
INTRO: தேர்தல் காலப்பகுதியில் தவறான தகவல்கள் பிரச்சார நோக்கில் பரப்பப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகையான உதயன் பத்திரிகையின் வெளியீட்டை ஒத்த வடிவமைப்புடன் ” போர்க்குற்ற விசாரணையில் மகிந்தவைக் காப்பாற்றுவதற்காக , சுமந்திரனுக்கு 120 கோடி வழங்கப்பட்டது ” எனும் செய்தி வெளியிடப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. இந்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பான தேடலில் fact crescendo நிறுவனம் ஈடுபட்டது. முடிவில், இச்செய்தி போலியானது என்று உறுதிப்படுத்தப்பட்டது.
தகவலின் விவரம் (What is the claim):
யாழ் உதயன் பத்திரிகையின் பெயர் மற்றும் ஒத்த பக்கவடிவமைப்புடன், சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்த இச் செய்தி தொடர்பான ஆய்வுகளை நாம் ஆரம்பித்திருந்தோம். அதன்படி இந்த தகவல் கடந்த 4 ஆம் திகதி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. யாழ் உதயன் பத்திரிகையை ஒத்த பக்க வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட போலியான மின்னிதழ் வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பத்திரிகையின் பெயர் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. திகதி மற்றும் அதனுடன் இணைந்த பகுதி மறைக்கப்பட்டு பிரதான தலைப்புச் செய்தியாக “போர்க்குற்ற விசாரணைகளில் மகிந்தவைக் காப்பாற்றியதற்காக சுமந்திரனுக்கு 120 கோடி ரூபா கொடுக்கப்பட்டது ” என அதன் விரிவாக்கமாக, “சர்வதேச போர் குற்ற விசாரணைகளின் சாட்சியங்களை செல்லாதுபடி ஆக்கி, மகிந்த தரப்பினரை காப்பாற்றியதற்காக இரகசியமாக கையளிக்கப்பட்டது” என எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்தச் செய்தியுடன் சுமந்திரன் மற்றும் கோத்தபாய ராஜபக்ஸவின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது உதயன் பத்திரிகையை ஒத்த மின்னிதழ் வடிவத்தில் வெளிவந்திருக்கிறது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதனை உறுதிப்படுத்தும் நோக்கில் உதயன் பத்திரிகையின் எழுத்துருக்கள் மற்றும் பக்க வடிவமைப்பை ஆராய்ந்த போது வித்தியாசங்களை அவதானிக்க முடிந்தது. உதயன் பத்திரிகையின் எழுத்துருவாக சிறிலிபியைப் பயன்படுத்துகிறது. ஆனால் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் மின்னிதழ் யுனிக்கோட் எழுத்துருவில் உள்ளது. அத்துடன் பக்கவடிவமைப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் , உதயன் பத்திரிகை நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மின்னிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில், உதயன் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் தங்கராஜா பிரபாகரனிடம் கேட்டபோது தன் கருத்துகளை பின்வருமாறு பகிர்ந்துகொண்டார் “இது போலியானது, இந்த செய்தி முன்பும் வெளியாகியிருந்தது ,இப்போது மீண்டும் பரப்பப்படுகிறது. எங்களுடைய பத்திரிகையை நன்றாக அறிந்தவர்களுக்கு தெரியும் , எங்கள் வடிவமைப்பு இதனை காட்டிலும் வித்தியாசமாக இருக்கும். அத்துடன் எங்கள் எழுத்துவடிவம் வேறானது, இதில் யுனிக்கோட் பாவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்த விபரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் , யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ. சுமந்திரனை தொடர்புகொண்டு கேட்டபோது ” முற்றுமுழுதான போலிச் செய்தி ” எனக் குறிப்பிட்டார்.
உதயன் பத்திரிகையின் முதற்பக்க பக்கவடிவமைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion
“போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து மகிந்தவைக் காப்பாற்றியதற்கு சுமந்திரனுக்கு 120 கோடி “ எனும் செய்தியுடன் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்த மின்னிதழ் வாசகர்களை குழப்பமடைந்த செய்யும் நோக்கில் வெளியிடப்பட்ட போலியான வடிவமைப்பு என்பது உறுதிப்படுத்துகிறது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:“சுமந்திரனுக்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டது ” என்ற செய்தியின் உண்மைத் தன்மை என்ன?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
