
அனர்த்தத்தினால் சேதமடைந்த பாடசாலைகளின் புனரமைப்பிற்கு மக்கள் விடுதலை முன்னணி அறக்கட்டளையிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் புனரமைப்பிற்கு மக்கள் விடுதலை முன்னணி அறக்கட்டளை நிதியிலிருந்து ரூபா 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதில் சிங்களத்தில் பகிரப்பட்டிருந்த பதிவில் “வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அழிவடைந்த பாடசாலைகளை மீண்டும் புனரமைப்பதற்கு ஜே.வி.பி.யின் அறக்கட்டளையில் இருந்து 500 மில்லியன். சந்திரிகாவால் அதைச் செய்ய முடிந்தால், எங்களால் எவ்வளவு முடியும்? நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க கட்சி நிதியை உருவாக்கவில்லை” என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறினார் என தெரிவித்து குறித்த பதிவானது இன்று (2025.12.10) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிரந்துள்ளமையையும் எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்திருப்பாராயின் அது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் எமது ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகிவில்லை என்பதனை அறியமுடிந்தது.
அவர் இன்று (10) வெளியிட்ட செய்தி ஒன்றை பிரதான ஊடகங்கள் வெளியிட்டிருந்தன அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் நல் வாழ்விற்காக பிரார்த்தனைகள் செய்வதற்கும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அலுத்தகம கந்தே விஹாரையில் டில்வின் சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்றது என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதி வழங்குவதாக வாக்குறுதி அளித்த நிவாரணங்கள் அந்தவகையிலேயே வழங்கப்படும் எனவும் அவர் அங்கு தெரிவித்திருந்தார். எனினும், கட்சியின் நிதி தொடர்பாக அங்கு அவர் எந்த கருத்துக்களையும் தெரிவித்ததாக காணமுடியவில்லை. அது தொடர்பில் வெளியான செய்தி அறிக்கை
அதேபோன்று டில்வா சில்வா வேறு எந்த நிகழ்ச்சிகளின் போதும் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்தார் என்பதனை காணமுடியவில்லை.
மக்களை விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு
நாம் இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவை தொடர்புக் கொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது மேற்குறிப்பிட்ட செய்தி தவறானது என்றும், சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனைப் போன்று டில்வின் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
அதேபோன்று பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜே.வி.பி, கட்சி நிதியிலிருந்து ஏதேனும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதா என நாம் அவர்களிடம் வினவினோம்.
இதன்போது மாவட்டங்களில் உள்ள தங்கள் கட்சி உறுப்பினர்கள் தலையிட்டு மாவட்ட அளவில் தங்கள் பணத்தைச் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக செலவிட்டதாக அவர்கள் கூறினர்.
டில்வின் சில்வா
இது தொடர்பில் நாம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிடம் வினவியபோது, மேற்கண்ட சமூக ஊடகப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த அறிக்கையையும் தான் வெளியிடவில்லை என்றும், தனது கட்சி நிதியில் அவ்வளவு பணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
250 மில்லியன் நன்கொடையாக வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை, அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள்குடியேற்றத்தை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க நிதிக்கு 250 மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்தப் நன்கொடையை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கையளித்தார்.
அண்மைய பாதகமான வானிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மீள்கட்டமைப்பு மற்றும் உதவிக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கதில் பதிவிடப்பட்டிருந்த பதிவை காண்க
கட்சி நிதியிலிருந்து உதவுமாறு சாணக்கியன் தெரிவிப்பு
சமீபத்தில், பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கட்சி நிதியத்தில் பணம் இல்லாததால், தனது பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தையும் வழங்கியதாகவும், மக்களுக்காக கட்சி நிதியிலிருந்து பணத்தை ஒதுக்குமாறு ஜேவிபியிடம் கேட்டுக்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.Link
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் “வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அழிவடைந்த பாடசாலைகளை மீண்டும் புனரமைப்பதற்கு ஜே.வி.பி.யின் அறக்கட்டளையில் இருந்து 500 மில்லியன் வழங்கியுள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்ததாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன் அவர் அவ்வாறான எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதுவும் கண்டறியப்பட்டது.
மேலும் மாவட்ட மட்டத்தில் உள்ள தங்கள் உறுப்பினர்களிடமிருந்து பணத்தைப் பெற்று பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதாக கட்சி தெரிவித்திருந்தது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:சேதமடைந்த பாடசாலைகளை புனரமைக்க ஜேவிபி 500 கோடி நன்கொடை வழங்கியதா?
Fact Check By: Suji ShabeedhranResult: False


