
INTRO:
இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு இனி எந்தவொரு தடையும் இல்லையென தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் ஜனாதிபதியின் கையெழுத்துடன் கூடிய கடிதமொன்று பகிரப்பட்டடு வருவதனை எம்மால் காணமுடிந்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த அறிக்கை போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த அறிக்கையின்படி போரில் உயிர் தியாகம் செய்தவர்களை இந்த ஆண்டும் முதல் எந்த தடையும் இன்றி நினைவுகூற முடியும் என தெரிவித்து 2024.11.17 ஆம் திகதி ஜனாதிபதியின் கையெழுத்துடன் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் அதிர்வு என்ற இணையத்தள பக்கமொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதனையும் எம்மால் காண முடிந்தது. குறித்த செய்தியை பார்வையிட
Fact Check (உண்மை அறிவோம்)
இது குறித்த உண்மையை கண்டறிவதற்காக நாம் தேடுதலில் ஈடுபட்டபோது, முதலில் இது தொடர்பான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்தோம்.
இதன்போது அவ்வாறான எந்தவொரு செய்தியும் பிரதான ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதனை உறுதிசெய்தோம்.
தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா என ஆய்வினை மேற்கொண்டபோது அவ்வாறான எவ்விதமான பதிவுகளும் எம்மால் காணக்கிடைக்கவில்லை.
மேலும் இதன் உண்மைத் தன்மையினை அறியும் நோக்கில் நாம் ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, இது முற்றிலும் போலியான கடிதம் எனவும் இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் எந்தவொரு ஊடக அறிக்கையோ அல்லது வர்த்தமானி அறிவித்தல்களோ வெளியிடப்படவில்லை என்பதனை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
அத்தோடு ஜனாதிபதியின் கைகொப்பத்துடன் கூடிய இந்த கடிதத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த போது, மேற்குறிப்பிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தலைப்பானது முற்றிலும் தவறானது என்பதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

ஜனாதிபதியால் வெளியிடப்படும் அறிக்கைகள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பிலேயே வெளியிடப்படும், எனினும் குறித்த கடிதத்தின் கடிதத் தலைப்பானது ஜனாதிபதியின் புகைப்படத்துடன் போலியாக உருவாக்கப்பட்டுள்ளமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
மேற்குறிப்பிட்ட அதிர்வு இணையத்தள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று பொலிஸாரும் இராணுவத்தினரும் தற்போது கெடுபிடிகளை தளர்த்தி வருவதை காணக்கூடியதாக உள்ளதாக கிளிநொச்சி வாசிகள் தெரிவித்துள்ளார்கள். என தெரிவக்கப்பட்டுள்ளதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக நாம் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரான கர்னல் நலின் ஹேரத்திடம் இது தொடர்பில் கேட்டறிந்த போது, மற்ற மாவட்டங்களைப் போன்று குறித்த மாவட்டத்திலும் எப்போதும் போன்று பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், விசேடமாக எந்த பகுதிக்கும் பாதுகாப்பை தளர்த்துவதற்கோ அல்லது அதிகரிப்பதற்கோ நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு வடக்கு கிழக்கில் ஒவ்வொறு வருடமும் மாவீரர் தினம் நவம்பர் மாதம் அனுஷ்ட்டிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நாம் இது குறித்தி வட மாகணத்திற்கான பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு வினவிய போது நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மாவீரர் தினத்தை அனுஷ்ட்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதுவரை அதற்கான எதுவித தடைகளும் அரச தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் இது குறித்து நாம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, வடக்கு கிழக்கில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷட்டிக்கப்பட்டு வருவதாகவும், இந்த வருடம் அதற்கான தடை எதுவும் புதிய அரசாங்கத்தினால் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மாவீரர் தினத்தின் வரலாறு
மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகள் அமைப்பினால் 1989 ஆம் ஆண்டுஅறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) உயிரிழந்தார்.
இந்த நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன.
மேற்குறிப்பிட்ட தகவல்களை ஆராய்ந்த போது இந்த ஆண்டு முதல் மாவீரர் தினத்தை தமிழ் மக்கள் எந்தவித தடைகளும் இன்றி அனுஷ்ட்டிக்க முடியும் என ஜனாதி அநுர குமார திஸாநாயக்கவின் கையெழுத்துடன் சமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை முற்றிலும் போலியானது என்பதனை தெளிவாக புரிந்துக்கொள்ளக் கூடியதாக உள்ளது.
மேலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றி மற்றும் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி அனுஷட்டிக்கப்படவிருக்கும் மாவீரர் தினம் என்பவற்றை முதன்மையாகக் கொண்டு இவ்வாறான போலியான செய்திகள் பரப்பப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழு அனுமதி வழங்கினாரா? உண்மை என்ன?
Written By: Fact Crescendo TeamResult: False
