இஸ்ரேல் – ஈரான் இடையேயான யுத்தம் தொடரும் நிலையில் தற்போது இஸ்ரேல் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
இஸ்ரேலை விட்டு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி நேற்று (2025.06.19) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்த காணொளி உண்மை என எண்ணி பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே நாம் முதலில் இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக இஸ்ரேல் நாட்டு மக்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறுகின்றனர் என்பது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்தோம்.
இதன்போது ஈரானுடனான மோதல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நாட்டில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள், இராஜதந்திரிகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக் குழுக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு எதிர்வரும் திங்கட் கிழமை (2025.06.23) முதல் சிறப்பு விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளதாக Times Of Israel இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அந்த செய்தியில் அவசர மருத்துவ தேவை உடையவர்களுக்கு இதன்போது முன்னுரிமை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதேபோன்று இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் மோசமடைந்து வருவதனால் வான்,தரை மற்றும் கடல் வழியாக வெளிநாட்டினர் இஸ்ரேலிலிருந்து வெளியேற்றப்படுவதாக பிற சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. Link
எனினும் இந்த செய்திகளில் இஸ்ரேல் நாட்டினர் கொத்து கொத்தாக நாட்டை விட்டு வெளியேறுவதாகவோ அல்லது மேற்குறிப்பிட்ட காணொளியோ வெளியாகியிருக்கவில்லை.
எனவே நாம் இந்த காணொளியின் உண்மை தன்மை தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, ரஷ்ய செய்தி இணையதளமொன்றில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த காணொளியில் உள்ள ஒரு காட்சியின் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
அந்த செய்தியானது ரஷ்யமொழியில் வெளியிடப்பட்டிருந்தமையினால் நாம் அதனை கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் பார்த்த போது, 2023 ஆம் ஆண்டு ஜூன் 3, கிரோவில் எனும் இடத்தில் வெலிகோரெட்ஸ்கி (Velikoretsky) ஊர்வலம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
யாத்திரிகர்கள் இந்த பாத யாத்திரயை ஆண்டுதோறும் மேற்கொள்வதாகவும், லெனின் தெரு வழியாகவும், பின்னர் போபினோவை நோக்கிய பழைய பாலம் வழியாகவும் நடந்து சென்றனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜூன் 3 முதல் 8 வரை ஆறு நாட்கள் மத ஊர்வலம் நடைபெறும் எனவும். யாத்திரிகர்கள் சுமார் 150 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்றும் போபினோவைத் தவிர, அவர்கள் ஜாகரே, மொனாஸ்டிர்ஸ்கோ, கோரோகோவோ, முரிஜினோ, கிர்சோவோ, மெடியானி மற்றும் வெலிகோரெட்ஸ்கோ கிராமத்திற்கும் செல்வார்கள் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ரஷ்ய மக்களால் மேற்கொள்ளப்படும் இந்த பாதயாத்திரை தொடர்பில் 2023 ஆம் ஆண்டு இதே புகைப்படத்துடன் வெளியான மற்றுமொறு செய்தி அறிக்கையிடலையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது Link
நாம் மேலும் இது குறித்து ஆய்வு செய்த போது, வருடாந்தம் இடம்பெறும் VeliKoretsky பாதயாத்திரை புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் இணையதளமொன்றிலும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியின் புகைப்படமானது 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக தெரிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
அத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் மக்கள் பாலமொன்றை கடந்து செல்லும் காட்சிகள் காணப்பட்டது. எனவே அதனை நாம் ஆய்வு செய்தபோது shutterstock இல் 2023 ஆம் ஆண்டு VeliKoretsky பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட கானொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது .
அதிலும் இதுவொரு மதம் சார்ந்த பாதயாத்திரை என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
VeliKoretsky பாதயாத்திரை
14 ஆம் நூற்றாண்டில் வெலிகாயா (Velikaya) நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் புனித நிக்கோலஸின் சின்னத்தை வணங்குவதற்காக வருடாந்தம் ஜூன் 3 முதல் 8 வரை நடைபெறும் ஒரு புனித பாதயாத்திரையாகும்.
வருடாந்தம் நடைபெரும் இந்த வெலிகோரெட்ஸ்கி (VeliKoretsky) பாதயாத்திரையில் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள் பங்கேற்பர்.
இந்தப் பாதயாத்திரையானது கிரோவிலிருந்து (Kirov) வெலிகோரெட்ஸ்காய் (Velikoretskoye) கிராமம் வரை மொத்தம் 150 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது.
குறைந்தது 17,000 யாத்திரிகர்கள், முதுகுப்பைககளை சுமந்துக்கொண்டு, சில சமயங்களில் வெறுங்காலுடனும் ஊர்வலத்தில் பங்கேற்பர் என்று கூறப்படுகின்றது.
மேலும் இது ரஷ்யாவின் மிகப்பெரிய யாத்திரைகளில் ஒன்றாகும். Link | Link
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இஸ்ரேலை விட்டு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள் என தெரிவித்து பகிரப்படும் காணொளியானது 2023 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற VeliKoretsky பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
மேலும் இந்த பாதயாத்திரையானது ரஷ்யாவின் மிகப்பெரிய யாத்திரைகளில் ஒன்று என்பதுடன் இது ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இஸ்ரேலில் உள்ள வெளிநாட்டினர் மற்றும் இராஜதந்திரிகள் மாணவர்கள் மற்றும் அவசர மருத்துவ தேவை உடையோரை மாத்திரம் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது இஸ்ரேலிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இஸ்ரேலை விட்டு மக்கள் வெளியேறும் காணொளியா இது?
Written By: Suji ShabeedhranResult: Misleading
