சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான நபர் ஸ்ரீதரனின் சகாவா?

Misleading அரசியல் இலங்கை | Sri Lanka

கடந்த 13 ஆம் திகதி 16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான நபர் இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை இணைப்பாளராகவும் ஸ்ரீதரனின் முழங்காவில் பிரதேச இணைப்பாளராக செயற்பட்டு வந்தததாகவும், ஸ்ரீதரனின் தனிப்பட்ட இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link 

குறித்த பதிவில் ஸ்ரீதரனின் விசேட பாதுகாப்பில் இருந்த சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளி அதிரடி கைது.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 16 மாணவ சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி வந்த இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை இணைப்பாளராகவும் ஸ்ரீதரனின் முழங்காவில் பிரதேச இணைப்பாளராகவும் செயற்பட்டு வந்த அலன் என்பவர் இன்று பொலீசாரினால் இல 882, ஆறுமுகம் வீதி வட்டக்கச்சி கிளிநொச்சி என்ற சிறீதரனின் தனிப்பட்ட இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் பொலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேரடியாக பேசி குறித்த கைதை தவிர்க்கும் படி கேட்டிருந்த போதும் இச்சம்பவம் மனித உரிமைகள் ஆணைக்குழு வரைக்கும் சென்று இருந்தபடியால் குறித்த குற்றவாளி கைது செய்யப்படுவதை தவிர்க்க முடியாத நிலை இருப்பதாக பொலீசாரால் சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.04.13 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பலர் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட தகவல் குறித்த உண்மையை ஆராயும் நோக்கில் இது குறித்த செய்தி பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்தோம்.

இதன்போது கடந்த 13 ஆம் திகதி கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்  சந்தியோ அலன்டீலன் என்ற விளையாட்டு பயிற்றுநர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நபர் கடந்த 13 ஆம் திகதி கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸாரினால்   கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் வைத்து கைது செய்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தி அறிக்கைகளை எமக்கு காணக்கிடைத்தது. Link | Link 

எனினும் இந்த செய்திகளில் குறித்த நபர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் தனிப்பட்ட இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவோ அவர் இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை இணைப்பாளராகவும் ஸ்ரீதரனின் முழங்காவில் பிரதேச இணைப்பாளராகவும் செயற்பட்டு வந்ததாகவோ எந்த தகவல்களும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்

எனவே இந்த விடயம் குறித்த முழுமையான தகவலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.

இதன்போது கைது செய்யப்பட்ட அலன்டீலன் என்ற நபர் இலங்கை தமிழரசுக் கட்சியில் ஒரு உறுப்பினராக மாத்திரமே செயற்பட்டவர் எனவும் தற்போது இந்த சம்பவத்தின் பின்னர் அவர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று கைதான நபர் இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை இணைப்பாளராகவும் ஸ்ரீதரனின் முழங்காவில் பிரதேச இணைப்பாளராகவும் செயற்பட்டார் என்பது போலியான தகவல் எனவும் அவர் தெரிவித்தார்.

குவேந்திரன் என்பவரே தற்போது முழங்காவில் பிரதேச தலைவராக செயற்பட்டு வருவதாகவும், குணபாலசிங்கம் குணராஜ் என்பவரே இலங்கை தமழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் விவகார தலைவராக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த பேஸ்புக் பக்கத்தில் தன்னை பற்றி தவறான தகவல்கள் பகிரப்படுவது தொடர்பில் தான் பொலிஸின் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பூனேரி பிரதேச தலைவர்

குறித்த விடயம் தொடர்பில் நாம் இலங்கை தமிழரசுக் கட்சியின் பூனேரி பிரதேச தலைவர் குவேந்திரனை தொடர்பு கொண்டு வினவியபோது பூனேரி பிரதேசத்தில் உள்ளடங்கும் ஒரு இடமே முழங்காவில் எனவும் முழங்காவில் வட்டார தலைவராக தற்போது கண்தாசன் என்பவர் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் முழங்காவில் பிரதேச இணைப்பாளராக செயற்பாட முடியாது எனவும் குறித்த சமூக ஊடகப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் விவகார தலைவர்

மேலும் இது குறித்து நாம் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் விகார தலைவாரான குணபாலசிங்கம் குணராஜ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் தவறானது எனவும் தான் 2022 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் விகார தலைவாராக செயற்பட்டு வருவதாகவும் அதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் ஜோன் தனராஜ் என்பவரே தலைவராக செயற்பட்டு வந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான அலன்டீலன் என்பவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடை நிறுத்தப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமையையும் காணக்கிடைத்தது. Link 

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

இது குறித்த மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.

இதன்போது கடந்த 2025.04.13 ஆம் திகதி 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்ததேகத்தின் பேரில் அலன்டீலன் என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், இவர் கிளிநொச்சி அறிவியல் நகர்பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்கும் போதே கைது செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2025.05.09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த சமூக ஊடகப்பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று அலன்டீலன் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் தனிப்பட்ட இல்லத்தில் வைத்து கைது செய்யப்படவில்லை எனவும் அவ்வாறு தெரிவிக்கப்பட்ட விடயம் போலியானது எனவும் அவர் தெரிவித்தார்.

பிராந்திய ஊடகவியலாளர்கள்

இது குறித்து நாம் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களிடம் வினவியபோது கைது செய்யப்பட்ட நபர் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றவர் மாத்திரமே தவிர அவர் வேறு எந்த பதவிகளையும் வகிக்கவில்லை எனவும் ஸ்ரீதரன் அவர்களின் தனிப்பட்ட இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பகிரப்படும் தகவல்கள் தவறானவை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதான அலன்டீலன் என்பவர் இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை இணைப்பாளர் எனவும் ஸ்ரீதரனின் முழங்காவில் பிரதேச இணைப்பாளராக செயற்பட்டு வந்தததாகவும், ஸ்ரீதரனின் தனிப்பட்ட இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே  அவர் கைது செய்யப்பட்டதாகவும் பகிரப்படும் தகவல்கள் தவறானவை என்பது தெளிவாகின்றது.

அத்துடன் கைதான குறித்த நபர் இலங்கை தமிழரசுக் கட்சியில் ஒரு உறுப்பினராக மாத்திரமே செயற்பட்டவர் எனவும் தற்போது இந்த சம்பவத்தின் பின்னர் அவர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்பதுவும்  புலனாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான நபர் ஸ்ரீதரனின் சகாவா?

Fact Check By: suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *