
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தின் பின்னணியில், ஈரான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஹெலிகாப்டர் மற்றும் F-14 போர் விமானங்களின் படங்களை நிலத்திலேயே முப்பரிமாண (3D) வடிவில் வரைந்து, அவை உண்மையான விமானங்கள் போலத் தோன்றுமாறு செய்து அவற்றை போர்த் தந்திரமாக பயன்படுத்தியதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில் கோடிக்கணக்கான டாலர் செலவில் ஒரு போலி இலக்குத் தாக்குதல்: அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்பட்ட நிதிச் சவால்.
அமெரிக்காவின் அதிநவீன செயற்கைக்கோள்களையும் ஏமாற்றி, ஒவ்வொன்றும் 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளைக் கொண்டு வெறும் தரையிலுள்ள சித்திரங்களைத் தாக்கச் செய்ததன் மூலம் அமெரிக்காவிற்குப் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை ஈரான் ஏற்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை விடவும், புத்திசாலித்தனமான தற்காப்பு வியூகமே ஒரு போரின் போக்கை மாற்றும் என்பதற்கு இதுவே சான்று என தெரிவிக்கப்பட்டு கடந்த 2026.03.07 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சர்வதேச முக்கிய ஊடகங்களில் இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை
ஈரான் 3D வடிவில் விமானங்களை நிலத்தில் வரைந்ததாகவோ, அல்லது ஈரானின் விமான நிலையங்களில் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை நிலத்தில் வரைந்ததால் அவற்றை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்கியதாகவோ எந்த முக்கிய சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிடவில்லை.
மேலும், இதுகுறித்த தகவலின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஈரான் அரசாங்கம், அதன் இராணுவம் அல்லது இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அதிகாரிகள் தரப்பிலிருந்தும் எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியிட்டதாக எந்த அறிக்கைகளும் எமக்கு கிடைக்கவில்லை.
AI மூலம் உருவாக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள்
இதன் காரணமாக, இந்த காணொளி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆராய்ந்த போது, இந்த காணொளி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.


இது போன்று பகிரப்பட்ட ஏனைய சில மற்ற புகைப்படங்களும் Google-இன் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதும், அவற்றில் கண்களுக்கு தெரியாத SynthID டிஜிட்டல் Watermark உள்ளதாகவும் எங்களது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
SynthID என்பது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை அடையாளம் காண்பதற்காக Google DeepMind மூலம் உருவாக்கப்பட்ட Watermark அமைப்பாகும்.
இந்த Watermark இருப்பது, இந்த படங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்பதை காட்டுகிறது.

அதேபோல் ஈரானின் MI-17 ஹெலிகாப்டரை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாக்கும் காணொளி ஒன்றை வெளியிட்டதற்குப் பின்னர், ஈரான் தரப்பில் 3D விமானங்களை நிலத்தில் வரைந்து ஏமாற்று உத்திகளை பயன்படுத்தியதாகக் கூறும் ஊகங்கள் மற்றும் தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின.
எனினும், மேலே குறிப்பிடப்பட்ட காணொளி தவறாக வழிநடத்தும் வகையில் பகிரப்பட்டுள்ளது என்பதனை அறிமுடிகின்றது. அந்த காட்சிகள் இஸ்ரேல் இராணுவத்தின் X கணக்கில் வெளியிடப்பட்டவை, ஈரானுடன் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்பட்ட போர் மோதல்களின் காலகட்டத்தில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளன..
எனவே, அந்த காணொளி 2026 மார்ச் மாதத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் என தெரிவிக்கும் விடயம் தவறானது என்பதனை அறியமுடிகின்றது.
குறித்த காணொளியில் கீழே இருக்கும் ஒரு ஹெலிகொப்டரின் மீது குண்டு வீசப்படும் காட்சி காட்டப்படுகின்றது. ஆனால் அந்த வெடிப்பு நடந்த பின்னரும் அந்த உருவம் மாற்றமின்றி அப்படியே இருப்பதை கவனிக்க முடிகிறது.
எனினும், ஈரான் இவ்வாறான போர் உத்திகளை பயன்படுத்தியதாகவோ அல்லது இப்படியான ஏமாற்று முறைகளை ஈரான் பயன்படுத்துகிறது என்பதைக் உறுதிப்படுத்தும் நம்பகமான எந்த அறிக்கைகளும் இதுவரை கிடைக்கவில்லை என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஈரான் பயன்படுத்தும் போர்த் உத்திகள்
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் சில இராணுவ அடிப்படை வசதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளன.
இராணுவ அறிக்கைகளின் படி, இந்த நடவடிக்கைகளில் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், விமானங்கள் மற்றும் ட்ரோன் வசதிகள் உள்ளிட்ட பல இலக்குகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
சில அறிக்கைகளின் படி, இந்த தாக்குதல்களில் ஈரானுக்கு சொந்தமான சில இராணுவ வளங்களும் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் S-300 வான்வழி பாதுகாப்பு அமைப்பின் பகுதிகள் மற்றும் ஈரான் வான்படைத் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில விமானங்களும் அடங்குகின்றன. Link
தவறான தகவல்களை பரப்புவதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ‘Satellite’ படங்கள்
தற்போதைய போர; சூழ்நிலையை பயன்படுத்தி, Generative AI தொழில்நுட்பத்தின் மூலம் satellite படங்களைப் போல தோன்றும் ஆனால் உண்மையல்லாத படங்களை உருவாக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
முன்னதாக, கட்டாரில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் அமெரிக்க ரேடார் உபகரணங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு செயற்கைக்கோள் satellite படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
ஆனால் பின்னர் ஆய்வாளர்கள் அது உண்மையான படம் அல்ல என்றும், பஹ்ரைனில் உள்ள மற்றொரு அமெரிக்க இராணுவ தளத்தின் 2025 ஆம் ஆண்டின் Google Earth படத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றி உருவாக்கப்பட்ட படம் என்றும் தெரிவித்தனர். Link
satellite புகைப்படங்கள் அல்லது காணொளிகளாக காட்டப்படும் படங்கள் சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவுகின்றன இதனால் நடைபெறாத சம்பவங்களையும் உண்மையாக மக்கள் நம்பும்படி செய்யக்கூடும் என்பதனை எம்மால் உணரமுடிகின்றது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்களிலிருந்து தப்பிக்க ஈரான் நிலத்தில் 3D விமானங்களை வரைந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தவறானது என்பதுடன், அந்தப் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஈரான் முன்னர் பல்வேறு போர்த் தந்திரங்களை பயன்படுத்தியதாக சில அறிக்கைகள் இருந்தாலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்தப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அத்தகைய தந்திரங்களின் உதாரணம் என்பதைக் காட்டும் நம்பகமான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


