
‘’8000 இந்து பெண்களுக்கு கருத்தடை செய்த இலங்கையை சேர்ந்த முஸ்லீம் டாக்டர் கைது,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Hindu Samayam என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த மே 29, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், HinduSamayamTV எனும் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த செய்தியில், ‘’சீய்கு சயப்தீன் மொஹமத் ஸாஃபி என்ற முஸ்லீம் டாக்டர் 8000 இந்து பெண்களுக்கு சிசேரியன் என்ற பெயரில் கருத்தடை செய்துள்ளான். இதற்காக, 400 மில்லியன் பணம் தீவிரவாதிகளிடம் இருந்து தரப்பட்டுள்ளது. இதனை அவனே ஒப்புக் கொண்டுள்ளான்,’’ என்று கூறியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது போல முதலில், இத்தகைய டாக்டர் யாரேனும் கைது செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தில் நமது ஆய்வை தொடங்கினோம். அப்போது, மே 26, 2019 அன்று இதுதொடர்பாக வெளியான ஒரு செய்தியின் ஆதாரம் கிடைத்தது. அதில், இவர்கள் குறிப்பிடுவது போல, முஸ்லீம் டாக்டர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. அந்த நபர் குருணாகல் பகுதி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தவர் என்றும், அவர் மீது 4000 பெண்களுக்கு கருத்தடை செய்ததாப் புகார் கூறப்படுவதாகவும் இருந்தது.
அத்துடன், இந்த தகவலை இலங்கை போலீசார் மறுத்துள்ளதாகவும், அவர்கள் அந்நிய செலாவணி முறைகேட்டில் கைது செய்து, விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல, ஸாஃபியின் வழக்கறிஞர் பேசுகையில், இந்த விவகாரத்தில் போதிய ஆதாரமின்றி போலீசார் தனது கட்சிக்காரரை கைது செய்ததாகக் கண்டனம் தெரிவித்திருப்பதாக, அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, மே 26, 2019 அன்று வெளியிடப்பட்ட மற்றொரு செய்தியின் வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
ஆனால், ஜூலை 5ம் தேதி என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், கைது செய்யப்பட்ட முஸ்லீம் டாக்டர் ஸாஃபி தவறான புகாரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றம் இதுவரை நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஸாஃபி மீதான புகாரை நிரூபிக்க போதிய ஆதாரம் எதுவும் இல்லை என, இலங்கை சிஐடி, அந்நாட்டு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தும் உள்ளதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை முழுதாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, சிங்கள பெண்களுக்கு கருத்தடை செய்தார், அந்நிய செலாவணி மோசடி செய்தார் என பல்வேறு புகார்கள் கூறப்பட்டாலும், அவை இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம், அந்த முஸ்லீம் டாக்டர் ஸாஃபி இன்னமும் சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
மேலும், இதுபற்றி நமது இலங்கை வாழ் நண்பர்களின் உதவியுடன் அந்நாட்டு போலீசில் பேசினோம். அவர்கள் எந்த தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். நீதிமன்றத்தில் இந்த விவகாரம் நிலுவையில் உள்ளதால் தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது எனக் கூறிவிட்டனர்.
எனவே, நீதிமன்றத்தில் இவ்விவகாரம் உள்ள காரணத்தால், இதில் எந்த முடிவும் தற்போதைக்கு எடுக்க முடியாது. பாதி உண்மை, பாதி விடை தெரியாத தகவல் இந்த செய்தியில் உள்ளதாக, முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி விடை தெரியாத தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய முழு விவரம் இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இலங்கையில் 8000 இந்து பெண்களுக்கு கருத்தடை செய்த முஸ்லீம் டாக்டர்?
Fact Check By: Pankaj IyerResult: Mixture
