ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார், இதனையடுத்து இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
எனவே அதன் உண்மை தன்மையை ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் President AKD in Berlin
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெர்லினின் பெல்வீவ் மாளிகையில் அரச மரியாதையுடன் வரவேற்கப்படும் காட்சி என தெரிவிக்கப்பட்டு சில புகைப்படங்கள் இன்று (2025.06.12) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதில் ஜனாதிபதியை உருவக்கேலி செய்யும் விதமாக ஒரு புகைப்படத்தினை பலரும் சமூக ஊடகங்கள் வழியாக பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (11) பிற்பகல் பேர்லினில் உள்ள பெல்லூவ் அரண்மனையில் (Bellevue Palace) ஜேர்மனிய ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரை (Frank Walter Steinmeier) சந்தித்தார்.Link
ஜனாதிபதியை அரச மரியாதையுடன் வரவேற்கும் நிகழ்வு குறித்த அரண்மனையிலேயே இடம்பெற்றது, மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படமானது இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதனால் நாம் இந்த நிகழவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டோம்.
எனவே ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த நிகழ்வின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதனை நாம் பார்க்கும் போது சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனைப் போன்று ஜேர்மனிய ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் அசாதாரண உயர வேறுபாடுகள் எதுவும் காணப்படவில்லை.
மேலும் இந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததனையடுத்து பிரதான ஊடகங்கள் வரவேற்பு நிகழ்வின் காணொளியை செய்தியாக வெளியிட்டிருந்தது.
அந்த செய்திகளை ஆராய்ந்தபோதும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதனைப் போன்று இரு நாட்டு ஜனாதிபதிகளுக்குமிடையில் அசாதாரண வேறுபாடுகள் எதுவும் காணப்படவில்லை.
எனவே நாம் இது குறித்து தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தின் உண்மையான புகைப்படமானது gettyImages இல் வெளியிடப்பட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படம் மற்றும் உண்மையான புகைப்படத்திற்கும் இடையிலான வேறுப்பாட்டை கீழே காணலாம்
அதனடிப்படையில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படமானது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது தெளிவாகின்றது.
மேலும், இந்த நிகழ்வின் புகைப்படங்கள் ஜேர்மன் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் வெளியிடப்பட்டிருப்பதைக் காணலாம், அதன் மூலமும் சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படமானது எடிட் செய்யப்பட்டது என்பதனை அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது
ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம்
ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் ( Frank – Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2025 ஜூன் 11 முதல் 13 வரையில், ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜேர்மனியின் ஜனாதிபதி, சான்சலர், கூட்டாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரச பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடுகள் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட இருநாட்டினதும் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தும் புதிய வழிகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறும் ஜேர்மன் வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை ஏற்பாடு செய்யும் வணிக மன்றத்தில் இலங்கையின் பொருளாதார மாற்றம், முதலீட்டு வாய்ப்புகள், நாட்டின் வளர்ச்சித் திறன் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் வலிறுத்தவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இவ்விஜயத்தில் ஜனாதிபதியுடன் கலந்து கொண்டுள்ளார்கள்.Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவின் ஜேர்மனிய விஜயத்தின் போது அவர் ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்த வேளையில் எடுப்பட்ட புகைப்படம் என தெரிவித்தும் இரு ஜனாதிபதிகளுக்கிடையிலான உயர வேறுபாட்டை கேலி செய்தும் பகிரப்பட்ட புகைப்படமானது உண்மையில் இரு நாட்டு ஜனாதிபதிகளும் சந்தித்த போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம் அல்ல எனவும் அந்த புகைப்படமானது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஜனாதிபதி அநுர ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்த போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படமா இது?
Fact Check By: suji shabeedharanResult: Altered
