முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்த்து தற்போதைய அராசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் தேசிய பாடசாலை அந்தஸ்த்து ரத்து
-அரசு அதிரடி-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார காலத்தில் வழங்கப்பட்ட 671 பாடசாலைகளில் தேசிய பாடசாலை உயர்வு அந்தஸ்து இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு பாடசாலைக்கு இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை அப்போது அப்போதைய அரசாங்கம் வழங்கியது.
அத்துடன், ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபாவை ஒதுக்கி பாடசாலைகளுக்கான பெயர்ப்பலகைகளை அமைப்பதற்கும் அவசரத்திருத்த வேலைகளுக்கும்
பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், மேற்கூறிய தேசிய பாடசாலை அந்தஸ்து தற்போது நீக்கப்படுவதுடன், அவை இதற்கு முதலிருந்த
மாகாண சபை பாடசாலைகளாகவே இயங்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
அன்றைய அரசின் அறிவுரைக்கமைய மேற்படி ஒவ்வொரு பாடசாலையும் தேசிய பாடசாலை பெயர்ப்பலகைக்காக 5 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது
எனவே, இப்பெயர்ப் பலகையை அகற்றுவதுடன், தேசிய
பாடசாலை பெயரில் தயாரிக்கப்பட்ட கடிதத்தலைப்பு மற்றும் பெயர் முத்திரைகளையும் அகற்றுமாறும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1,000 தேசிய பாடசாலைகளை நாட்டில் உருவாக்கும் திட்டத்திற்கிணங்க கோட்டாபய அரசாங்கம் இத்தேசிய பாடசாலை திட்டத்தை அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். என தெரிவித்து கடந்த 2025.06.02 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலரும் அந்த தகவலை சமூக ஊடகங்களில் பகிரந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே இவ்வாறு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டமை தொடர்பான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.
எனினும் கடந்த அரசாங்கத்தின் 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தில் 23 பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் ஏனைய பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு அது தொடர்பில் மீளாய்வு செய்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் கல்லியமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரிய கடந்த 2025.06.03 ஆம் திகதி பாராளுமன்றில் தெரிவித்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. Link
எனவே கடந்த 03 ஆம் திகதி பிரதமர் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றிய உரை தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம்.
இதன்போது பராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்ட 1000 பாடசாலைகளில் 23 பாடசாலைகளே தேசிய பாடசாலைகளுக்கான தரத்துடன் இருப்பதாகவும் ஏனைய பாடசாலைகளை தேசிய பாடசாலைகளை தரத்திற்கு உயர்த்துவதற்கு மீளாய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமசூரிய பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த 23 பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய பாடசாலைகளுக்கு போதுமான வசதிகள் இல்லை எனவும் அவை பெயரளவில் மாத்திரமே தேசிய பாடசாலையாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார.
எனினும் குறித்த பாடசாலைகள் மீண்டும் மாகாணசபையின் கீழ் கொண்டு வரப்படாது எனவும் அந்த பாடசாலைகளை தெரிவு செய்து தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சு
எனவே இது குறித்த மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் பிரதமரின் கல்வி விவகாரத்திற்கு பொறுப்பான செயலாளரை தொடர்புகொண்டு வினவியிருந்தோம், இதன்போது கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் தேசிய பாடசாலை அந்தஸ்த்து ரத்து செய்யப்படவில்லை எனவும், பாடசாலைகளின் வளங்களின் அடிப்படையில் அவற்றில் 23 பாடசாலைகள் மாத்திரமே தேசிய பாடசாலைகளுக்கான அனைத்து வளங்களுடனும் காணப்படுவதனால் அவற்றை மாத்திரமே தற்போது தேசிய பாடசாலைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
எனினும் ஏனைய பாடசாலைகளின் தேசிய பாடசாலை அந்தஸ்த்து ஒருபோதும் இரத்து செய்யப்படவில்லலை எனவும், அந்த பாடசாலைகளில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து அவற்றை உரிய விதத்தில் தேசிய பாடசாலைக்கான தரத்திற்கு உயர்த்துவதற்காக நடவடிக்கைகள் இடமபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனடிப்படையில் குறித்த தேசிய பாடசலைகள் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் 1000 பாடசாலைகளின் அதிபர்களுக்கு அண்மையில் சுற்றுநிரூபம் ஒன்று அனுப்பட்டுள்ளதாகவும் அதில் குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலையாக எழுத்துமூலமாக எங்கும் உபயோகப்படுத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கடந்த 3 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
எனவே உண்மையில் இவ்வாறான சுற்றுநிரூபம் ஒன்று அராசாங்கத்தினால் அனுப்பப்ட்டுள்ளதா என நாம் பிரதமரின் கல்வி விவகார செய்ற்பாடுகளுக்கு பொறுப்பான செயலாளரிடம் வினவியிருந்தோம். இதன்போது இவ்வாறான சுற்றுநிரூபம் ஒன்று அனுப்பப்பட்டதா என்பது தொடர்பில் தனக்கு நிச்சியமாக கூற முடியாது எனவும், தமக்கு கீழ் கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ளும் பல உப பிரிவுகள் இருப்பதாகவும் அதில் எந்த பிரிவினால் இந்த சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளது என தனக்கு தெரியாததனால் அது குறித்து ஆராய்ந்து நமக்கு அறிவிப்பதாக சுட்டிக்காட்டினார்.
எனவே அது குறித்த விபரங்களை செயலாளர் வழங்கிய பின்னர் இந்த கட்டுரையில் நாம் அதனை இணைப்பதற்கு காத்திருக்கின்றோம்.
1000 தேசிய பாடசாலைகள் திட்டம்
“1000 தேசிய பாடசாலைகள்” திட்டம் என்பது இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள 1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மேம்படுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதன் மூலம், அந்த பாடசாலைகளின் கல்வித் தரம் உயர்த்தப்பட்டு, மாணவர்களுக்கு சிறந்த கல்வி வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில், விஞ்ஞான ரீதியான தர அளவீடுகளின் அடிப்படையில், தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. இந்தத் திட்டமானது, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் ஒரு பகுதியாகும்
ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள மூன்று பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்படுமென அப்போது அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு தலா 2 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது.
குறித்த பணத்தினை பயன்படுத்தி அப்பாடசாலைகளுக்கு பெயர்ப்பலகைகளும் நினைவுப்பலகைகளும் தயாரிக்கப்பட்டு தேசிய பாடசாலையாக்கும் வைபவம், பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இனிதே நடத்தப்பட்டுள்ளது. சில பாடசாலைகளில் மாணவர்களுக்கு போதிய மலசலகூட வசதிகள்கூட இல்லாத நிலையிலும், இந்த பணத்தை பெயர்ப்பலகைகளுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். அதாவது, இப்பாடசாலைகள் பெயரளவில் தேசிய பாடசாலைகளாக மாறியுள்ளபோதும், நடைமுறையில் மாகாண பாடசாலைகளாகவே உள்ளன. Link
தேசிய பாடசாலைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 23 பாடசாலைகளின் பெயர்கள் பின்வருமாறு
- கல்கிஸ்ஸ விஞ்ஞான கல்லூரி,
- கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர வித்தியாலயம்,
- தொம்பே தேவி பாலிகா மகா வித்தியாலயம்,
- வாதுவ மத்திய மகா வித்தியாலயம்,
- கொல்வின் ஆர். டி. சில்வா வித்தியாலயம்,
- ராஜசிங்க மகா வித்தியாலயம்,
- ஹட்டன் புனித கெப்ரியல் வித்தியாலயம்,
- விலஹந்துவ ஜனாதிபதி மகளிர் வித்தியாலயம்,
- புஹூல்வெல்ல மத்திய மகா வித்தியாலயம்,
- புவக்தண்ட தம்மபால மகளிர் வித்தியாலயம்,
- பேதுருதுடுவ மெதடிஸ்ட் உயர் மகளிர் கல்லூரி,
- பலாலி மத்திய கல்லூரி,
- கல்முனை முஹம்மது மகளிர் கல்லூரி,
- மஹதிவுல்வெல மகா வித்தியாலயம்,
- உஹூமீய டி. எஸ். சேனாநாயக்க மகா வித்தியாலயம்,
- லுணுவில பௌத்த மகளிர் வித்தியாலயம்,
- தம்புத்தேகம மஹா வித்தியாலயம்,
- கெக்கிராவ வித்தியாரத்ன வித்தியாலயம்,
- சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம்,
- பிபிளை யசோதரா மகளிர் கல்லூரி,
- குருவிட்ட மத்திய கல்லூரி,
- ரத்நாக புனித ஜோன் தமிழ் வித்தியாலயம்,
- கேகாலை ஸ்வர்ணஜயந்தி மகா வித்தியாலயம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலையாக அங்கீகரக்கப்பட்ட பாடசாலைகளின் தேசிய பாடசாலை அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன் அவ்வாறான எந்த அறிவிப்புகளும் அராசங்கத்தினால் வெளியிடப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் குறித்த 1000 பாடசாலைகளில் 23 பாடசாலைகள் மாத்திரமே தேசிய பாடசாலை அந்தஸ்த்துடன் இருப்பதாகவும் ஏனைய பாடசாலைகs; பெயர் பலகையில் மாத்திரமே தேசிய பாடசாலையாக காணப்படுவதாகவும் அவற்றை அடையாளம் கண்டு தேசிய பாடசாலை தரத்திற்F உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:கடந்த அரசினால் வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்த்து தற்போதைய அரசினால் ரத்து செய்யப்பட்டதா?
Fact Check By: suji shabeedharanResult: Missing Context
