
INTRO:
சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சம்பளம் பெற்றுக் கொள்ளாது தமது கடமைகளை முன்னெடுக்க ஆயத்தமாக உள்ளனர் என கட்சியின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான ஆரம்ப இனக்கப்பாடு ஏட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 76 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்வது என்பது மக்களுக்கு வெறும் கனவாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் விழுந்து விடாது என சுசந்த குமார மேலும் தெரிவித்துள்ளார்” இம் மாதம் 18 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (18.11.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் இது குறித்து உண்மை தன்மையினை கண்டறிய தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள சுசந்த குமாரவை நாம் தொடர்புக்கொண்டோம்.
இணையத்தில் பரவுவதை போன்று ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்து எவ்விதமான பிரதான ஊடகங்களிலும் காணப்படாததால், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமாரவிடம் விசாரணைகளை மேற்கொண்டோம். குறித்த கருத்து சற்று தவறாக வழிநடத்தும் வகையில் சில செய்திகள் பதிவாகியுள்ளன என எமக்கு அவர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் கட்சியின் நிதிக்கு அனுப்பப்படும் எனவும், அதற்கான தான் சம்பளத்தை பெற்றுக் கொள்வதாக கூறியதையும், கட்சியின் நிதிக்காக குறித்த சம்பளத்தினை வழங்குவதை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட குறிப்புகளில் சேர்க்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சுசந்த குமார் வெளியிட்ட அறிக்கை அடங்கிய ஊடகவியலாளர் சந்திப்பின் வீடியோ உள்ளதா என நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, அது இதுவரை எங்களால் கண்டுபிடிக்கப்படாததால், அவர் கூறிய கருத்து தொடர்பான உண்மைகளை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
ஆகவே அக்கட்சியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பெறாமல் கடமைகளை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்தோம்.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட சம்பளத்தை கட்சியின் நிதிக்கு வழங்குவது குறித்து முன்னைய அரசாங்கங்களின் அங்கம் வகித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பான உண்மைகளை ஆராய்ந்தோம்.
இது குறித்து தேசிய மக்கள் சக்தியிடம் கேட்டபோது, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை பெற்றுள்ளதாகவும், ஆனால் அந்த பணம் சொந்த தேவைக்கு பயன்படுத்தப்படாமல் கட்சியின் நிதிக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆனால் தேசிய மக்கள் சக்தியின் கீழ் நியமனம் செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் கட்சியின் நிதிக்கு மாற்றப்படுமா இல்லையா என்பது குறித்து எந்த ஒரு குறிப்பிட்ட முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதன்படி, அக்கட்சியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் ஏற்கனவே சம்பளம் வழங்கியுள்ளதாகவும், கட்சி மற்றும் அந்த உறுப்பினர்களின் கூற்றுப்படி அந்த கொடுப்பனவுகள் கட்சியின் நிதிக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இது குறித்தான மேலதிக தகவல்களை பெறுவதற்காக நாம் பாராளுமன்றத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விசாரணையினை மேற்கொண்டுள்ளோம் குறித்த தகவல் கிடைத்ததன் பின்னர் இந்த ஆய்வறிக்கையில் அதனை பதிவேற்றம் செய்கின்றோம்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், – சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பகிரப்படும் தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title: சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என்ன தெரியுமா?
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team