விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவுஸ்திரேலியாவில்  குடியேறிவிட்டாரா?

Misleading இலங்கை | Sri Lanka

விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் அவுஸ்திரேலியாவில் குடியேறிவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் திறமையான வீரர் சுகத் திலகரத்னவுக்கு வாழ்த்துக்கள்

அவுஸ்திரேலியாவில் வசிக்க வாய்ப்பு பெற்ற உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் என ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.02.07 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மேலும் நாம் இது குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்த போது அவ்வாறான எந்தவொரு செய்தியும் வெளியாகியிருக்கவில்லை என்பது எமக்கு உறுதியானது.

இருப்பினும் சிங்கள மொழி பத்திரிகையான “திவயின“ பத்திரிகையின் இணையதளத்தில்  சுகத் திலகரத்ன அவுஸ்திரேலியாவில் குடியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தி வெளியாகியிருந்த போதிலும் தற்போது அந்த செய்தியை அவர்களின் இணையதளத்திலோ பேஸ்புக் பக்கத்திலோ காணமுடியவில்லை.

அதனடிப்படையில் “திவயின“ பத்திரிகையின் பேஸ்புக் பக்கத்திலிருந்து குறித்த செய்தி நீக்கப்படுவதற்கு முன்னர் இவ்வாறே பதிவேற்றப்பட்டிருந்தது.

எனினும் சில செய்தி இணையத்தளங்களில் தான் அவுஸ்திரேலியாவில் குடியேறிவிட்டதாக சில ஊடகங்கள் பொய்யான செய்தியை மக்கள்மயப்படுத்தி வருவதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்துள்ளார் எனவும் தான் தன்னுடைய சொந்தப் பணத்தில் தனிப்பட்ட விடயத்துக்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டதாகவும் எதிர்வரும் 20 ஆம் திகதி தான் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமையையும் எம்மால் காண முடிந்தது. Link | Link

எவ்வாறாயினும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு  தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவிற்கு  சென்றுவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராதமையினால் அது தொடர்பில் நாம் முதலில் ஆராய்ந்தோம்.

இலங்கை பாராளுமன்றத்தின் சட்ட சேவைகள் மற்றும் தொடர்பாடல் பணிபாளர் (பதில்) ஜயலத் பெரேரா

சுகத் திலகரத்ன தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா  செய்வது தொடர்பிலோ அதிகாரப்பூர்வமாக  பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதா என நாம் பாராளுமன்றத்தின் சட்ட சேவைகள் மற்றும் தொடர்பாடல் பணிபாளர் (பதில்) ஜயலத் பெரேராவிடம் வினவினோம்.

அதன்படி, ஒரு பிரதி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக இருந்தால் அது தொடர்பில், அவர் எழுத்துப்பூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்க வேண்டும் என்றும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக இருந்தால் அவர் அது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் ஜயலத் பெரேரா குறிப்பிட்டார்.

இருப்பினும், பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்திற்கு எந்தவிதமான அறிவித்தல்களையும் வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் டிஜிட்டல் ஊடக  பணிப்பாளர் இசுரு அநுராத விஜயசிங்க 

மேலும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிப்பதிக்கு அறிவித்துள்ளாரா என நாம் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் டிஜிட்டல் ஊடக  பணிப்பாளர் இசுரு அநுராத விஜயசிங்கவிடம் வினவினோம்.

இதன்போது பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவரின் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை என்பதனை அவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.

சுகத் திலகரத்னவின் குடும்ப உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவில் வசிப்பதனால் அவரின் தனிப்பட்ட சுற்றுப்பயணமாக அவர் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் பெப்ரவரி மாதம்  20 ஆம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளதகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.யு. அருண பண்டார

இது குறித்து இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அருண பண்டாரவிடம் நாம் வினவினோம். அதன்போது ஒரு அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக இருந்தால் அது குறித்து அமைச்சிற்கு அல்ல  ஜனாதிபதிக்கே தெரிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். 

இருப்பினும், பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டில் குடியேறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது எனவும் அவர் தனிப்பட்ட விஜயத்திற்காகவே அவுஸ்திரோலியா சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

பொதுவாக, ஒரு அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் தனிப்பட்ட பயணத்திற்காகவோ அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காகவோ விடுப்பு எடுத்தால், அது குறித்து ஜனாதிபதிக்கே அறிவிக்கப்பட வேண்டும் என்றும், ஒரு உத்தியோகப்பூர்வ பயணத்திற்கு வெளிநாடு செல்வதாக இருந்தால் மாத்திரமே அது குறித்து அமைச்சின் ஊடாக ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தனிப்பட்ட விஜயத்தின் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்தாலும், அது குறித்து அவருக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் அருண பண்டார, தெரிவித்தார்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் கடந்த 2025.02.11 ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தான் அவுஸ்திரேலியாவிற்கு  குடிபெயர்ந்ததாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்றும் அனைத்து பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகாரிகளுக்கும் அது குறித்து அறிவித்த பின்னரே தனிப்பட்ட பயணமாக அவர் அவுஸ்திரேலியாவிற்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தனிப்பட்ட பயணத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 2025.02.20 ஆம் திகதி அவர் மீண்டும் நாட்டிற்கு திரும்பவுள்ளதாகவும், தனது பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுமளவிற்கு தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து பின்வருமாறு

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அவுஸ்திரேலியாவில் குடியேறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன் அவர் தனது தனிப்பட்ட விஜயமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் எதிர்வரும் 2025.02.20 ஆம் திகதி மீண்டும் அவர் நாடு திரும்பவுள்ளார் என்பதுவும் தெளிவாகின்றது.

அத்துடன் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து மற்றும் அரசாங்க தரப்பின் அறிக்கைகளின் அடிப்படையில் அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்பதுவும் புலனாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவுஸ்திரேலியாவில் குடியேறிவிட்டாரா?

Fact Check By: Suji Shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *