
2025 ஆண்டுக்கான தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் தற்போது வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் 2025 ஆண்டுக்கான தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
2025 ஒன்லைன் பதிவு முறையானது இதற்கு விண்ணப்பிக்க விரைவான வழியாகும், பல்வேறு வணிகங்கள் மற்றும் கல்வியில் உதவி தேவைப்படும் அனைத்து நேர்மையான பொதுமக்களுக்கு மாத்திரமே இப்போது கிடைக்கின்றது.
*தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதியத்தின் தொலைநோக்குப் பார்வை, 13-65 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு பிரஜைக்கும் 150,000 – 550,000 மானியம் வழங்குவதாகும். 2025-2026 வரை*
*வயது 13-25-(150,000-300,000)*
*வயது 25-65(400,000-700,000)*
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பணம் செலுத்துதல் இப்போதுதான் தொடங்கியுள்ளது, தகுதியைச் சரிபார்த்து இங்கே விண்ணப்பிக்கவும்
மாணவர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களுக்கு மாத்திரம் என ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.03.27 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதே தகவல் வடஸ்அப்பிலும் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பலரும் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இவ்வாறான நிதித் திட்டங்கள் எதுவும் உண்மையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
அத்துடன் குறித்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கணிணி வழியாக கிளிக் செய்தவுடன் முதலீட்டு திட்டம் தொடர்பான ஒரு இணையதளத்தினையே எம்மால் பார்க்க கூடியதாக இருந்தது.
இருப்பினும் இதே இணைப்பை கைதொலைபேசி ஊடாக கிளிக் செய்து பார்க்கும் போது, பின்வருமாறு ஒரு இணையதளத்திற்குள் உட்செல்லக் கூடியதாக இருந்தது.
அதில் எம்முடைய பெயர் உள்ளிட்ட தரவுகள் கேட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த இணைப்பில் உகண்டா மற்றும் தென்கொரியாவின் தேசியக் கொடிகள் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
உண்மையில் இது போன்ற திட்டங்கள் நமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் இலங்கையின் இலட்சிணையே காணப்பட்டிருக்கும் எனினும் இதில் வேறு இலட்சிணைகள், கொடிகள் என்பனவே காணப்படுகின்றன.
மேலும் குறித்த பதிவில் இளைஞர் வலுவூட்டல் நிதியத்திற்கு 25 – 65 வயதுடையவர்கள் விணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது, இருப்பினும் 39 வயதிற்கு மேற்பட்டவர்கள் இளைஞர்கள் என்ற பிரிவிற்குள் எவ்வாறு உள்சேர்க்கப்படுவார்கள் என்பதுவும் சந்தேகத்திற்கிடமான ஒரு விடயமாகும்.
தொடர்ந்து நாம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தொடர்பில் சர்வதேச உண்மைக் கண்டறியும் நிறுவனத்தினால் அறிக்கையிடப்பட்டிருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.Link
அதுமட்டுமன்றி இதே விதமான நிதித் திட்டம் தொடர்பில் நைஜீரியாவை தளமாகக் கொண்ட News Central TV இன் யூடியூப் தளத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான செய்தியை பார்வையிடவும்
அதில் இந்த திட்டமானது பாரிய scam எனவும் அதன் மூலம் மக்களின் தரவுகள் திருடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்து.
விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு
மேலும் இவ்வாறான நிதித்திட்டங்கள் தொடர்பில் ஏதேனும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளனவா என நாம் இளைஞர் விவகார அமைச்சின் இணையதளத்தில் ஆராய்ந்த போது அதில் அவ்வாறான எந்த அறிக்கைகளும் வெளியாகியிருக்கவில்லை.
அத்துடன் இது குறித்து நாம் அமைச்சுடன் தொடர்பை ஏற்படுத்தி வினவியபோது இலங்கையில் அவ்வாறான எந்த நிதித் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் தற்போது வெளியாகியுள்ளதாக பகிரப்படும் தகவல் போலியானது என்பதுடன் இது மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடுவதற்கான முயற்சி என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக நாம் இவற்றை SCAM என்றே அழைக்கிறோம், மேலும் இதுபோன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் அவதானத்துடன் இருக்குமாறும், இதுபோன்ற போலி தகவல்களால் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே இவ்வாறான தகவல்கள் வரும் பட்சத்தில் முதலில் அது குறித்த நிறுவனங்கள், அதிகார சபைகள், அமைச்சுகள் என்பவற்றின் உத்தியோகபூர்வ இணையதளம், சமூக ஊடகப் பக்கங்களில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளனவா என ஆராயுங்கள் அல்லது அவர்களுடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதிக்கான விண்ணப்பப் படிவம் உண்மையானதா?
Fact Check By: suji shabeedharanResult: False
