
மேற்கு சூடானின் மர்ரா மலைப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 1000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது எடுப்பட்டவை என சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

குறித்த பதிவில் நிலச்சரிவு
மேற்கு சூடானின் மர்ரா மலைப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 1000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 31ஆம் திகதி பெய்த கனமழையின் காரணமாகவே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரே ஒருவர் மட்டுமே உயிர்தப்பி இருக்கிறார்.
மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடும் சேதத்தை சந்தித்துள்ள இப்பகுதியில் சடலங்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ஐநா சபை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. என தெரிவிக்கப்பட்டு இம்மாதம் 02 ஆம் திகதி (2025.09.02) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
சூடானில் இடம்பெற்ற மண்சரிவு தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளில் மேற்குறிப்பிட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது, குறித்த புகைப்படங்கள் அந்த செய்திகளில் வெளியாகவில்லை என்பதனை அறியமுடிந்தது.
எனவே மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களை நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம் இதன்போது அந்த புகைப்படங்கள் நேற்றைய தினம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது கண்டறியப்பட்டது.
முதலாவது புகைப்படம்

இரண்டாவது புகைப்படம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் தமது வருத்தத்தை தெரிவிப்பதாகவும் தமது குழு தொடர்ந்தும் அந்த பகுதி மக்களுக்கு உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்திருந்தது.
இது குறித்து UN Afghanistan தனது X தளத்தில் மேற்குறிப்பிட்ட புகைப்டத்தினை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது புகைப்படம்

சூடான் நிலச்சரிவு
கடந்த ஞாயிற்றுக் கிழமை பெய்த கடும் மழை காரணமாக மேற்கு சூடானின் மர்ரா மலைப் பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவினால் கிட்டத்தட்ட 1000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இந்த நிலச்சரிவில் சிக்கி 370 பேர் உயிரிழந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரியொருவர் தெரிவித்தாக BBC செய்தி வெளியிட்டிருந்தது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியை தாக்கிய இந்த பாரிய நிலநடுக்கம் நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது, இதனால் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் சர்வதேச செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Link
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சூடானில் இடம;பெற்ற நிலச்சரிவு உண்மை எனினும் அது குறித்து பகிரப்பட்ட புகைப்படங்கள் ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (2025.08.31) ஏற்பட்ட நிலநடுக்கத்துடன் தொடர்புடையவை என்பது கண்டறியப்பட்டது.
மேலும் சூடான் நிலச்சரிவில் 1000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டாலும் குறித்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவின் புகைப்படங்களா இவை?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading
