INTRO
சமீப காலமாக நாட்டில் கலாநிதி பட்டம் தொடர்பில் பாரிய கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கலாநிதி பட்டம் தொடர்பிலும் பேசப்பட்டு வருகின்றது.
எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விபரம் (what is the claim)
குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பணிவான குணம் காரணமாக அவரின் பெயருக்கு முன்னாள் கலாநிதி என பயன்படுத்துவதில்லை என தெரிவிக்கப்பட்டு 2024.12.13 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இது தொடர்பான பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
தெளிவுபடுத்தல்
பல வருடங்கள் அரசியல் அனுபவங்களை கொண்ட இலங்கை அரசியல்வாதிகளில் ரணில் விகரமசிங்கவும் ஒருவர் என்றே கூறவேண்டும். இவர் அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதுடன் திறமையான அரசியல்வாதியாகவும் பார்க்கப்பட்டார்.
உயர்கல்வி தகைமைகள் உள்ளிட்ட பல கல்வித் தகைமைகளை அவர் கொண்டிருந்தாலும் அவரின் பெயருடன் தொழில் தகைமைப் பெயரையோ அல்லது கல்விப் பட்டங்களையோ பயன்படுத்திக் கொள்வதில்லை அத்துடன் தனது அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டு மாத்திரமே அவர் அழைக்கப்பட்டார்.
இது குறித்து நாம் பாராளுமன்ற இணையத்தளத்தில் ஆராய்ந்த போது அவரின் பெயர் கௌரவ ரணில் விக்ரமசிங்க என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அவர் தொழில் ரீதியாக சட்டத்தரணி என்று பாராளுமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவரின் கல்வித் தகைமையாக சட்டப் பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாராளுமன்ற இணையத்தளத்தில் அவரின் கலாநிதி பட்டம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ரணில் விகரமசிங்கவின் கலாநிதி பட்டம்
ரணில் விக்ரமசிங்கவின் கலாநிதி பட்டம் தொடரபில் நாம் ஆய்வு செய்த போது 2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்தினால் அவருக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறியக்கிடைத்தது.
அது தொடர்பில் பல ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தமையை காணக்கிடைத்தது. Link | Link
குறித்த செய்திகளின் படி வன்முறை, முரண்பாடுகளில் இருந்து நிலையான ஜனநாயகத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்லும், அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை கெளரவிக்கும் வகையிலேயே அவுஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்தினால் (Deakin University) ரணில் விக்ரமசிங்கவிற்கு கௌரவ கலாநிதி பட்டம் (Honorary Doctorate in Law) வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு 14 ஆம் திகதி, டீகின் பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி ஜோன் ஸ்டான்ஹோப் (Prof. John Stanhope) இந்த கௌரவ கலாநிதி பட்டத்தை அவருக்கு வழங்கினார்.
இலங்கையின் பெயரை சர்வதேச ரீதியில் உயர்த்துதல், சர்வதேச சமூகத்திடம் இருந்து நிதியுதவி பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்தல், நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு போன்றவையும் இந்த கௌரவ கலாநிதி பட்டம் வழங்குவதற்கு கவனத்தில் கொள்ளப்பட்டன என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜேன் டென் ஹாலண்டர் (Prof. Jane Den Hollander) தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தை ஆராய்ந்த போது அதில் ரணில் விக்ரமசிங்கவிற்கு அந்த பல்கலைக்கழகம் 2017 இல் வழங்கிய கலாநிதி பட்டம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட விடயம் என்னவெனில், இந்த பட்டம் பெற்றதன் பின்னர், குறித்த கலாநிதி பட்டத்தை தனது உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட பணிகளுக்காக ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என ரணில் விக்ரமசிங்கவினால் அப்போதைய பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர் தன்னிடமுள்ள பெருந்தன்மையான குணத்தை பிரதிபலிக்கும் வகையில் கலாநிதி பட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியதாக பலர் கருதினர்.
ஆனால் உண்மையில், ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்த கலாநிதி பட்டத்தை அவர் தனது இயல்பான வாழ்க்கையில் தனது பெயருக்கு முன்னாள் பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.
டீக்கின் பல்கலைக்கழகம் கெளரவ பட்டங்கள் தொடர்பில் குறிப்பிடுவது என்ன?
அவுஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் அவர்களால் வழங்கப்படும் கெளரவப் பட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதுடன், கலாநிதி பட்டமானது அவுஸ்திரேலிய தகுதிக் கட்டமைப்பின் (AQF) ஒரு பகுதியாக இல்லை என்றும் அது ஒரு கெளரவ விருதாக மட்டுமே வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழகத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த கௌரவப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், கெளரவ கலாநிதி பட்டங்களுக்கான விருது பெற்றவரின் கலாநிதி பட்டம் டீகின் பல்கலைக்கழகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதை வெளி சமூகத்தில் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல்கலைக்கழகத்திற்கு வெளியே அங்கீகரிக்கப்பட்ட முறையான கல்வித் தகைமை அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விபரங்களை பார்வையிட.
டீகின் பல்கலைக்கழகத்தின் கௌரவ பட்டங்கள் வழங்கும் செயல்முறை அதன் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. Link
2024 ஆம் ஆண்டில் இதுவரை 5 பேர் இவ்வாறு கலாநிதி பட்டம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை ரணில் விக்ரமசிங்க பட்டம் பெற்ற 2017ஆம் ஆண்டில் மேலும் 7 பேர் டீகின் பல்கலைக்கழகத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அது குறித்த விபரங்களை பார்வையிட
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
அவுஸ்திரேலியாவில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் மதிப்பிற்குரிய நபர்களுக்கு பல்வேறு துறைகளில் கலாநிதி பட்டம் வழங்கி வருகிறது என்பது பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள தகவல்களிலிருந்து புலனாகிறது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவில் உள்ள டீகின் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை கௌரவ விருதாகப் பெற்றுள்ளார் என்பதும், அதனை அவர் பொது நடைமுறையில் கல்வித் தகுதியாகப் பயன்படுத்த முடியாது என்பதும் தெளிவாகிறது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
