மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு நடத்தப்படுகிறதா?

Misleading அரசியல் இலங்கை | Sri Lanka

கடந்த நாட்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளும் குழுவைச் சேர்ந்தவர்கள் கொலைசெய்யப்பட்டதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது.

எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொணடது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு  குறித்து மேலும் நடவடிக்கைகள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட, மீளாய்வு செய்யவோ அல்லது குறைக்கப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு மதிப்பாய்வுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க மனதுங்க தெரிவித்திருந்தார். என தெரிவிக்கப்பட்டு நேற்று 2025.02.24 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் 224 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சில சிங்கள ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தமையை எம்மால் காண முடிந்தது.

Facebook | Archived Link

Newshub.lk

Fact Check (உண்மை அறிவோம்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை 67 ஆகக் குறைக்க, பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், கடந்த டிசம்பர் மாத இறுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு  வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பு தவிர, அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து முப்படை பாதுகாப்புகளும்  திரும்பப் பெறப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.

தற்போதைய அரசாங்கத்தால் அகற்றப்பட்ட தனது பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்திருந்ததுடன் மேலும் அந்த மனுவை மார்ச் 19 ஆம் திகதி பரிசீலனைக்குக் உட்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி உத்தரவிட்டது.

பாதுகாப்பு அமைச்சு 

எனவே, மார்ச் 19 ஆம் திகதி அன்று உச்ச நீதிமன்றத்தினால் மஹிந்த ராபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பு, அகற்றப்பட்ட அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மீண் டும் அழைப்பது குறித்தோ அல்லது பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தோ ஏதேனும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றனவா என நாம்  பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்னாவிடம் வினவியபோது. இது முற்றிலும் தவறான தகவல் என்றும், இதுவரை அப்படி எந்த முடிவோ அல்லது கலந்துரையாடல்களோ இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

மேலும் நாம் இது தொடரபில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க அவர்களிடம் வினவியபோது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது எனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குறைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் இதுவரை எந்தவிதமான மீள் ஆய்வுகளும் இடம்பெறவில்லை எனவும், அது தொடர்பில் உயர் மட்டத்தில் எந்தவிதமான கலந்துரையாடல்களும் இதுவரை இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர்

இது குறித்து நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகேவிடம் கேட்டபோது, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தவறானது என்றும் இதுவரை அவரின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு நடத்தப்படுவதாகவோ அல்லது அது குறித்த எந்தவித தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவோ தமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பான அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம்,  மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்மானம் குறித்து நாம் வினவினோம்.

இதன்போது மீண்டும் விசாரணைக்கு வரும் வரை மனு தொடர்பாக ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக  நீதிமன்றம் தனக்குத் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினார்.


அத்தோடு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

எனவே அது குறித்து நாம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவிடம் வினவியபோது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தமையை தொடர்ந்து, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் பாதுகாப்பை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் சமீபத்தில் பாராளுமனறத்தில்  கோரிக்கை விடுக்கப்பட்டது.


பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரண ஊடக வலையமைப்பிற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்ததாக  அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில்  குறிப்பிட்டுள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிய அவர், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இது தொடர்பாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆளும் கட்சியைச் சேர்ந்த எந்த பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு குறித்து கோரிக்கைகள் விடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில்  அறிக்கையொன்றை வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அந்த அறிக்கைகளை பரிசீலித்த பிறகு, தேவைப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ்  பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களின்  வீடுகள் மற்றும் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு பொலிஸ் நிலைய மட்டத்தில் சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்ததாக அந்த செய்திக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Link

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை மேற்கொள்ளும் கனேமுல்ல சஞ்ஜீவ கடந்த 19 ஆம் திகதி கொழும்பு –  புதுப்படை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதனை தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற பல தொடர் கொலைகளின் பின்னணியிலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: கனேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர் குறித்து பரவும் பதிவுகளின் உண்மை என்ன?

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் மீளாய்வுகள் இடம்பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல்கள் தவறானது என்பதுடன் இதுவரை அவ்வாறான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெளிவாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு நடத்தப்படுகிறதா?

Fact Check By: Suji Shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *