சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில தகவல்கள் பயனர்களுக்கு சுவாரஷ்யத்தை அதிகரிக்கும் விதங்களில் பகிரப்பட்டாலும், சில வேளைகளில் இவற்றினால் பயனர்களுக்கு தவறான புரிதல்களை தோற்றுவிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதனை நாம் மறந்துவிடக் கூடாது.
அந்த வகையில் தற்போது ஹப்புத்தளையில் எதிர் திசையில் பாயும் நீர்வீழ்ச்சி இருப்பதனைப் போன்று ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இதன் உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் ஹப்புத்தளைக்கு வருக என ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டே இந்த காணொளியானது 2025.06.24 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.
மேலும் இது உண்மையில் இலங்கையில் உள்ள நீர்வீழ்ச்சி என்ற விதத்தில் பலரும் கமென்ட் செய்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
உண்மையில் இவ்வாறானதொரு நீர்வீழ்ச்சி இலங்கையில் உள்ளதா என நாம் ஆராய்ந்த போது அதற்கான எந்த தகவல்களும் எமக்கு கிடைக்கவில்லை.
எனவே குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி Reverse Image தேடுதலுக்கு உட்படுத்திய போது, இந்தியாவின் மிக இரம்யமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் மகாராஷ்டிராவின் நானேகாட்டில் உள்ள எதிர் திசையில் பாயும் இந்த நீர்வீழ்ச்சியே இது என்பதனை எம்மால் அறியமுடிந்தது.
மேலும் நாம் இந்த நீர்வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது என்பது குறித்து தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவில் உள்ளது என்பது எமக்கு உறுதியானது.
இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மலைப் பகுதியில் முகாம் சேவைகளை (Camping) வழங்கும் ஒரு இந்திய நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சியின் அழகிய காட்சிகள் இடம்பெற்றிருந்தமையையும் காணமுடிந்தது. Link
மேலும் இந்த நீர்வீழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடும் இந்தியாவின் Reverse Waterfall Naneghat என்ற பேஸ்புக் பக்கமொன்றிலும் இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் இருந்து சுற்றுலாப் பயணிகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்மற்றும் காணொளிகளையும் அவதானிக்க முடிந்தது.
நானேகாட் என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புனேவில் உள்ள ஜுன்னார் அருகே அமைந்துள்ளது. இது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மலைத் தொடராகும்.
இது கொங்கண் கடற்கரை மற்றும் டெக்கான் பீடபூமிக்கு அருகில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி மகாராஷ்டிராவின் அமைதியான மலைச் சாலைகளின் இரம்யமான காட்சிகளை எமது கண்களுக்கு விருந்தாக்குகின்றது என்றே கூறப்படுகின்றது.
இந்த நீர்வீழ்ச்சி எதிர் திசையில் பயணிப்பதற்கான காரணம் என்ன?
சில இடங்களில், குறிப்பாக பலத்த காற்று வீசும்போது நீர்வீழ்ச்சியின் நீர் எதிர் திசையில் பாய்வது போல் தோன்றும். இது ஒரு மாயத்தோற்றம் ஆகும். உண்மையில் நீர்வீழ்ச்சியின் நீர் கீழே தான் விழும். ஆனால் பலத்த காற்று வீசும்போது, அந்த காற்று நீரை மேல்நோக்கி அடிப்பதால், அது எதிர் திசையில் பாய்வது போல் தோன்றும்.
சிலர் மேலிருந்து பார்க்கும்போது இதனை பூமியில் உள்ள சொர்க்கம் போல் இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதன்படி நானேகட், மலையேறுபவர்களிடையே பிரபலமான இடமாகவே பார்க்கப்படுகின்றது. மழைக்காலங்களில் நானேகட் நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிடுவது சிறந்த அனுபவமாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விசித்திரமான நிகழ்வு நீர் போதுமான அளவு வலுவாக இருக்கும்போது மாத்திரமே நிகழும் என்றும் கூறப்படுகிறது.
இந்த இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சி தொடர்பில் இந்தியாவின் இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை இங்கே காண்க. Link | Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் எதிர்திசையில் பாயும் நீர்வீழ்ச்சி இலங்கையில் இருப்பாதாக சித்தரிக்கும் விதத்தில் பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன், அது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நானேகாட்டில் உள்ள எதிர் திசையில் பாயும் நீர்வீழ்ச்சியின் காணொளியே என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:எதிர் திசையில் பாயும் நீர்வீழ்ச்சி இலங்கையில் உள்ளதா?
Fact Check By: suji shabeedharanResult: Misleading
