
இலங்கையில் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் மாணவிகள் பாடசாலை சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இது குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

குறித்த பதிவில் இலங்கையில் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் பெண் மாணவிகளுக்கு பாடசாலை சீருடை கட்டாயம்.!
கல்வி அமைச்சகத்தின் புதிய அறிவிப்பின்படி, செப்டம்பர் 20, 2025 (சனிக்கிழமை) முதல், பிரத்தியேக வகுப்புகளுக்கு (Private Classes/Tuition Classes) செல்லும் பெண் மாணவிகள் பாடசாலை சீருடை (School Uniform) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முக்கிய கருத்துக்கள்:
இந்த உத்தரவு பெண் மாணவிகள் மட்டுமே சார்ந்தது.
இது பிரத்தியேக வகுப்புகள்/ட்யூஷன் கிளாஸ்கள் மட்டத்தில் பொருந்தும்.
செப்டம்பர் 20, 2025 முதல் நடைமுறைக்கு வரும்.
இந்த முடிவு மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் அடையாளம் காண்பதற்கான எளிமை போன்ற காரணங்களுக்காக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு உரிய கல்வி மற்றும் பள்ளி அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும். என தெரிவிக்கப்பட்டு இன்று (2025.09.19) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.
மேலும் பலரும் இதனை உண்மை என எண்ணி கமென்ட் செய்திருந்தமையையும் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
உண்மையில் பாடசாலை சீருடையை அணிந்து வெளியில் நடமாட வேண்டாம் என்றே பொதுவாக பாடசாலை ரீதியாகவும் மாணவர்களிடம் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவிகளின் மீது மாத்திரம் இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் ஆதாரமற்றதாகவே காணப்படுகின்றது.
எனவே சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனைப் போன்று பாடசாலை மாணவிகள் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் போது பாடசாலை சீருடையை அணிந்து செல்வதனை கட்டாயமாக்கி கல்வி அமைச்சு தீர்மானமொன்றை மேற்கொண்டிருக்குமாயின் அது குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும். எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் பிரதான ஊடகங்களில் அவ்வாறான எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை என்பது உறுதியானது.
மேலும் இவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கல்வியமைச்சினால் ஏதேனும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளனவா என கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் ஆராய்ந்த போது, அங்கு அவ்வாறான எந்த அறிக்கைகளும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
கல்வி அமைச்சு
எனவே நாம் இது குறித்து கல்வியமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரியவின் செயலாளரை தொடர்புகொண்டு வினவியபோது, இது போலியான தகவல் எனவும் இவ்வாறான எந்த தீர்மானங்களும் கல்வி அமைச்சினால் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பாடசாலை மாணவிகள் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் போது பாடசாலை சீருடை அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பகிரப்படும் தகவல் போலியானது என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் மாணவிகள் பாடசாலை சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா?
Fact Check By: Suji shabeedharanResult: False
