இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் வலுப்பெற்றும் வந்த நிலையில் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த போர் பதற்றமானது உலக நாடுகளை கடும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது என்றே கூறவேண்டும்.
அந்த வகையில் தற்போது ஈரான் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கட்டாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த காணொளியில் கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் என தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.06.24) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இது தொடர்பான உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், கட்டாரின், தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது 23 ஆம் திகதி இரவு ஈரான் 6 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது 22 ஆம் திகதி நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்திருந்தது.
இதன் பின்னணியில் ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதல் உண்மை எனினும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியானது அந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளியே என்பதனை காட்டும் விதமாக எந்த செய்திகளும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை.
எனவே நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, Tal Hagin என்பவரின் X கணக்கில் குறித்த காணொளியின் screenshot உடன் இது செயற்கை நுண்ணறிவு தொழிலுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டிருந்த பதிவொன்றை எம்மால் காணமுடிந்தது.
எனவே நாம் இது தொடர்ந்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். இதன்போது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளிகளை கொண்ட aimindscreate என்ற டிக்டொக் பக்கத்தில் குறித்த காணொளியானது கடந்த 17 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
மேலும் மற்றுமொரு டிக்டொக் பக்கத்திலும் இதே காணொளி கடந்த 6 நாட்களுக்கு முன்னர் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
எனவே இந்த காணொளி உண்மையில் AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளியா என்பதனை கண்டறிய நாம் இதனை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
இதன்போது குறித்த காணொளியானது செயற்கை நுண்ணறி தொழிநுட்பத்தை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பது உறுதியானது.
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியமை உண்மை எனினும் குறித்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி என தெரிவித்து பகிரப்படும் காணொளியானது போலியானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title: கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்ட காணொளியா இது?
Fact Check By: suji shabeedharanResult: Misleading
