ஹொங்கொங்கை சூறாவளி தாக்குவதாக பகிரப்படும் பழைய காணொளி….!

Misleading சர்வதேசம் | International

ஹொங்கொங்கில் சூறாவளி தாக்கம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது.

எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

ஹொங் கொங் சூறாவளி தாக்கம் ஆரம்பம்.! என தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.09.23) குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

ரகாசா சூறாவளியானது ஹொங்கொங்கை தாக்கி வருவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை எமது ஆய்வுகளின் போது காணமுடிந்தது.Link| Link

எனினும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியானது குறித்த செய்திகளில் வெளியாகியிருக்கவில்லை. 

எனவே குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, SBS News இன் X தளத்தில் குறித்த காணொளியானது கடந்த 2018 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

அதில் Mangkhut சூறாவளி ஹொங்கொங்கை தாக்கியபோது எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2018 ஆம் ஆண்டு செம்டம்பர் 16 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

எனவே நாம் இது குறித்து மேலும் ஆராய்ந்த போது, The Sun செய்தி இணையதளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு Mangkhut சூறாவளி ஹொங்கொங்கை தாக்கிய போது வெளியான செய்தியில் குறித்த காணொளி இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 2018 ஆம் இதே காணொளி மேலும் சில X தளங்களில் பதிவிடப்பட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

ஹொங்கொங்கை தாக்கி வரும் ராகசா புயலின் நிலை

இந்த ஆண்டின் உலகின் மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான ராகசா, பலத்த காற்று மற்றும் மழையுடன் ஹொங்கொங்கை தாக்கி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆசிய நிதி மையத்தின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் சூறாவளி காரணமாக பாரிய கடல் அலைகள் உருவாகி, குடியிருப்பு சொத்துக்களுடன் சில வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த சூறாவளியானது 2017 ஆம் ஆண்டு தாக்கிய ஹாடோ மற்றும் 2018 இல் தாக்கிய மங்குட் சூறாவளிகளைப் போன்றே இருக்கலான் என வளிமண்டல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.Link

ஹொங்கொங்கின் அதிகாரிகள் மூன்றாவது மிக உயர்ந்த புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

மேலும், குறைந்தது 700 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இதுவரை மிகவும் சக்திவாய்ந்த புயலாக உருவெடுத்துள்ள இது, அதிகபட்சமாக மணிக்கு 230 கிமீ வேகத்திலும் கடக்கக்கூடும் என்று வானிலையாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயல் அதன் தற்போதைய வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும், பின்னர் சீனக் கடற்கரையை நெருங்கும்போது சற்று பலவீனமடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. Link

எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நேற்று (23) ஹொங்கொங்கில் சூறாவளி தாக்கம் ஆரம்பம் என பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன் அது 2018 ஆம் ஆண்டு ஹொங்கொங்கை Mangkhut சூறாவளி தாக்கிய போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 


இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title: ஹொங்கொங்கை சூறாவளி தாக்குவதாக பகிரப்படும் பழைய காணொளி….!

Fact Check By: Suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *