
தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததையடுத்து பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையேயான இலங்கை போக்குவரத்து சபை பஸ் மதியம் 2.30 மணி சேவை யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இடம்பெறவில்லை என தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
எனவே அது குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையேயான இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தின் 2.30 மணி சேவை யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று இடம்பெறவில்லை.
இது தொடர்பில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் விசாரித்த போது ஜனாதிபதியின் யாழ் வருகையினை ஒட்டி பேருந்துகள் அங்கு சென்று விட்டது என்று தெரிவிக்கப்பட்டது என குறிப்பிட்ட கடந்த 16 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
தைப்பொங்கல் தினத்தன்று (15) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இவரின் வருகை காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் அவரின் வருகைக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளமையினால் மக்களின் பொது போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் பல தகவல்கள் பகிரப்பட்டிருந்தது.
யாழ். மத்திய பேருந்து நிலையம்
எனவே நாம் இதனை உறுதிப்படுத்துவதற்காக யாழ். மத்திய பேருந்து நிலையத்தின் பேச்சாளரை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது மேற்குறிப்பிட்ட யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையிலான இலங்கை போக்குவரத்து சபையின் 2.30 மணிக்கு பயணிக்கும் பஸ் சேவை இல்லை எனவும் குறித்த பகுதியுடனான சேவை 1.45 மணிக்கே ஆரம்பிக்கப்படும் எனவும் அந்த பகுதிகளுக்கிடையில் தனியார் பஸ் சேவையே 2.30 மணிக்கு இடம்பெறும் என்பதனையும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அன்றைய தினம் (16)யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் பகுதிகளுக்கிடையிலான மதியம் 1.45 மணிக்கான பஸ் சேவை இடம்பெறவில்லை என்பது உண்மை தான், ஆனால் ஜனாதிபதியின் வருகைக்காக அந்த பஸ் சென்றதாக பகிரப்படும் தகவல் போலியானது எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பானம் – குறிகாட்டுவான் இடையிலான மதியம் 1.45 இற்கு சேவையில் ஈடுபடும் NP – 1050 இலக்க பஸ்ஸில் ஏற்பட்டகோளாறு காரணமாக பழுதுபார்க்கும் நடவிக்கைகளுக்காக பஸ் யாழ்ப்பாணம் டிப்போவிற்கு சென்று திரும்பி பஸ் நிலையத்திற்கு வரும் போது மதியம் 2.15 மணியாகிவிட்டதனால் அதற்கு பின்னர் அந்த பஸ்ஸை சேவையில் ஈடுபடுத்தினால் 2.30 மணிக்கு ஆரம்பமாகும் தனியார் பஸ் சேவையுடன் முரண்பாடுகள் ஏற்படும் என்பதற்காகவே அன்று (16ஆம் திகதி) அந்த பஸ் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையில் போக்குவரத்தை மேற்கொள்ளவில்லை என்றும் இந்த பகுதிளுக்கிடையிலான போக்குவரத்தானது தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் இணைந்த போக்குவரத்து சேவையாக செயற்படுவதனாலேயே அன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவையில் ஈடுபடவில்லை என்பதனையும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் அவரின் வருகைக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டமை உண்மை எனினும் அவை மேலதிக சேவைக்கான பஸ்கள் மற்றும் அன்றைய தினம் பாடசாலை விடுமுறை என்பதனால் பெரும்பாலும் பாடசாலை சேவை பஸ்களே ஜனாதிபதியின் வருகைக்கான பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டன என்பதனையும் அவர் உறுதிப்படுத்தினார்.
அது மட்டுமன்றி ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொது மக்களுக்கான போக்குவரத்து சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை எனவும், மக்கள் பயணிக்கு பஸ் சேவைகள் வழமைப்போல் இயங்கியது எனவும் மேலதிக சேவைகளுக்கான பஸ்களே ஜனாதிபதியின் வருகைக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன என்பதனையும் அவர் தெரிவித்தார்.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
மேலும் நாம் இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலரை தொடர்புகொண்டு வினவியிருந்தோம், இதன்போது ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த 15,16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பஸ் சேவைகள் வழமைப் போல் இடம்பெற்றது எனவும் அந்த நாட்களில் பாடசாலை விடுமுறை என்பதனால் பாடசாலை சேவைகளுக்கான பஸ்களே ஜனாதிபதியின் வருகைக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் பகுதிகளுக்கிடையில் இடம்பெறும் இலங்கை போக்குவரத்து சபையின் மதிய பஸ் சேவையானது கடந்த 16 ஆம் திகதி இடம்பெறாமைக்கான காரணம் அந்த பஸ் ஜனாதிபதியின் யாழ். விஜயத்திற்கான பணிகளில் ஈடுபட்டமையே என பகிரப்படும் தகவல் போலியானது என்பதுடன் NP – 1050 இலக்க பஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த பஸ் அன்றைய தினம் அந்த பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்தில் ஈடுபடவில்லை என்பதுவும் கண்டறிப்பபட்டது.
மேலும் குறித்த பஸ் சேவையின் நேரம் மதியம் 2.30 அல்ல எனவும் அந்த பஸ் சேவையின் நேரம் மதியம் 1.45 என்பதனையும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
வ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:ஜனாதிபதி வருகையால் யாழ்ப்பாணத்தில் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டதா?
Fact Check By: Suji ShabeedhranResult: Missing Context


