நோபாளத்தின் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டாரா?

False சர்வதேசம் | International

நேபாள அரசால் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து Gen Z என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் கடந்த 08 ஆம் திகதி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் கலவரமாக வெடித்தது.

இந்த வன்முறை சம்பவங்களில் நோபாளத்தின் முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கானலின் மனைவி போராட்டக்காரர்களினால் எரித்துக் கொல்லப்பட்டதாக தெரிவித்து சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனை காணமுடிந்தது.

எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழப்பு… நேபாளத்தில் உச்சக்கட்ட பதற்றம் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.06.10 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் ஊடகங்கள் உள்ளிட்ட பலரும் இந்த தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

FB | FB | FB | FB

Fact Check (உண்மை அறிவோம்)

நேபாள முன்னாள் பிரதமர் ஜலா நாத் கானலின் மனைவி ரவி லட்சுமி சித்ரகார், காத்மாண்டுவில் Gen Z இளைஞர் அணியின் தலைமையிலான போராட்டங்களின் போது காத்மாண்டுவின் டல்லுவில் உள்ள அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டதில் இறந்துவிட்டதாக பல இந்திய ஊடகங்களில் முதலில் செய்திகள் வெளியாகியிருந்தது. Times Of India | Link

அதேபோன்று இலங்கையின் பல பிரதான ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது. Link | Link | Link

எனினும் சில இந்திய ஊடகங்களில் கடந்த 9 ஆம் திகதி அவர் இறந்து விட்டதாக செய்திகள் அறிக்கையிடப்பட்டிருந்த போதிலும் அதற்கு மறுநாள் அதே ஊடகங்களில் நேபாள முன்னாள் பிரதமரின் வீடு போராட்டக்காரர்களினால் தீக்கிரையாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரின் வீட்டில் இருந்த மனைவி மீட்கப்பட்டு தீக்காயங்களுடன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக அறிக்கையிட்டிருந்தன.Link | Link

முதலில் வெளியான செய்தி அறிக்கை


திருத்தப்பட்ட செய்தி அறிக்கை

மேற்குறிப்பிட்ட திருத்தப்பட்ட செய்திகளில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலா நாத் கானலின் மனைவி ரபி லட்சுமி சித்ரகாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜலா நாத் கானலின் பிரத்தியேக செயலாளர் கிருஷ்ணா பட்டாராய் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பட்டாராய் நேபாளத்தின் ‘Kantipur Daily’ பத்திரிக்கைக்கே இதனை தெரிவித்தாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் முன்னாள் பிரதமரின் வீட்டை போராட்டக்காரர்கள்  தீ வைத்ததில் அவரின் மனைவி ரபி லட்சுமி சித்ரகார் தீக்காயங்களால் இறந்ததாக கடந்த 09 ஆம் திகதி நேபாள  ஊடகங்கள்  தவறாக செய்தி வெளியிட்டிருந்தது எனவும் தற்போது அந்த கட்டுரை புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.Link

மேலும் நாம் இது குறித்து தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் நேபாள முன்னாள் அமைச்சர் ஜீவன் ராம் ஸ்ரேஸ்தா, கீர்த்திபூரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சித்ரகாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியதாக நேபாள செய்தி நிறுவனமான Setopati இல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை ஊழியர் ஒருவர் உறுதிப்படுத்தியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

முதலில் அவர் சௌனியில் உள்ள நேபாள இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்ற, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கீர்த்திபூரில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் நேபாளில் உள்ள உண்மை சரிபார்ப்பு நிறுவனம் ஒன்றினால் இது குறித்து அறிக்கையிடப்பட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது. அதில் கீர்த்திபூரில் உள்ள நேபாள பிளவு மற்றும் தீக்காய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கிரண் நகர்மியிடம் முன்னாள் பிரதமரின் மனைவியின் உடல்நிலை குறித்து தாம் வினவியதாகவும், இதன்போது ரவி லட்சுமி சித்ரகார் உயிருடன் இருக்கிறார், ஆனால் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்றும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என வைத்தியர் கிரண் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து நாம் மேற்கொண்ட ஆய்வில், முன்னாள் பிரதமர் கடந்த 11 ஆம் திகதி பிபிசி செய்தியாளரிடம் தனது மனைவி தீக்காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தொலைபேசியில் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு


எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நோபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலா நாத் கானலின் மனைவி ரவி லட்சுமி சித்ரகார் போராட்டக்காரர்களினால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன், காத்தமண்டுவில் உள்ள முன்னாள் பிரதமரின் வீடு போராட்டக்காரர்களினால் எரிக்கப்பட்ட போது வீட்டிலிருந்த அவரது மனைவி பாரிய தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என்பதுவும் கண்டறியப்பட்டது.

குறிப்பு: கடந்த 11 ஆம் திகதி கிடைத்த அதிகாரபூர்வ அறிக்கைகளிற்கமையவே நாம் இந்த தகவல்களை வழங்கியுள்ளோம். மேலும் நேபாளத்தின் முன்னாள் பிரதமரின் மனைவியின் உடல்நிலையில் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் நாம் இந்த கட்டுரையைில் அதனை இணைப்பதற்கு காத்திருக்கின்றோம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:நோபாளத்தின் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டாரா?

Fact Check By: Suji shabeedharan  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *