அஹமதாபாத் விமான விபத்துடன் தொடர்புடைய காணொளி மற்றும் புகைப்படங்களா இவை?

Misleading சர்வதேசம் | International

கடந்த 12 ஆம் திகதி இந்நதியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்துடன் தொடர்புடைய காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் என தெரிவித்து பல்வேறு விதமான தகவல்கள் இதுவரை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

எனவே இவற்றின் உண்மை தன்மை தொடர்பில் ஆராய்வதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம்.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் இதுவரை 242 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதில் விமானத்தில் பயணித்தவர்களும், மருத்துவ கல்லூரியின் விடுதி கட்டிடத்தில் இருந்த மாணவர்களும் அடங்கும்

அஹமதாபாத் விமான விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் (வயது 68) உயிரிழந்துள்ளார். லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்ற போதே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது என தெரிவித்து கடந்த 2025.06.12 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Claim – 2

Facebook | Archived Link

குறித்த பதவில் விமான விபத்தில் உயிரிழந்த பணியாளர் ஒருவரால் விபத்துக்கு ஒரு சில நிமிடங்கள் முன் எடுக்கப்பட்ட மனதை உருக்கும் காணொளி என தெரிவிக்கப்பட்டு 2025.06.13 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Claim – 3

Facebook | Archived Link

விமான விபத்தில் பயணிகள் எரிந்து விழும் துயரமான காட்சி என தெரிவித்து குறித்த காணொளி 2025.06.13 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

Claim – 1

அஹமதாபாத்தில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற விமான விபத்து உலகையே சோகத்தில் ஆழ்த்திய ஒரு சம்பவம் என்றே குறிப்பிட வேண்டும் அந்த வகையில் தற்போது விமான விபத்தின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவித்து  சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

எனவே நாம் குறித்த புகைப்படங்களை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.

இதன்போது குறித்த பதிவில் பகிரப்பட்டிருந்த ஆறு புகைப்படங்களில் ஒரு புகைப்படமானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பது கண்டறியப்பட்டது.

எனவே ஏனைய புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது கர்நாடகாவின் மங்களூரில் 2010 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

துபாயிலிருந்து வந்த அந்த விமானம், மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் 158 பேர் உயிரிழந்துடன், 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்ட செய்தியில் தற்போது பகிரப்படும் புகைப்படங்களில் ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது Link

மேலும் இதே புகைப்படத்தை  gettyimages இலும் எமக்கு காணக்கூடியதாக இருந்தது.

எனவே இதன் அடிப்படையில் கடந்த 12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என பகிரப்பட்ட ஆறு புகைப்படங்களின் ஒன்று செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பது கண்டறியப்பட்டதுடன் மற்றுமொரு புகைப்படமானது 2010 ஆம் ஆண்டு கர்நாடகாவின் மங்களூரில் இடம்பெற்ற விமான விபத்தின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதுவும் கண்டறியப்பட்டது.

அத்துடன் அதில் பகிரப்பட்ட ஏனைய 4 புகைப்படங்களும் உண்மையில் கடந்த 12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்தின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

 Claim – 2

விமான விபத்தில் உயிரிழந்த பணியாளர் ஒருவரால் விபத்துக்கு ஒரு சில நிமிடங்கள் முன் எடுக்கப்பட்ட மனதை உருக்கும் காணொளி என பகிரப்பட்ட காணொளி தொடர்பிலும் நாம் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.

எனவே, குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உடபடுத்தினோம், இதன்போது குறித்த காணாளியை பதிவுசெய்த விமானப் பணிப்பெண் (Yashasvi Sharma) இன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த காணொளியை 2025.06.09 ஆம் திகதி அவர் பதிவேற்றம் செய்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

அதாவது, ஜூன் 12 ஆம் திகதி AI171 விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு இந்த காணொளி  வெளியிடப்பட்டதால், இந்த காணொளியானது விமான விபத்தின்போது  எடுக்கப்பட்ட காணொளி அல்ல என்பது தெளிவாகிறது.

இந்த காணொளி தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி பதிலளித்த அவர், விபத்தில் சிக்கிய விமானக் குழுவினர் என சமூக ஊடகங்களில் இந்த காணொளி பகிரப்பட்ட பிறகு, தனது நலன் குறித்து விசாரிக்க தன்னைத் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். மேலும், தான் இப்போது மும்பையில் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும், விமான விபத்தில் இறந்த பணியாளர்கள் என தெரிவித்து தனது காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதாகவும், அவ்வாறு தனது காணொளியை வெளியிட்ட சமூக ஊடகக் கணக்குகள் குறித்து புகாரளிக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் இன்ஸ்டாகிராமில் Story ஒன்றை  பதிவிட்டிருந்தார்.

அத்துடன் இந்த காணொளியானது உண்மையான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் பகிரப்பட்டமையால், அந்த காணொளியில் உள்ள குழுவினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தையும் அவர் அதில்  குறிப்பிட்டிருந்தார்.

மேற்கண்ட காணொளியில் காட்டப்பட்டுள்ள இந்த விமானப் பணிப்பெண் மற்றும் பிற விமான ஊழியர்களும் ஏர் இந்தியாவிற்காகவே பணிபுரிவதால், இந்த காணொளி தவறாக வழிநடத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் விமான விபத்தில் உயிரிழந்த பணியாளர் ஒருவரால் விபத்துக்கு ஒரு சில நிமிடங்கள் முன் எடுக்கப்பட்ட காணொளி என பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன் இது ஏர் இந்தியாவின் விமானப் பணிப்பெண் ஒருவரினால் கடந்த 2025.06.09 ஆம் திகதி எடுக்கப்பட்ட ஒரு காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் குறித்த காணொளியை வெளியிட்ட விமானப் பணிப்பெண் தற்போது மும்பையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Claim – 3

அந்தவகையில் 12 ஆம் திகதி இடம்பெற்ற விமான விபத்தில் பயணிகள் எரிந்து விழும் துயரமான காட்சி என பகிரப்படும் மற்றுமொறு காணொளியின் உண்மைத் தன்மையை ஆராயும் நோக்கில் நாம் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தோம்.

எனவே குறித்த விபத்து தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளில் இவ்வாறான காணொளி குறித்து எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பதனை நாம் உறுதிசெய்தோம்.

அத்துடன் விமானம் புறப்பட்டு சில மணிநேரங்களிலேயே அந்த விமானமானது வெடித்து சிதறி விமானத்தில் இருந்த பயணிகள் உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன எனவே அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் பயணிகள் கட்டிடமொன்றிலிருந்து எவ்வாறு எரிந்து விழ முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

எனவே விபத்திற்குள்ளான குறித்த விமானம் உடைந்து வீழ்ந்த மருத்துவ மாணவர் விடுதியின் கட்டிடம் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது,

விமானம் விபத்திற்குள்ள விடுதி கட்டிடத்திற்கும் அந்த காணொளியில் காட்டப்படும் கட்டிடத்திற்கும் பாரிய  வேறுபாடுகள் காணப்படுகின்றமையை எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது. Link

காணொளியில் காட்டப்படும் கட்டிடம்   விபத்து இடம்பெற்ற மருத்துவ மாணவர் விடுதி கட்டிடம்
 

எனவே நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது அஹமதாபாத் விமான விபத்து இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது ஜூன் 10 ஆம் திகதி டெல்லியின் துவாரகாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியே இது என்பது கண்டறியப்பட்டது.Link

இந்த தீ விபத்து தொடர்பில் இந்திய ஊடகங்களில் வெளியான செய்தி பின்வருமாறு

டெல்லி துவாரகாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் கடந்த 10 ஆம் திகதி காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதன்போது அந்த கட்டிடத்தில் வசித்துவந்த தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டிடத்திலிருந்து குதித்துள்ளனர், இருப்பினும் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய ஊடக செய்திகளில் அறிக்கையிடப்பட்டுள்ளன.Link

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் விமான விபத்தில் பயணிகள் எரிந்து விழும் துயரமான காட்சி என பகிரப்படும் காணொளியானது கடந்த 2025.06.10 ஆம் திகதி டெல்லியின் துவாரகாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

அஹமதாபாத் விமான விபத்து

அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கடந்த 12 ஆம் திகதி மதியம் புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்த 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.

ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அவசர கால அழைப்பை விடுத்த விமானி, அந்த விமானத்தை விமான நிலையத்தின் அருகில் இருந்த மேகனிநகர் பகுதியில் இருந்த குதிரைப்பந்தய மைதானத்தில் இறக்க முயன்றார்.

அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், அந்த பகுதியில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து, வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்த 19 பேர் என 265 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அவர்களில் குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அஹமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 274 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர் உள்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *