UPDATE:
அல்லிராஜா சுபாஷகரனுக்கு சொந்தமான ஒருவன் பத்திரிகையின் அனைத்து செயற்பாடுகளையும் கடந்த 30 ஆம் திகதியுடன் முழுமையாக நிறைவு செய்வதாக அதன் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒருவன் பத்திரிகையின் ஊழியர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.
மேலும் 30 திகதி வரை ஒருவன் பத்திரிகையின் இணையபதிப்பு வெளிவந்ததாகவும் அன்றைய தினமே ஊழியர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஒருவன் பத்திரிகையானது அல்லிராஜா சுபாஷ்கரனுக்கு சொந்தமான மற்றுமொரு நிறுவனமான South Eye Private Limited இன் கீழ் செயற்பட்டாலும் அது Lyca Productions இற்கு கீழ் வரும் நிறுவனம் அல்ல என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.
EAP நிறுவனத்திற்கு சொந்தமான சுவர்ணவாஹினி ஊடக வலையமைப்பை பிரபல வர்த்தகரான அல்லிராஜா சுபாஷகரன் அண்மையில் கொள்வனவு செய்திருந்தமையை அடுத்து தற்போது அவரிடமிருந்து சுவர்ணவாஹினி ஊடகை வலையமைப்பை ஹிரு தொலைக்காட்சியின் உரிமையானரான ரேனோ சில்வா வாங்கவுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இதன் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
லைக்காவிற்கு இலங்கையில் மூடுவிழா
சுவர்ணவாஹினி மற்றும் ஒருவன் பத்திரிகை விற்பனைக்கு வருகிறது. லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் அல்லிராஜா சுபாஷ்கரனின் நிதிப்பங்களிப்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தது. அதேநேரம் சுபாஷ்கரன் ஆதரித்த சங்கு சின்ன ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் எதிர்பார்த்த அளவில் வெற்றியைக் கொண்டுவரவில்லை. இப்பின்னணிகளில் லைக்காவிற்கு சொந்தமான சுவர்ணவாஹினி, EBC மீடியா நெட்வேர்க் மற்றும் SKY மீடியா நெட்வேர்க் நிறுவனங்கள் விலைக்கு வந்துள்ளது என்ற தகவல்கள் அடங்கிய காணொளி கடந்த 2025.01.22 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் அது தொடர்பான தகவல்கள் சிங்கள் மொழியிலும் சமூக ஊடகஙடகளில் பகிரப்பட்டிருந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் இது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் ஹிரு தொலைக்காட்சியின் உரிமையாளர் ரேனோ சில்வா சுவர்ணவாஹினியை வாங்க திட்டமிட்டுள்ளதாகவோ அல்லது அதன் தற்போதைய உரிமையாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் அதனை விற்பனை செய்யவுள்ளதாகவோ தெரிவித்து எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
மேலும் குறித்த காணொளியில் ஒருவன் பத்திரிகையின் அச்சுப்பணிகள் கடந்தவாரம் முதல் நிறுத்திவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாம் அது தொடர்பிலும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தோம்.
இதன்போது ஒருவன் பத்திரிகையின் இணையப்பதிப்பு நேற்று (2025.01.28) வரை வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஒருவன் பத்திரிகையின் இணையத்தளமும் தொடர்ந்து இயங்கி வருகின்றமை தெரியவந்தது.
மேலும் நாம் இது தொடர்பில் ஒருவன் பத்திரிகையை தொடர்பு கொண்டு வினவியபோது. பத்திரிகையின் அச்சுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் அதன் இணைய பதிப்புகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் குறித்த பத்திரிகையின் இணையதளமும் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் பத்திரிகையை மூடுவது தொடர்பில் நிறுவன முகாமைத்துவத்திடமிருந்து எந்தவித உத்தியோகபூர்வ அறிவித்தல்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
மேலும் அல்லிராஜா சுபாஷ்கரன் அவர்களுக்கு சொந்தமான Lyca Media விற்கு சொந்தமான ஆதவன் தொலைக்காட்சி மற்றும் இணையதள நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றமையும் உறுதியானது.
மேலும் இந்த விடயம் தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சுவர்ணவாஹினியின் உயர் நிர்வாகத்திடம் நாம் வினவினோம்,இதன்போது அவர்கள் சுவர்ணவாஹினியை மூடவோ அல்லது விற்கவோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் போலியானவை எனவும் சுவர்ணவாஹினியின் ஒளி, ஒலிபரப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் முற்றிலும் போலியானது என தெரிவித்து சுவர்ணவாஹினியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நாம் ஹிரு ஊடக வலையமைப்பின் உயர் நிர்வாகத்திடம் வினவினோம், இதன்போது அத்தகைய முடிவு குறித்து தங்களுக்குத் தெரியாது எனவும், இருப்பினும், இது குறித்து ஹிரு தொலைக்காட்சி உரிமையாளர் ரேனோ சில்வாவிடம் கேட்டறிந்து கூறுவதாகவும் தெரிவித்தனர்.
அது குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் நாம் இந்த கட்டுரையில் இணைப்பதற்கு காத்திருக்கின்றோம்.
மேலும் சுவர்ணவாஹினியை ரேனோ சில்வா வாங்கப்போவதாக தெரிவித்து 2020 ஆம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
திருமதி சோமா எதிரிசிங்கவின் மரணத்திற்குப் பிறகு, EAP நிறுவனத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்த நிலையில், அவர்கள் அந்த நிறுவனத்தின் கீழிலிருந்த சுவர்ணவாஹினி தொலைக்காட்சியை விற்க முடிவு செய்தனர், அப்போது பிரபல வர்த்தகரான அல்லிராஜா சுபாஷ்கரன் EAP வலையமைப்பிற்கு சொந்தமான தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை வாங்கினார்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
தற்போதைய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, சுவர்ணவாஹினி ஊடக நிறுவனத்தை விற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் அந்த ஊடக நிறுவனத்தின் உரிமையாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் நட்டமடைந்துவிட்டதாகவும் அவருக்குச் சொந்தமான ஏனைய ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டதாக பகிரப்படும் தகவல்கள் தவறானது என்பதுவும் தெளிவாகின்றது.
மேலும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தவறானவை என சுவர்ணவாஹினி ஊடக வலையமைப்பின் உயர் நிர்வாகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:சுபாஷ்கரனுக்கு செந்தமான சுவர்ணவாஹினியை ரேனோ சில்வா வாங்கப் போகிறாரா?
Written By: Suji ShabeedhranResult: Misleading
