
மகாவலி ஆற்றில் வீழ்ந்த பெண்ணை பொலிஸ் அதிகாரியொருவர் காப்பாற்றிய சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து பாய்ந்த பெண்ணை ஒரு போலீஸ் அதிகாரி காப்பாற்றினார். கடுகஸ்தொட்டை காவல் பணியில், கட்டுகஸ்தொட்டை பாலத்திலிருந்து ஒரு இளம் பெண் கீழே விழுந்ததாக, அப்பகுதிக்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் 103984 ஹேரத் அதிகாரிக்கு உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, உடனடியாக செயல்படுத்தப்பட்ட அதிகாரி, பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் குதித்து அந்த இளம் பெண்ணையும் காப்பாற்றியுள்ளார். இளம் பெண் கட்டுகஸ்தொட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர்.
தற்போது அந்த இளம் பெண் மேலதிக சிகிச்சைக்காக கட்டுகஸ்தொட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என தெரிவிக்கப்பட்டு அந்த புகைப்படம் கடந்த 2025.04.11 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இந்த புகைப்படம் உண்மை என எண்ணி பலரும் கமெண்ட் செய்திருந்ததுடன், அதனை சமூக ஊடகங்கள் வழியாக பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் பிரதான ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் முதலில் ஆராய்ந்தோம்.
இதன்போது கடந்த 2025.04.10 ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளான ஹேரத், பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் குதித்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார் என்ற செய்தி பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்தமையை எம்மால் காண முடிந்தது. Link | Link | Link
எனினும் குறித்த செய்திகளில் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவில் பகிரப்பட்ட புகைப்படம் வெளியாகியிருக்கவில்லை.
எனவே இது குறித்து நாம் தொடர்ந்து ஆராய்ந்த போது இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில், உண்மையில் அந்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் காண்ஸ்டபிள் 103984 ஹேரத் அவர்களின் புகைப்படத்துடன் அவருக்கு பாராட்டு தெரிவித்து பகிரப்பட்டிருந்த ஒரு பதிவை எம்மால் காணமுடிந்தது.
இதனடிப்படையில் குறித்த சமூக ஊடகப்பதிவில் தெரிவிக்கப்பட்ட தகவல் உண்மை எனினும் அது தொடர்பில் பகிரப்பட்ட புகைப்படம் தவறானது என்பது புலனாகின்றது.
எனவே நாம் குறித்த படம் தொடர்பில் ஆராயும் போது தண்ணீரில் குதித்து அந்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரியின் தலையில் ஆற்றில் குதித்த பின்னரும் தொப்பி அணிந்திருப்பது உள்ளிட்ட சில தோற்றங்கள் செயற்கையாக காணப்பட்டமையினால், நாம் அந்த புகைப்படத்தினை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
இதன்போது குறித்த புகைப்படமானது செயற்கை நுண்ணறி தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பது உறுதியானது.
மகாவலி ஆற்றில் வீழ்ந்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி
கடந்த 2025.04.10 ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் வீழ்ந்த நிலையில், சம்பவ இடத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹேரத் (103984), உடனடியாக மகாவலி ஆற்றில் குதித்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்.
இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் வீழ்ந்ததாக பிரதேசவாசிகள் குறித்த அதிகாரிக்கு தெரிவித்ததை அடுத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் உயிர்தப்பிய பெண் கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதானவர் என தெரியவந்துள்ளது.
அந்த இளம் பெண் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் குறித்த சமூக ஊடகப்பதிவில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உண்மை எனினும் அது தொடர்பில் பகிரப்பட்ட புகைப்படம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது கண்டறிப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:மகாவலி ஆற்றில் வீழ்ந்த பெண்ணை பொலிஸ் அதிகாரி காப்பாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?
Fact Check By: suji shabeedharanResult: Missing Context
