இந்தியா - கனடா இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், கனடாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

ஊடகங்களிடம் ஒருவர் பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், "WSO உடன் இணைந்து இன்று நாங்கள் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் அதன் நிர்வாகிகளை கனடாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறுகிறார்.

நிலைத் தகவலில், 'கனடா நாட்டில் RSS தடைசெய்யப்பட்டது.…' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை முஹம்மது ஜலீல் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா - கனடா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக கனடா குற்றச்சாட்டுக்களை முன் வைத்தது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் முன்னணி வெளியுறவுத் துறை அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியே கெடுவிதித்தன. இந்த சூழலில் கனடாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது என்று ஒரு வீடியோவை சிலர் பரப்பி வருகின்றனர்.

வீடியோவில் உள்ள நபர் யார், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கான ஆதாரம் என எதையும் அளிக்காமல் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் பேசும் நபர் உடனடியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார். இதைத் தவறாகத் தடை செய்யப்பட்டது என்று பரப்பியிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த வீடியோ பதிவு பற்றி ஆய்வு செய்தோம். முதலில் கனடாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. தடை செய்ய கோரிக்கை என்றே செய்திகள் கிடைத்தன. சமூக ஊடக பக்கங்களில் தேடிய போது, National Council of Canadian Muslims என்ற அமைப்பு ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்ய கோரிக்கை என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பதிவிட்டிருந்தன.

அதன் அடிப்படையில் கூகுளில் தேடிய போது, நேஷனல் கவுன்சில் ஆஃப் கெனடியன் முஸ்லிம்ஸ் என்பது கட்சி சார்பில்லாத, சுயாதீனமான, லாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கனடாவில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்வு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தக் குரல் கொடுக்கும் அமைப்பு என்றும் கூறியிருந்தனர். இது அரசுத் துறை இல்லை, தன்னார்வ நிறுவனம் ஆகும்.

தொடர்ந்து தேடிய போது அந்த அமைப்பின் சிஇஓ-வாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருக்கும் நபர் இருப்பது தெரிந்தது. மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கனடா நாட்டு ஊடகங்களுக்கு அவர் பேட்டி அளித்திருப்பதும் நமக்குக் கிடைத்தது.

Archive

இவை எல்லாம் நேஷனல் கவுன்சில் ஆஃப் கனேடியன் முஸ்லிம்ஸ் என்ற அமைப்பு விடுத்த கோரிக்கையைத் தவறாகப் புரிந்துகொண்டு, கனடா நாட்டு அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதித்துவிட்டது போன்று தவறான தகவல் பகிரப்பட்டிருப்பதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு கனடாவில் தடை விதிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கனடாவில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதா?

Written By: Fact Crescendo Team

Result: Misleading