
INTRO :
இணையத்தில் வைரலான இளம் பிக்கு மற்றும் யுவதியும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என பொலிஸ் உறுதி செய்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்திய பிக்குவின் படம்! யுவதி தொடர்பில் வெளியான உண்மை
கொழும்பில் அண்மையில் இளம் பிக்கு ஒருவரும் யுவதி ஒருவரும் வீதியில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு தேரருக்கும் அந்த யுவதிக்கும் இடையில் காதல் தொடர்புகள் உள்ளதென பலரும் தெரிவித்தனர்.
தேரர் ஒருவர் காதல் வயப்பட்டமைக்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், பலரும் அவர்களை தவறான முறையில் விமர்ச்சித்திருந்தனர்.
இதுவொரு சமூக பிரச்சினையாக மாறியமையால் பொலிஸார் தலையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த புகைப்படத்தில் இருப்பவர்கள் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரன் சகோதரி என தெரியவந்துள்ளது. குறித்த இருவரின் தாயார் புற்றுநோய் காரணமாக மகரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாயை பார்ப்பதற்காக அதிகாலை வீதிக்கு வந்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தவறாக சித்தரிக்கும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் மோசமாகியுள்ளதென சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
🌍எங்களது whatapp குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க 👇
https://wa.link/xxdi0v. “ என இம் மாதம் 11 ஆம் திகதி (11.08.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த வாரத்தில் சமூக வலைத்தளங்களில் இளம் தேரர் ஒருவர் காதல் வயப்பட்டடுள்ளார் என ஒரு வீடியோ வைரலாகியது. குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடியோ தொடர்பில் மீண்டும் சமூகவலைத்தளங்களில் பேச ஆரம்பமானது, இந்த தடவை குறித்த பிக்கு மற்றும் யுவதி ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்றும் தாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தாயினை பார்வையிட சென்ற போதே இவ்வாறு வீடியோ எடுத்து பகிரப்பட்டுள்ளதாக பொலிஸார் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது.
மேலும் குறித்த பதிவில் எந்த பொலிஸ் நிலையம் இது தொடர்பாக கருத்தினை வெளியிட்டுள்ளது என்ற தகவல் உள்ளடங்கி இருக்கவில்லை அத்தோடு, குறித்த வீடியோவை நாம் பார்க்கும் போது, பிக்கு மற்றும் இளம் யுவதியின் செயல்கள் குறித்து ஊர் மக்கள் தமது கருத்துக்களை வெளியிடும் போது, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு மற்றும் குறித்த யுவதி இது குறித்து எவ்விதமான கருத்தினையும் வெளிப்படுத்தவில்லை என்பது குறித்த வீடியோவில் தெளிவாக தெரிகின்றது.
அந்த வீடியோவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கண்டி போவல பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவித்தமைக்கு அமைய எமது குழுவினர் கண்டி பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக வினவினோம்.
கண்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இவ்வாறான சம்பவம் தொடர்பில் எவ்விதமான முறைப்பாடும் இல்லை எனவும், குறித்த தகவலுக்கு அமைய இளம் பிக்கு மற்றும் அவரின் சகோதரி என குறிப்பட்ட யுவதி தொடர்பான எவ்விதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என எமக்கு உறுதி செய்தார்.
மேலும், போவல பிரதேசத்தின் சில பகுதிகள் பேராதனை பொலிஸ் நிலையத்திற்கு கீழ் வருவதால் இதனை பேராதனை பொலிஸ் நிலையத்தில் உறுதி செய்யுமாறு எமக்கு தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு எவ்விதமான முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும், அது தொடர்பாக அவர்கள் எவ்விதமான அறிவிப்பினையும் வெளியிடவில்லை என தெரிவித்தார்.
அத்துடன் இன்னும் சிலர் இது கம்பளை பகுதியில் நடந்த சம்பவம் என தெரிவித்தமையினால், நாம் இது குறித்து கம்பளை பொலிஸ் நிலையத்திலும் விசாரணை மேற்கொண்டோம்.
அவர்களும் இது போன்ற எவ்விதமான முறைப்பாடும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும், அவர்கள் தொடர்பில் எவ்விதமான அறிவிப்பையும் தாங்கள் வெளியிடவில்லை எனவும் உறுதி செய்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிஹால் தல்துவாவிடம் வினவினோம்.
குறித்த காணொளி தொடர்பில் பலர் கேட்டுள்ள போதிலும், சம்பவம் தொடர்பான தகவல்கள் இதுவரை சரியாக தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவில் எவ்விதமான அறிவிப்பினையும் தாங்கள் வெளியிடவில்லை என தெரிவித்தார்.
குறித்த இளம் பிக்கு மற்றும் யுவதி தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகின்றதை போன்று பொலிஸ் நிலையத்தினால் இவர்கள் ஒரே தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் என்று இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இளம் பிக்கும் யுவதியும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என பொலிஸ் உறுதி செய்ததா?
Fact Check By: S G PrabuResult: Misleading

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team