
இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் நிலவும் இந்த போர் நிலைமையானது மத்திய கிழக்கு நாடுகளையும் பெரிதும் பாதித்துள்ளது. அந்தவகையில் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களை நோக்கி ஈரான் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் இடம்பெறும் தாக்குதல்கள்கள் காரணமாக சவுதி நாட்டிலிருந்து மக்கள் வெளியேறுவதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில் சவுதி நாட்டில் இருந்து வெளியேறும் மக்கள் என தெரிவித்து கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் சமூக ஊடகங்களில் பலரும் இதனை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இந்த யுத்த சூழ்நிலை காரணமான உண்மையில் மக்கள் சவுதியில் இருந்து வெளியேறியிருப்பார்களாயின், யுத்த நிலைமைகள் தொடர்பில் தொடர்ந்து தகவல்களை வழங்கி வரும் பிரதான சர்வதேச ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பதனை அறியமுடிந்தது.
மேலும் நாம் இந்த காணொளியை நன்கு அவதானிக்கும் போது அதில் குறிப்பிட்ட சிலர் மாத்திரமே சில பொருட்கள் அடங்கிய பைகளுடன் வீதிகளில் ஒடுவதனை காணமுடிகின்றது. ஆனால் ஏராளமானோர் அது குறித்து எந்த தடுமாற்றங்களும் இன்றி சாதாரணமாக நிற்பதனை அவதானிக்க முடிகின்றது.
இந்த போர் நிலைமைகளுக்கு பயந்தோ அல்லது ஏவுகணைத் தாக்குதலுக்கு அச்சமடைந்தோ மக்கள் ஓடுகின்றார்களாயின் குறிப்பிட்ட சிலர் மாத்திரம் எவ்வாறு ஓடமுடியும் அல்லது, அவ்வாறு ஒருசிலர் ஓடும் போது ஏனையவர்கள் எந்த பதற்றமும் இன்றி நிற்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றமையினால் நாம் இந்த காணொளின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
இதன்போது, கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இன்ஸ்டகிராம் பக்கமொன்றில் குறித்த காணொளியானது வெளியாகியிருந்தமை கண்டறியப்பட்டது.
அதில் “இது மக்காவில் மாத்திரமே” என தெரிவிக்கப்பட்டு இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது. ஆகவே குறித்த காணொளியில் பதிவிடப்பட்டிருந்த கமென்ட்கள் தொடர்பில் நாம் ஆராய்ந்தபோது, அதில் ஒரு கமென்ட்டில் “இவர்கள் நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள், வீதிகளில் பல்வேறு பொருட்களை விற்கிறார்கள். அவர்களிடம் பொதுவாக சரியான ஆவணங்கள் இருக்காது, மேலும் பொலிஸார் வந்ததும், அவர்கள் ஓடிவிடத் தொடங்குவார்கள்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் “மக்கா ஒரு சந்தை”, “ஆம் அவர்கள் பொலிஸாரை கண்டதும் ஓடிவிடுவார்கள்” என பல்வேறு கமென்ட்கள் இருந்ததனையும் காணமுடிந்தது.

அதேபோன்று இந்த காணொளியானது மக்காவில் இடம்பெற்ற சம்பவம் என தெரிவித்து பலரும் சமூக ஊடகங்களில் ஜனவரி மாதத்தில் இந்தகாணொளியை பகிர்ந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.Link

அதேபோன்று குறித்த காணொளியில் சிலர் ஓடும் போது ஏனையவர்கள் சாதாரணமாக இருப்பதைக்கொண்டு இது மக்காவில் அன்றாடம் நடைபெரும் ஒரு செயல் என்பதனையும் உணரமுடிகின்றது.
மேலும் மேற்குறிப்பிட்ட காணொளிகள் ஜனவரி மாத்திலேயே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. ஆனால் ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான போர் நிலையானது பெப்ரவரி 28 ஆம் திகதியே ஆரம்பிக்கப்பட்டது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் போர் நிலைமை காரணமாக சவுதி மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன் அது சவுதியின் புனித மக்கா நகரில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பொலிஸாரை கண்டு ஓடுவதனை காட்டும் காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
மேலும் மக்காவில் உம்ரா காலங்கள் உள்ளிட்ட பரபரப்பான காலங்களில் இவ்வாறு இடம்பெறுவது சாதரணம் ஆகவே இந்த நபர்கள் போர் பதற்றம் காரணமாக சவுதியில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுவதற்கு எந்த நம்பத்தகுந்த ஆதாரங்களும் இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


