ஈரானுடன் போரில் ஈடுபட முடியாது என இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தப்பி ஓடும் காணொளியா இது?

Misleading சர்வதேசம் | International

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் இதனுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிகின்றது.

அந்தவகையில் தற்போது ஈரானுடன் போரில் ஈடுபட முடியாது என இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தப்பி ஓடுவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link 

ஈரானுடன் போரில் இறங்க மறுக்கும் இஸ்ரேல் வீரர்கள் தப்பி ஓட்டம் என்னா அடி அடிக்கான் ஈரான்..

இதுக்குத்தான் சொல்லுறது சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானாம்

என்ன ஒரு சீராழிவு என தெரிவித்து குறித்த காணொளி கடந்த 2025.06.14 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் குறித்த காணொளியின் உண்மை அறியாத பலரும் அந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிரந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

எனவே தற்போது இடம்பெற்று வரும் இஸ்ரேல் – ஈரான் இடையேயான யுத்தத்தின் போது இஸ்ரேல் இராணுவத்தினர் பயந்து தப்பி ஓடுவதாக தெரிவிக்கப்பட்ட செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.

அதனால் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது கடந்த 

2024.11.07 ஆம் திகதி Sulaiman Ahmed என்பவரின் X தளத்தில் இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

நெதன்யாகு நேற்று பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டை பதவி நீக்கம் செய்த பிறகு இடம்பெற்ற சம்பவம் என தெரிவித்தே குறித்த காணொளியானது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

எனவே நாம் இது தொடர்பில் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் The Hindustan Gazette இன் பேஸ்புக் பக்கத்திலும் 2024 ஆம் ஆண்டு இந்த காணொளி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

குறித்த செய்தியில் இஸ்ரேலில் நிலைமை மோசமடைந்து வருகிறது எனவும் கேய்ட்லண்ட் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெதன்யாகுவுக்கு எதிராக ஒரு இராணுவ சதித்திட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என குறிப்பிடப்பட்டு இந்த காணொளியானது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த காணொளியானது தற்போதைய இஸ்ரேல் – ஈரான் போர் நிலைமைகளுடன் தொடர்புடைய காணொளி என தவறாக பகிரப்பட்டு வருகின்றமை தொடர்பில் arabic.cnn செய்தி வெளியிடப்பட்டிருந்தமையையும் காணமுடிந்தது.

குறித்த செய்தியை கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் ஆராய்ந்து பார்த்ததில் அதில் அந்த காணொளியானது தற்போதைய போர் நிலைமைகளுடன் தொடர்புடைய காணொளி அல்ல எனவும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேய்ட்லண்ட் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் வீதிகளில் இறங்கி கலவரத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளியே இது எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் நெதன்யாகுவுக்கு எதிரான இஸ்ரேலிய வீரர்களின் கிளர்ச்சியின் படங்களும் அந்த செய்தியில் இணைப்பட்டிருந்தது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து இஸ்ரேல் இராணுவத்தினர் பிரதமர் நெதன்யாகுவிற்கு  எதிராக மேற்கொண்ட போராட்டம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேய்ட்லண்ட்டை கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தகிதி அதிரடியாக பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாததால் பதவி நீக்கம் செய்வதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களாக அவர் மீது நம்பிக்கையை இழந்துவிட்டேன். இதனால் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரை அப்பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், 2023 ஆம் ஆண்டு காசாவில் போர் ஆரம்பிப்பதற்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக கேலண்ட்டை நெதன்யாகு பதவியில் இருந்து நீக்கிய சமயம் மக்களின் போராட்டத்தால் அவர் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

அதேபோல மீண்டும் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, பொது மக்களும் இஸ்ரேல் இராணுவத்தினரும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

பதவி நீக்கம் செய்தது குறித்து கேய்லண்ட் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

இஸ்ரேலின் பாதுகாப்பு தான் என்னுடைய வாழ்க்கையின் இலக்காக இருந்தது. அதுவே என் வாழ்நாள் முழுவதும் இலக்காக இருக்கும் எனவும் மூன்று முக்கியமான விவகாரங்களில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் பதிவிட்டிருந்தார். Link | Link 

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றம்


இஸ்ரேல் மீது நேற்று (16) தீவிர தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், முந்தையவற்றை விட மிகவும் வலிமையான மற்றும் அழிவுகரமானதாக இந்த தாக்குதல் இருந்ததாக ஈரான் கூறியுள்ளது.

அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த 13 திகதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள இராணுவ தளங்கள் மற்றும் முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசப்பட்டது.

மறுபுறம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வசித்து வரும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. இதன் மூலம் அங்கே தீவிர தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இரு நாடுகளும் நான்காவது நாளாக பெரும் தாக்குதல்களை பரிமாறிக் கொண்ட நிலையில், இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை தாக்குதல்கள் நடத்த உள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் நேற்று இரவு அறிவித்துள்ளன.

மேலும் இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் தீவிரமான ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருவதாகவும் ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஈரானுடன் போரில் ஈடுபட முடியாது என தெரிவித்து இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தப்பி ஓடுவதாக பகிரப்படும் காணொளி தவறானது என்பதுடன் அது கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக மக்களுடன் இணைந்து இஸ்ரேல் இராணுவத்தினர் போராட்டம் நடத்திய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title: ஈரானுடன் போரில் ஈடுபட முடியாது என இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தப்பி ஓடும் காணொளியா இது?

Suji Shabeedhran  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *