மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு விதிக்கபடும் அபராதம் மற்றும் தண்டனை தொடர்பில் சமூக ஊடகங்கள் வழியாக சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)

குறித்த பதிவில் நாளை(22) தொடக்கம் மதுபோதையில் வாகனத்தை செலுத்தினால் 2.5 இலட்சம் தொடக்கம் 5 இலட்சம் வரை அபராதம் அல்லது 2 வருட சிறை தண்டணை என தெரிவிக்கப்பட்டு இன்று (2025.06.21) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாளை (22) முதல் மதுபோதையில் வாகனத்தை செலுத்தினால் 2.5 இலட்சம் தொடக்கம் 5 இலட்சம் வரை அபராதம் அல்லது 2 வருட சிறை தண்டணை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட செய்தி பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.
பொலிஸ் ஊடகப் பிரிவு
இதன் காரணமாக, குறித்த தகவல் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு மற்றும் பொலிஸ் போக்குவரத்து துறையிடம் வினவினோம், இதன்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது எனவும், இதுவரை மோட்டார் வாகனச் சட்டத்தில் அத்தகைய திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
மேலும் இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று தெரிவிக்கப்பட்ட ஒரு பதிவும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை கோர இலங்கை பொலிஸ் தீர்மானித்திருந்தது, இருப்பினும் அது இதுவரை சட்டமாக இயற்றப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள்
சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் மீது வழக்குத் தொடர பொலிஸாருக்க அதிகாரம் உள்ளது.
இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் மீது நீதிமன்றத்தினால் குறைந்தபட்சம் 25,000 ரூபா அபராதம் விதிக்கப்படும்
குறித்த நபரின் சாரதி அனுமதிப்பத்திரமும் 2 அல்லது 3 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை அதே குற்றத்திற்காக குறித்த சாரதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால், அவருக்கு எதிராக விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்படுவதுடன் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படும் காலமும் நீட்டிக்கப்படும்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நாளை (22) முதல் மதுபோதையில் வாகனத்தை செலுத்தினால் 2.5 இலட்சம் தொடக்கம் 5 இலட்சம் வரை அபராதம் அல்லது 2 வருட சிறை தண்டணை வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்பது பொலிஸ் ஊடகப்பிரிவு மற்றும் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் உறுதிப்படுத்தல்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.