புதிய கொரோனா தொற்றால் இலங்கையில் பலியான முதல் குழந்தை என தெரிவிக்கப்பட்டு சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே இதன் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் புதிய கொரோனா தொற்றால் இலங்கையில் பலியான குழந்தை விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி கடந்த 2025.06.01 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் சிலர் சமூக ஊடகங்களில் கொரோனாவால் 2025 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முதல் மரணம் என்றும் கொரோனாவினால் எல்பிட்டிய பகுதியில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு என்றும் தகவல்களை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Explainer (விளக்கமளித்தல்)
எனவே மேற்குறிப்பிட்ட காணொளியின் தலைப்பில் புதிய கொரோனாவினால் பலியான முதல் குழந்தை என தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அந்த காணொளியை கவனிக்கும் போது அதில் புதிய கொரோனா தொற்று காரணமாகவே அந்த குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் எந்த தகவல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
மாறாக உயிரிழந்தை குழந்தையின் உயிரியல் மாதிரிகளை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பிய பின்னரே குறித்த குழந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் அது புதிய திரிபுஅல்ல எனவும் தெரிவிக்கப்பட்டதாக அந்ந காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காராணமாக கொரோனாவால் ஒன்றரை மாதக் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் வேறு பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்தோம்.
இதன்போது சில ஊடகங்களில் எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயதான குழந்தை சலி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்காக கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேலையில் அந்த குழந்தை உயிரிழந்ததையடுத்து குழந்தையின் உயிரியல் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது அந்த குழந்தை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் உயிரிழந்த குழந்தை பழைய கொரோனா திரிபு காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும் குழந்தை புதிய கொரோனா திரிபினால் உயிரிழக்கவில்லை என்பதுவும் கண்டறிப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது. Link
கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர்
மேலும் நாம் இது தொடர்பில் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் எஸ்.பி.யு.எம் ரங்கவுடன் தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது குறித்த குழந்தை வேறு உடல் நலப்பிரச்சினைக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் குழந்தையின் சில மாதிரிகளை பரிசோதனைக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பிய போதே அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும், தற்போது அந்த குழந்தை கொரோனா தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.
மேலும் உயிரிழந்த குழந்தை புதிய கொரோனா திரிபு காரணமாகவா உயிரிழந்துள்ளது என நாம் வைத்தியரிடம் வினவியபோது, அவ்வாறு அல்ல எனவும் முன்னர் இருந்த கொவிட் வைரஸினாலேயே அந்த குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது எனவும் புதிய திரிபினால் குறித்த குழந்தை உயிரிழக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க
புதிய கொரோனா திரிபு தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்போது கொவிட் தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறியும் சோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன எனவும், PCR பரிசோதனை வசதிகளுள்ள வைத்தியசாலைகள், தற்போது இந்தச் சோதனைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வைத்தியசாலைகளில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பிலான கண்காணிப்பை அதிகரிக்க வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உலக நாடுகள் சிலவற்றில் தற்போது பரவிவரும் புதிய கொவிட் தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிக்கும். ஆனால், உடனடியாக எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் (2025.06.02) புதிய கொவிட் – 19 திரிபு தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவினால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் செயல்பாட்டில் உலகளாவிய அதிகரிப்பு 2025 ஆண்டு பெப்ரவரி முதல் பதிவாகியுள்ளது.
சர்வதேச சுவாச கண்காணிப்பு அமைப்பின் (International Respiratory Surveillance System) அடிப்படையில், ஆசியாவின் பல நாடுகளில் சமீபத்திய மாதங்களில் COVID-19 தொற்றாளர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு மே மாதம், COVID-19 உலகளாவிய தொற்றுநோய் நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, அதன் பின்னர், COVID-19 மற்ற பொதுவான சுவாச நோய்த்தொற்றுகளைப் போலவே, உள்நாட்டு ரீதியாக பரவும் ஒரு நோயாகக் கருதப்பட்டு வந்தது.
SARS-CoV-2 வைரஸ் அதன் பரவலின் போது மரபணு மாற்றங்களுக்கு உட்படுவது இயல்பான ஒரு விடயம். 2024 இல் பல நாடுகளில் தற்போது பரவும் மாறுபாடு முன்னர் அறியப்பட்ட மரபணு மாறுபாட்டின் துணைப் பரம்பரையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 2024 இல், இதே மாறுபாடு இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது.
2025 மே மாதம், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) பரிசோதித்த மாதிரிகள், முன்னர் அடையாளம் காணப்பட்ட இந்த துணை-வம்சாவளிகளின் இருப்பை உறுதிப்படுத்தின. எனவே, இவை புதிய மாறுபாடுகள் அல்ல, மேலும் இதன் தீவிரத்தன்மை தொடர்பில் எந்த ஆதாரங்களும் பதிவாகவில்லை.
இலங்கையின் சுவாச கண்காணிப்பு அமைப்பின்படி, 2024 ஆம் ஆண்டில், SARS-CoV-2 வைரஸிற்காக சோதிக்கப்பட்ட சுவாச மாதிரிகளில் 3% நேர்மறையான முடிவுகளை வழங்கியுள்ளன. இந்த எண்ணிக்கை 2024 மே மாதத்தில் 9.6% ஆக உயர்ந்தது. இந்த ஆண்டு இதுவரை SARS-CoV-2 வைரஸின் சராசரி நேர்மறையான முடிவுகள் கிட்டத்தட்ட 2% ஆகும். அதில் தற்போது சிறியளவிலான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றின்படி, வைரஸின் எதிர்கால பரவல் முறைகள் குறித்து இன்னும் உறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இது குறித்த கண்காணிப்புகள் பரிசோதனை மட்டத்திலேயே காணப்படுகின்றது.
சமீபத்திய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த காலகட்டத்தில், குறிப்பாக நிலவும் காலநிலை மாற்றங்கள் காரணமாக, இன்ஃப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்களின் அதிகரிப்பு பொதுவாகக் காணப்படுகிறது. சுகாதார அதிகாரிகள் நோய் நிலைமைகளை கண்காணிப்பதில் விழிப்புடன் இருக்கிறார்கள், மேலும் பொதுமக்கள் தேவையில்லாமல் அச்சமடையத் தேவையில்லை.
காய்ச்சல் அல்லது சுவாச அறிகுறிகள் காணப்பட்டால், பயத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், எவரேனும் சுவாசிப்பதில் சிரமத்தை அனுபவித்தால், மருத்துவ உதவியை நாட வேண்டும்.
இருமல் அல்லது தும்மும்போது வாய் மற்றும் மூக்கை ஒரு திசு அல்லது முழங்கையால் மூடுவது, முகத்துடன் தேவையற்ற தொடர்பைத் தவிர்ப்பது, மற்றும் முறையான கை கழுவுதல் அல்லது கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துவதன் மூலம் அடிக்கடி கை சுகாதாரத்தை உறுதி செய்வது ஆகியவை பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும்.
அசுத்தமான கைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பதும் நல்லது. சுவாச நோயின் அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க முகக்கவசம் அணிய வேண்டும், மேலும் அத்தியாவசியமற்ற நெரிசலான பொது இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
நோய் நிலைமைகளினால் அதிக ஆபத்துள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும், ஏனெனில் அவர்கள் சுவாச நோய்த்தொற்றுகளால் ஏற்படும் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். இந்த குழுக்களில் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகள் உள்ளனர், மேலும், இதய நோய், நாற்பட்ட சுவாச நோய்கள், நீரிழிவு, சிறுநீரக நோய், புற்றுநோய் அல்லது பிற நாற்பட்ட நோய்கள் போன்ற அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கொண்ட நபர்கள், அதே போல் நோயெதிர்ப்புத் தடுப்பு சிகிச்சையைப் பெறுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் மற்றும் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உலகின் சில நாடுகளில் தற்போது பரவிவரும் கொவிட் வைரஸ்
2025 ஜுன் மாத நிலவரத்திற்கமைய, ஆசியாவில் புதிய ஓமிக்ரோன் துணை வகை, NB.1.8.1 தோன்றியதன் காரணமாக, கொவிட்-19 இன் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்றன. சீனாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த மாறுபாடு, பிராந்தியம் முழுவதும் வேகமாகப் பரவியுள்ளது, இதனால் தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.Link
இந்தியாவில் கொவிட்-19 பாதிப்புகள் ஐந்து மடங்கு அதிகரித்து, 2025 மே மாத இறுதிக்குள் 2,700க்கும் மேற்பட்டோர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்த அதிகரிப்புக்கு NB.1.8.1 மாறுபாடே காரணம் எனவும் இதுவரை, 7 இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் , அவர்களில் பலர் அடிப்படை உடல்நலக் குறைபாடுகளைக் கொண்டிருந்தனர் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
தாய்லாந்தில் கொவிட் NB.1.8.1 வகையுடன் தொடர்புடைய 257,000 க்கும் மேற்பட்டோர் அடையாளம் னாணப்பட்டுள்ளதுடன் 52 இறப்புகள் பதிவாகியுள்ளன. முகக்கவசங்களை அணிவது, கை சுகாதாரத்தைப் பின்பற்றுவது மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) NB.1.8.1 ஐ “கண்காணிப்பில் உள்ள மாறுபாடு” என வகைப்படுத்தியுள்ளது, இது விரைவாகப் பரவக்கூடியது எனினும், முந்தைய வகைகளை விட இது கடுமையான நோயை ஏற்படுத்தாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
Also Read: கொவிட் வைரஸ் தொடர்பில் பகிரப்படும் தகவல்கள் உண்மையா?
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Title: புதிய கொரோனா தொற்றால் பலியான குழந்தை என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்
Fact Check By: suji shabeedharanResult: Insight
