
இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்திற்குள் வந்த மற்றுமொரு ஈரான் கப்பலில் 300 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்து சமூக ஊடகஙடகளில் பல தகவல்கள் பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link
கு𝗝𝗨𝗦𝗧 𝗜𝗡: இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்தில் (Exclusive Economic Zone) மற்றொரு ஈரான் கப்பல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கப்பலில் உள்ள சுமார் 300 குழந்தைகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதற்காக, கப்பலை 24 மணிநேரத்திற்கு இலங்கையின் ஒரு துறைமுகத்தை அடைய அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
இந்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும், மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதாபிமான ரீதியாகவும் முடிவெடுக்க வேண்டும் அதேபோல தனது தேசத்துக்கும் பாதுகாப்பு தரும் முடிவை எடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இலங்கை அரசுக்கு வந்து சேர்ந்துள்ளது. என தெரிவித்து 2026.03.05 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற Milan 2026 naval exercise கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கச் சென்ற ஈரானிய கடற்படையின் மூன்று கப்பல்களில் ஒன்றான IRIS Bushehr கப்பல் சமீபத்தில் பானந்துரைக்கு அப்பாலுள்ள இலங்கையின் தனிப்பட்ட பொருளாதார கடல்பரப்பிற்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், அந்தக் கப்பலில் இருந்தவர்கள் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களிலும் இலங்கை அரசிடம், நாட்டின் ஒரு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டது.
மேலும் IRIS Dena கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில், IRIS Bushehr கப்பலின் பாதுகாப்பு குறித்து சிக்கல் ஏற்பட்ட சூழலில், அந்தக் கப்பல் தொடர்பாக தீர்மானம் எடுக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், அந்தக் கப்பலை இலங்கை ஏற்க இருப்பதாக அறிவித்ததாக கூறி, பிரதான ஊடகங்கள் அந்த செய்தியை வெளியிட்டிருந்தன.Link
208 கடற்படை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஈரான் கடற்படைக்கு சொந்தமான IRIS Bushehr கப்பல், இலங்கையிடமிருந்து மனிதாபிமான உதவி கோரியதாகவும், அதன் அடிப்படையில் மார்ச் 5 அன்று அந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்தக் கப்பலில் இருந்த 208 கடற்படை அதிகாரிகளில் 84 பேர் பயிற்சி பெறும் இளம் அதிகாரிகள் (கெடெட் வீரர்) எனவும், அவர்களை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்ததாகவும் அந்த செய்தியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.Link
ஆனால், அந்தக் கப்பலில் 300 குழந்தைகள் இருந்ததாக எந்தவிதமான குறிப்பும் ஈரான் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

IRIS Bushehr கப்பலில் இருந்தவர்களை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்த காணொளியை BBC செய்திச் சேவை வெளியிட்டிருந்தது. அந்தக் காணொளியிலும் 300 குழந்தைகள் இருப்பதாக எந்தக் காட்சியும் காணப்படவில்லை.
கப்பலில் 300 குழந்தைகள் தெரிவிக்கப்பட்ட தகவல் போலியானது – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
IRIS Bushehr கப்பல் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பின் போது, கப்பலில் 300 குழந்தைகள் இருந்ததாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எழுப்பிய உண்மை குறித்து ஒரு பத்திரிகையாளர் வினவியபோது, அந்தக் கப்பலில் 300 குழந்தைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட தகவல் போலியானது என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை இங்கே காணலாம்.
ஜனாதிபதி அவர்கள் அந்தக் கப்பலில் உள்ளவர்களைப் பற்றியும் இதன் போது கூறினார். 208 பேர் கரைக்கு அழைக்கப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளனர். இதில் 53 அதிகாரிகள், 84 பயிற்சி பெறும் கேடெட் வீரர்கள், 48 மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் 23 கடற்படை வீரர்கள் அடங்கியுள்ளனர்.
மேலும், அந்த குழுவை முதலில் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு சென்று, பின்னர் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கடற்படையின் ஊடகப் பேச்சாளர்
கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத், ஜனாதிபதி அநுர குமார கூறிய கருத்துக்களை உறுதிப்படுத்தியதோடு, கப்பலில் 300 குழந்தைகள் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இலங்கையால் மீட்கப்பட்ட இரண்டாவது ஈரானிய கப்பலான IRIS Bushehr இல் 300 குழந்தைகள் இருந்ததாகக் கூறப்படும் தகவல் தவறானது என்பதுடன் IRIS Bushehr கப்பலில் இருந்த 208 பேரில் 53 அதிகாரிகள், 84 பயிற்சி பெறும் கேடெட் வீரர்கள், 48 மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் 23 கடற்படை வீரர்கள் மாத்திரமே அடங்குவர் என்பதை ஜனாதிபதி அநுரகுமார அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


