போர்டா நிக்ராவில் இடம்பெற்ற அகழ்வராய்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

சர்வதேசம் | International

ஜெர்மனியின் ட்ரையர் நகரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க  போர்டா நிக்ராவில் (Porta Nigra) இடம்பெறும் அகழ்வாராய்ச்சி என குறிக்கும் விதத்திலான புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றமையை காண முடிந்தது.

எனவே அந்த புகைப்படத்துடன் அது தொடர்பான சில தகவல்களும் பகிரப்பட்டு வருவதனைத் தொடர்ந்து அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட்  கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட மூன்று முதல் நான்கு தளங்களின் கண்டுபிடிப்பு நம்பமுடியாத கண்டுபிடிப்பாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில், இது ஜெர்மனியின் ட்ரியரில் அமைந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க ரோமானிய அமைப்பான போர்டா நிக்ரா ஆகும். லத்தீன் மொழியில் “கருப்பு வாயில்” என்று பொருள்படும் போர்டா நிக்ரா, கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பண்டைய நகர வாயில் ஆகும். இது உலகின் ரோமானிய கட்டிடக்கலையின் சிறந்த பாதுகாக்கப்பட்ட எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக நிற்கிறது மற்றும் நீண்ட காலமாக ட்ரியரின் வளமான வரலாற்றின் அடையாளமாக இருந்து வருகிறது. நகரத்தின் கோட்டைகளின் ஒரு பகுதியாக முதலில் கட்டப்பட்ட இந்த வாயில், பின்னர் ஒரு தேவாலயமாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் பல நூற்றாண்டுகளாக பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டது.

பூமிக்கு அடியில் கட்டமைப்பின் புதைப்பு காலப்போக்கில் சுற்றியுள்ள நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களால் ஏற்படுகிறது. ட்ரையர் விரிவடைந்தவுடன், நகரத்தின் தரை மட்டம் படிப்படியாக உயர்ந்து, இறுதியில் வாயிலின் சில பகுதிகளை மூடியது. இன்று காணக்கூடியது போர்டா நிக்ராவின் மேல் பகுதி மட்டுமே, அதே நேரத்தில் கீழ் தளங்கள் ஒரு காலத்தில் மண் மற்றும் வண்டல் அடுக்குகளுக்கு அடியில் மறைந்திருந்தன. தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் வாயிலின் கட்டுமானத்தின் முழு அளவையும் கண்டுபிடித்துள்ளன, இது பல நூற்றாண்டுகளாக புதைக்கப்பட்டிருந்த மறைக்கப்பட்ட தளங்களை வெளிப்படுத்துகிறது.

இன்று, போர்டா நிக்ரா ரோமானிய பொறியியல் மற்றும் ட்ரையர் நகரத்தின் வரலாற்று முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாக பெருமையுடன் நிற்கிறது. பார்வையாளர்கள் அதன் பழங்கால சுவர்களை ஆராய்ந்து நகரத்தின் காட்சிகளை மேலிருந்து ரசிக்கலாம். மறைக்கப்பட்ட தளங்களை வெளிக்கொணர்வது இந்த அற்புதமான கட்டமைப்பின் சூழ்ச்சியையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் அதிகரிக்கிறது, ரோமானியப் பேரரசின் கடந்த காலத்தையும் கட்டிடக்கலைத் திறமையையும் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.

மகேஷி தேஷானி என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.02.08 பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும இது குறித்த உண்மை அறியாத பலரும் அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

போர்டா நிக்ரா (Porta Nigra) ஜெர்மனியில் உள்ள ஒரு பிரபலமான வரலாற்று நினைவுச் சின்னமாகும். ரோமானியக் கட்டுமான வாயிலான இது ஜெர்மனியின் ட்ரையர் நகரில் அமைந்துள்ளது. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு நினைவுச்சின்னமாகும். இந்தக் கட்டிடம் கி.பி 170 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.

யுனெஸ்கோவினால் உலகின் பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்ட ஒரு கட்டிடத்தில் அகழ்வாராய்ச்சிகள் இடம்பெற்றிருப்பின் அது தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனவே நாம் அது குறித்து ஆராய்ந்தபோது, அவ்வாறான எந்தவொரு செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை

ஆனால் குறித்த சமூக ஊடகப் பதிவில் இன்று நாம் போர்டா நிக்ராவின் மேல் பகுதியை மாத்திரமே பார்வையிடுவதாகவும் அதன் கீழ் தளங்கள் ஒரு காலத்தில் மண் மற்றும் வண்டல் அடுக்குகளுக்கு அடியில் மறைந்திருந்ததாகவும்  தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின் மூலம்  இந்த வாயிலின் கட்டுமானத்தின் முழு அளவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,  இது பல நூற்றாண்டுகளாக புதைக்கப்பட்டிருந்த மறைக்கப்பட்ட தளங்களை வெளிப்படுத்துகிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் குறித்த படத்தினை நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆராய்ந்த போது குறித்த புகைப்படமானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதனை கண்டறிந்து பல சர்வதேச செய்தி நிறுவனங்கள் அறிக்கையிட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது. Link | Link 

மேலும் நாம் இந்த புகைப்படத்தை  HIVE Moderation எனும் AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்த போது குறித்த புகைப்படமானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதியானது. 

மேலும் நாம் போர்டா நிக்ரா தொடர்பில் ஆராய்ந்த போது இந்த வாயில் கி.பி 170 இல் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி , இங்கே நான்கு வாயில்கள் இருந்ததாகவும் இவை நகரத்தின் வாயில்கள் எனவும் இந்த நான்கில் ஒன்று மட்டுமே இன்று எஞ்சியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது மிகவும் சக்திவாய்ந்த அமைப்பு என்றும் இதனால் தான் இந்தக் கட்டமைப்பு நீண்ட காலமாக குறிப்பிடத்தக்க சேதம் இல்லாமல் நிலைத்து நிற்கிறது எனவும் world heritage இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1804 ஆம் ஆண்டில், நெப்போலியன் போர்டா நிக்ராவில் ஏற்பட்ட  சேதத்தை சரிசெய்து அதை மீண்டும் கட்டியதாகவும்,11 ஆம் நூற்றாண்டில், சைமன்ஸ்டிஃப்ட் என்ற துறவி இந்தக் கட்டிடத்தில் சிறிது காலம் வாழ்ந்ததாகவும் வரலாற்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.Link | Link

அத்துடன் மேற்குறிப்பிட்ட ஆய்வு அறிக்கைளில் போர்டா நிக்ராவில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டதையோ அல்லது அதன் கீழ்த்தளங்கள் மண் மற்றும் வண்டல் அடுக்குகளுக்கு அடியில் மறைந்திருந்தமையையோ குறிக்கும் விதத்திலான எந்த ஆதாரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை

ட்ரையர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோட்ஃபிரைட் கெர்ஷர் மற்றும் அவரது குழுவினர் 2014 இல் போர்டா நிக்ரா தொடர்பில் மேற்கொண்ட ஆய்வறிக்கையை பார்வையிடவும் Link

மேலும் சர்வதே உண்மை கண்டறியும் நிறுவனம் ஒன்றினால் குறித்த ஆய்வை நடத்திய பேராசிரியரிடம் இது தொடர்பில் வினவப்பட்ட போது, போர்டா நிக்ரா ஒரு நகர வாயில், எனவே அது மிகவும் அகலமானது எனவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டிடத்தை விட உண்மையான கட்டிடம் மிகவும் ஆழமானது எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் போர்டா நிக்ராவின் கீழ் தளங்கள் மண் மற்றும் வண்டல் அடுக்குகளுக்கு அடியில் மறைந்திருந்ததாகவும்  தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின் மூலம்  இந்த வாயிலின் கட்டுமானத்தின் முழு அளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது பல நூற்றாண்டுகளாக புதைக்கப்பட்டிருந்த மறைக்கப்பட்ட தளங்களை வெளிப்படுத்துகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்ட புகைப்படமானது தவறானது என்பதுடன் குறித்த புகைப்படம் AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பதுவும் தெளிவாகின்றது.

மேலும் வரலாற்று ஆதாரங்கள் மற்றும்  போர்டா நிக்ரா தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு எந்தவித அகழ்வாராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுவும் உறுதியாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:போர்டா நிக்ராவில் இடம்பெற்ற அகழ்வராய்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

Written By: Suji Shabeedhran  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *