினை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவ்வாறான சம்பவங்கள் எதுவும் தமக்கு பதிவாகவில்லை என தெரிவித்தனர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையம்
மேலும் இது தொடர்பாக தகவலினை பெற நாம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தொடர்புக்கொண்டு வினவியபோது, அவ்வாறான எவ்விதமான சம்பவமும் தமக்கு பதிவாகவில்லை எனவும், குறித்த போலியான தகவல் தொடர்பாக வேலமகிழிதன் என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எமக்கு தெரிவித்தனர்.
கிளிநொச்சி பிரதேச ஊடகவியலாளர்
நாம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர் சிலரை தொடர்புக்கொண்டு வினவியபோது, சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை போன்ற சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என எமக்கு தெரிவித்தனர்.
வேழமாலிகிதன் கருத்து
நாம் வேழமாலிகிதனை தொடர்புக்கொண்டு வினவியபோது, அது முற்றிலும் போலியான தகவல் என்றும் அது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் குறித்த போலியான தகவல் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளித்த பின்னர், அது தொடர்பாக ஒரு காணொளியினையும் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளமையும் காணக்கிடைத்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், வேழமாலிகிதனை மதுபோதையில் கைது செய்ததாக பரவுகின்ற தகவல் முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team