
பாடசாலைகளில் மாணவர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டால் அது தொடர்பில் கல்வி அமைச்சரான பிரதமரிடன் அறிவிக்க முடியும் என தெரிவித்து இரு தொலைபேசி இலக்கங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் பாடசாலைகளில் சட்டவிரோதமாக மாணவர்களிடம் பணம் வசூலிப்பது சம்பந்தமாக முறைப்பாடு செய்தால் கல்வி அமைச்சர் பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் வடசோப் நம்பர் 0719997722 தொலைபேசி நம்பர் 0117124420 என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.01.18 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் அதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் இது குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்தவித செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.
அத்துடன் குறித்த பதிவில் இருந்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அவை கல்வி அமைச்சின் தொலைபேசி இலக்கங்கள் அல்ல எனவும் குறித்த தொலைபேசி இலக்கங்கள் பிரதமர் அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் இலக்கங்கள் என்பதுவும் கண்டறியப்பட்டது.Link
எனினும் குறித்த இலக்கங்களுக்கு நாம் தொடர்புகொண்ட போது அந்த இலக்கங்களில் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.
பிரதமர் அலுவலகம்
மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நாம் பிரதமரின் ஊடகப் பேச்சாளருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இலக்கங்களானது பிரதமர் அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் இலக்கங்கள் எனவும் தற்போது பிரதமர் அலுவலகத்தின் இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ப்பட்டு வருவதனால் தற்காலிகமாக இந்த இலக்கங்கள் பாவனையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சு
இது குறித்த மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் கல்வி அமைச்சின் ஊடக பேச்சாளரிடம் தொடர்புகொண்டு வினவியபோது, மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் உள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டதனை போன்று கல்வி அமைச்சினால் எந்த அறிவித்தல்களும் விடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த பதிவில் உள்ள இலக்கங்கள் கல்வி அமைச்சிற்கு சொந்தமான இலக்கங்கள் அல்ல எனவும் அவை பிரதமர் அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் இலக்கங்கள் எனவும் இவை பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பதற்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கங்கள் அல்ல எனவும் அவர் எமக்கு தெரிவித்தார்.
இது குறித்து நாம் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் போது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அப்போதைய கல்வி அமைச்சின் செயலாளரான திலகா ஜயசுந்தர இது தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்வையிட Link | Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் பாடசாலைகளில் சட்டவிரோதமாக மாணவர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்குமாறு தெரிவித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு தவறானது என்பதுடன் அவ்வாறான எந்தவித அறிவித்தல்களும் கல்வி அமைச்சினால் வெளியிடப்படவில்லை என்பதுவும் தெளிவாகின்றது.
மேலும் குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் பிரதமர் அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் இலக்கங்கள் என்பதுடன் அவை மாணவர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்படுவது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கங்கள் அல்ல என்பது கல்வி அமைச்சின் கூற்றின்படி புலனாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்களா இவை?
Written By: Suji ShabeedhranResult: False
