
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் விண்வெளி பயணம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றில், அமெரிக்காவின் நாசா ஒரு முன்னணி நிறுவனமாகக் கருதப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்தை நாசா முதன்முறையாக தரையிறக்கத் தயாராகி வருவதாகவும், அந்த செவ்வாய் கிரகப் பயணத்திற்கு முதல் பெண்ணாக அலிசா கார்சன் என்ற 20 வயது பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் சமீபத்திய நாட்களில் தொடர் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

அலிசா கார்சன் (Alyssa Carson): செவ்வாய் கிரகத்தை நோக்கிய ஒரு கனவுப் பயணம்
அலிசா கார்சன் 2001 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பிறந்தார்.
சிறு வயதிலிருந்தே விண்வெளி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
அவருக்கு 3 வயது இருக்கும் போதே, “நான் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வேன்” என்று உறுதியாகத் தீர்மானித்தார்.
பல குழந்தைகளுக்கு இது வெறும் கனவாக இருந்தாலும், அலிசா அந்தக் கனவை நனவாக்க இன்றும் கடினமாக உழைத்து வருகிறார்.
விண்வெளிப் பயணத்திற்கான அவரது தயாரிப்புகள்:
நாசாவின் (NASA) எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்காகத் தயாராகி வரும் நபர்களில் அலிசா கார்சன் மிகவும் பிரபலமானவர்.
நாசா நடத்திய அனைத்து NASA Space Camp பயிற்சி முகாம்களையும் முடித்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தனது இலக்கை அடைய அவர் பின்வரும் துறைகளில் தீவிரமாகப் பயின்று வருகிறார்:
* வானூர்தி அறிவியல் (Aeronautics)
* உயிரியல் (Biology)
* ரோபாட்டிக்ஸ் (Robotics)
* விண்வெளி அறிவியல் (Space Science)
செவ்வாய் கிரகப் பயணத்திற்குத் தேவையான மிக முக்கியமான அறிவு இவை என்பதால் இதில் அவர் கவனம் செலுத்துகிறார்.
செவ்வாய் கிரகப் பயணம் எவ்வளவு கடினமானது?
செவ்வாய் கிரகத்திற்குச் செல்வது என்பது சாதாரணமான காரியம் அல்ல:
* பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை அடைய 6 முதல் 9 மாதங்கள் வரை ஆகும்.
* திரும்பி வரும் பயணமும் அவ்வளவு நீண்டது.
* அங்கே ஆக்சிஜன் கிடையாது.
* கடுமையான குளிர் நிலவும்.
* ஈர்ப்பு விசை பூமியை விட மிகக் குறைவு.
எனவே, இந்தப் பயணத்தை மேற்கொள்பவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்களாக இருக்க வேண்டும்.
அலிசா கார்சனின் லட்சியம்:
அலிசா கூறுகிறார்:
“செவ்வாய் கிரகப் பயணம் என்பது மீண்டும் திரும்ப முடியாத ஒரு பயணமாகக் கூட இருக்கலாம்.
ஆனால் நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்.”
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்று ஆராய்வதும், வருங்கால சந்ததியினர் அங்கு புதிய வாழ்க்கையைத் தொடங்க வழி அமைத்துக் கொடுப்பதுமே அவரது லட்சியம்.
அவரது அறிவுரை:
“உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அது விசித்திரமானது என்று நினைத்து கை விடாதீர்கள்.
அதற்காக உழைக்கத் தொடங்குங்கள், கற்றுக்கொள்ளுங்கள், உங்களை நம்புங்கள்.”
இந்தத் தகவல் உண்மையிலேயே வியப்பானது.
3 வயதில் ஒரு முடிவெடுத்து, அதை நோக்கி 20 வருடங்களாக உழைப்பது மிகப் பெரிய விஷயம்.
அலிசா கார்சன் போல உங்களுக்கு ஏதாவது சிறுவயதுக் கனவு இருக்கிறதா?
இல்லையெனில், விண்வெளிப் பயணம் பற்றி உங்கள் கருத்து என்ன? என தெரிவிக்கப்பட்டு குறித்த கதிவானது கடந்த 2026.01.10 ஆம் திகதி பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் நாம் எலிசா கார்சன் என்ற பெண் தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என்பதனை ஆராய்ந்தோம். கார்சன் சிறுமி தொடர்பில் அவரின் 12 வயதிலேயே ஊடகங்களின் கவனம் ஈர்க்கப்பட்டிருந்தது. அந்த நேரத்திலேயே, அவர் நாசாவின் பல விண்வெளி முகாம்களில் பங்கேற்றிருந்தார். மேலும், கெனடி விண்வெளி மையத்தில் நடத்தப்பட்ட “Passport to Explore Space” என்ற திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிய முதல் நபர் அவர் என்பதையும் Astronaut இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், கார்சன் சிறுமி தற்போது நாசா நிறுவனத்தால் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தும் நம்பகமான ஆதாரங்கள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு, அலிசா கார்சன் நாசா நிறுவனத்தின் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு செல்லத் தயார்படுத்தப்படும் முதல் நபர் எனும் தகவல்கள் பகிரப்பட்பட்டு வந்தன. அது தொடர்பாக Washington Examiner என்ற இணையதளம், நாசா நிறுவனத்தின் பிரதிநிதியான Sean Potter என்பவரிடம் வினவியிருந்தது.
இதன்போது, நாசா நிறுவனத்திற்கு அதன் முக்கிய பணிகள் மற்றும் விண்வெளி ஆய்வுகளை ஊக்குவிப்பதற்காக மாணவர்களுடன் தொடர்பு கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன என்றும், மாணவர்கள் அதில் ஆர்வமும் உற்சாகமும் காட்டுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், செவ்வாய் கிரகத்திற்கு செல்லுதல் அல்லது அதனுடன் தொடர்புடைய எந்த நடவடிக்கையிலும் அலிசா கார்சனுடன் நாசா நிறுவனம் அந்த காலப்பகுதியில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பதனையும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.
Washington examiner.com | Archived Snopes
நாசா நிறுவனத்தின் விண்வெளி வீரராவதற்கு (astronaut) பல அடிப்படை தகுதிகள் உள்ளன. அவற்றில், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து பொறியியல், உயிரியல், இயற்பியல், கணினி அறிவியல் போன்ற துறைகளில் முதுநிலை (Masters) பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதும், அந்த பட்டத்தை முடித்த பின் குறைந்தது இரண்டு ஆண்டுகள் தொடர்புடைய தொழில்முறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஜெட் விமானங்களில் குறைந்தது 1,000 மணி நேரம் விமானியாக பணியாற்றியிருக்க வேண்டும் என்பதும் அடங்கும். இத்தகைய தகுதிகள் அனைத்தையும் இதுவரை அலிசா கார்சன் பூர்த்தி செய்துள்ளதாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

எனினும், இந்த விடயம் தொடர்பாக அலிசாவின் தந்தையான பெர்ட் கார்சன் (Bert Carson) அவர்களிடம் மின்னஞ்சல் ஊடாக அலிசா செவ்வாய் கிரகத்திற்கு செல்லத் தேவையான தகுதிகளை பெற்றுள்ளாரா என்பதை நாம் கேட்டறிந்தோம்.
அதற்கு அவர் அளித்த பதிலில், எதிர்காலத்தில் நடைபெறவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ள செவ்வாய் கிரகப் பயணத்திற்காக இதுவரை எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், அந்தச் செவ்வாய் பயணத் திட்டத்தின் மீது அலிசாவுக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும், அதற்குத் தேவையான தகுதிகளைப் பெற தனது மகள் தொடர்ந்து கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அவளுடைய செயல்பாடுகளை இந்த LinkedIn இணைப்பின் மூலம் பரிசோதித்து பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
அலிசா தற்போது Jacobs விண்வெளி நடவடிக்கைகள் தொடர்பான நிறுவனத்தில் பயிற்சியாளராக (internship) பணியாற்றி வருகிறார். அதன் மூலம் நாசா நிறுவனத்துடன் தொடர்புடைய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவர் உலகின் பல விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதுடன், இதன் மூலம் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகப் பயணத் திட்டத்துடன் தொடர்பு பெறும் வாய்ப்பு கிடைக்கலாம் என அவரது தந்தை நம்பிக்கை தெரிவிக்கிறார்.
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வாய்ப்பை பெற தொடர்ந்து கடுமையாக உழைத்து வருவதாக அலிசா கருத்து தெரிவித்த ஒரு சந்தர்ப்பத்தை இங்கே காணலாம். அதேபோல், அலிசாவை பற்றி வெளியான ஒரு ஊடக அறிக்கையையும் இங்கே பார்க்கலாம்.
மேலும் 2025–2026 காலப்பகுதிக்குள் அலிசா கார்சனை எந்தவொரு செவ்வாய் கிரகப் பயணக் குழுவிற்கும் நாசா அல்லது எந்த விண்வெளி நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக நியமித்ததாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், 2030 களில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர் செல்லும் பயணங்களை திட்டமிடும் ஆரம்ப கட்டத்திலேயே நாசா நிறுவனம் தற்போது உள்ளது என்பதுடன், இதுவரை எந்தப் பணிக்குழுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக தகவல்களை இங்கே காணலாம்.
அலிசா கார்சன் ஒரு விண்வெளி ஆர்வலர், ஆராய்ச்சியாளர் மற்றும் STEM தூதராக செயல்பட்டு வருகிறார். அவர் பல தனியார் விண்வெளி வீரர் பயிற்சி திட்டங்களில் பங்கேற்றுள்ளதுடன், விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளுக்கும் பங்களிப்பு வழங்கியுள்ளார். STEM மற்றும் விண்வெளி ஆய்வு தொடர்பாக உலகளாவிய அளவில் உரையாற்றி வருவதுடன், விண்வெளி முகாம் போன்ற கல்வி முயற்சிகளுக்கு தன்னார்வமாகவும் ஈடுபட்டுள்ளார்.
இந்த திட்டங்களின் போது அவர் தன்னை “astronaut candidate” என அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாலும், அவர் நாசாவின் அதிகாரப்பூர்வ விண்வெளி வீரர் குழுவின் உறுப்பினர் அல்ல. மேலும், நாசாவின் முறையான விண்வெளி வீரர் பயிற்சியை அவர் நிறைவு செய்யவில்லை; அத்துடன் எந்தவொரு செவ்வாய் கிரகப் பயணத்திற்கும் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படவும் இல்லை.
எனவே, அவர் “செவ்வாய் கிரகத்திற்கு செல்லவிருக்கிறார்” அல்லது “ஒருபோதும் பூமிக்கு திரும்ப மாட்டார்” என சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகள் தவறானவை என்பதுடன் இது தொடர்பான மேலதிக தகவல்களை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் அலிசா கார்சன் விண்வெளி துறையின் ஆர்வலர் என்பதுடன் அவர் பல விண்வெளி சார்ந்த பட்டப்படிப்புகளை மேற்கொண்டு வந்தாலும், நாசாவினால் அவர் “செவ்வாய் கிரகத்திற்கு செல்லவிருக்கிறார்” அல்லது “ஒருபோதும் பூமிக்கு திரும்ப மாட்டார்” மற்றும் நாசாவின் முறையான விண்வெளி வீரர் பயிற்சியை அவர் நிறைவு செய்துள்ளார் என சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகள் தவறானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:அலிசா கார்சன் தொடர்பில் பகிரப்படும் தகவல்களின் உண்மை என்ன?
Fact Check By: Suji ShabeedhranResult: Missing Context


