
INTRO :
இணையவழியில் மக்களை ஏமாற்றி பணம் பெறும் பல விடயங்கள் தற்போது சமூகத்தில் இடம்பெற்று வருகின்றமையை காணமுடிகின்றது. அந்த வகையில் கூரியர் (Courier) சேவை என்ற பெயரில் பார்சல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்து வட்ஸ்அப் மற்றுத் சதாரண குறுஞ்செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
மேலும் இது தொடர்பில் உண்மையை அறியுமாறு எமது வாசகர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கை பின்வருமாறு.
தகவலின்விவரம் (What is the claim):

குறித்த பதிவில் காலை வணக்கம் திருமதி கணபதிபிலால் மஞ்சுளா, நான் டெல்டா கூரியர் சர்வீஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திலிருந்து டாம் பேசுகிறேன். உங்கள் பொதி தொடர்பாக நாங்கள் உங்களை அழைக்கிறோம். உங்கள் பொதி எங்கள் பொறுப்பில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது. உங்கள் முகவரிக்கு நாங்கள் பொதியை வழங்குவதற்கு முன்பு, நீங்கள் சில சுங்க அனுமதிகளைப் பெற வேண்டும். அதற்கான கட்டணம் (95,000 ரூபாய்) ஆகும். எனவே, நீங்கள் பணம் செலுத்தத் தயாராக இருந்தால், கூடிய விரைவில் பதிலளிக்கவும், அப்போது நான் உங்கள் வங்கி விவரங்களை அனுப்புவேன்.
< டெல்டா கூரியர் சர்வீஸ் கம்பெனியைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி > என தெரிவிக்கப்பட்ட குறுஞ்செய்திகளே அனுப்பப்படுகின்றது.
மேலும் அவ்வாறு பணம் அனுப்பதற்காக அவர்கள் பின்வரும் வங்கி இலக்கத்தையும் வழங்கியுள்ளனர்.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த வட்ஸ்அப் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த டெல்டா கூரியர் சர்வீஸ் கம்பெனி லிமிடெட் என்ற ஒரு நிறுவனம் உண்மையில் உள்ளதா என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்த போது DeltA Courier Service Company என பெயரில் பேஸ்புக் பக்கமொன்று இருப்பதனை கண்டறிந்தோம். ஆனால் அதில் வழங்கப்பட்டுள்ள தொடர்பு இலக்கங்கள் என்பன இலங்கையை தளமாகக் கொண்டவை அல்ல என்பதனை அறியமுடிந்தது.
எனினும் நாம் அந்த பேஸ்புக் பக்கத்தில் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்ட போது எமக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

ஆகவே நாம் இது தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்த போது அண்மையில் குறித்த பேஸ்புக் பக்கம் போலியானது என தெரிவித்த சமூக ஊடகப் பதிவை காணமுடிந்தது. Link
இத்தகைய செய்திகள் பெரும்பாலும் மக்களை அச்சமடையச் செய்து உடனடியாக பணம் செலுத்தவோ அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ தூண்டும் கூரியர்/சுங்கக் கட்டணம் (Courier/Customs Scam) என்ற பெயரில் இடம்பெறும் மோசடிகளாகும். அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் இதுபோன்ற தகவல்களை நம்பி பணம் அனுப்புவதையோ, வங்கி விபரங்கள், OTP, தேசிய அடையாள அட்டை விபரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிர்வதையோ தவிர்க்க வேண்டும்.
உண்மையில் நீங்கள் ஓடர் செய்த அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் அனுப்பும் ஏதேனும் பார்சல் தொடர்பான பிரச்சினை இருந்தால், சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தொலைபேசி இலக்கம் அல்லது இணையதளம் மூலமாகவே தொடர்புகொண்டு உறுதிப்படுத்துவது பாதுகாப்பான நடைமுறையாகும். உறுதிப்படுத்தப்படாத WhatsApp செய்திகள் அல்லது வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் அழைப்புகளின் அடிப்படையில் எந்தப் பணப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளாமல் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.
மேலும் குறித்த செய்தியில் பணம் அனுப்புவதற்கு வழங்கப்பட்ட வங்கி இலக்கம் என்பது இலங்கை வங்கியின் இலக்கம் என்பதனால், மக்கள் இவ்வாறான செய்திகளை பல சந்தர்ப்பங்களில் எளிதில் நம்பக் கூடும் எனினும், அது போன்ற உத்திகள் மக்களை ஏமாற்ற மோசடிக்காரர்கள் பயன்படுத்து உத்தி என்பதுடன், இவர்கள் உலக முழுவதிலிருந்தும் செயற்பட்டு மக்களை ஏமாற்றும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதனையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கூரியர் சேவை என்ற பெயரில் வரும் இதுபோன்ற வட்ஸ்அப் குறுஞ்செய்திகள், மக்களின் பணம், தனிப்பட்ட தரவுகள், வங்கி விபரங்கள் என்பவற்றை திருடுவதற்காக மோசடிகாரர்களினால் அனுப்பப்படும் போலியான செய்தி என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


