
கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க இலங்கை பூராகவும் வானூர்திகள் மூலம் ஒருவகையான கிருமி நாசினி தெளிப்பு இடம்பெறவுள்ளது என்று ஒரு செய்தி பரவுவதை நாம் காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

புது யுகம் சுல்பிகார் என்ற பேஸ்புக் கணக்கில் ” #இலங்கை_வாழ்_அனைத்து_மக்களுக்கும் #ஓர்_முக்கிய_அறிவித்தல்
இரவு 12 மணியளவில் இலங்கை பூராகவும் தற்போது உலகம் பூராகவும் பரவி வரும் Corona (Covid-19) வைரஸ் தொற்று நமது நாட்டில் பரவாத வண்ணம் இலங்கை சுகாதார விழிப்புணர்வு மையம் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய நள்ளிரவு 12 மணியளவில் வானூர்திகள் மூலம் ஒருவகையான கிருமி நாசினி தெளிப்பு இடம்பெறவுள்ளது. எனவே நாட்டு மக்களை வெளியில் செல்ல வேண்டாம் மற்றும் நமது பொருட்களை வீட்டிற்குள் வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இந்த வைரஸ் நமது நாட்டில் பரவாத வண்ணம் இருக்க அனைத்து மக்களின் உதவியையும் எதிர்பார்க்கின்றோம்.
நாம் நமது நாட்டில் இந்த தொற்று அதிகரிக்க ஒருபோதும் இடமளிக்காமல் சுகாதார மையம் தெரிவிக்கும் செய்திகளை கேட்டு அதற்கேற்றால் போல் செயற்படுவோம்.
(இந்த செய்தியை உங்கள் அனைத்து நண்பர்கள் உறவினர்களுக்கு தெரிவியுங்கள்)
-சுகாதார மையம் இலங்கை-” என்று இம்மாதம் 20 ஆம் திகதி (20.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில், நாம் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தினை தொடர்பு கொண்டு வினவிய போது, இவ்வாறான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.
மேலும் இலங்கையில் அனைத்து விமானசேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ளுவதற்கு வாய்ப்பில்லை என தெரிவத்தார்.
இலங்கையில் அனைத்து மாகாணங்களுக்கு ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டு பொதுமக்களை வீட்டினுள் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர். மேலும் வீட்டிலிருந்து தமது பணிகளை முன்னெடுக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையே இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.
மேலும் குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு வானூர்திகள் மூலம் ஒருவகையான கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கை இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போலியான தகவல்களை மக்கள் மத்தியில் பகிர்ந்து பதற்ற நிலையினை விளைவிக்க பலர் இவ்வாறான தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கொரோனா வைரஸை தடுக்க வானூர்திகள் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டம் என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

Title:கொரோனா வைரஸை தடுக்க வானூர்திகள் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டமா?
Fact Check By: Nelson ManiResult: False