
ரயில் பயணிக்கும் போது சரிந்து வீழ்ந்த ரயில் பாதை என தெரிவிக்கப்பட்டு, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
Facebook | Archived Link
பேரதிர்ச்சி…!
ரயில் பயணித்த போது சரிந்து விழுந்த ரயில் பாதை…
இந்த பாதைகளை பலமிக்கதாக எவ்வாறு மீள கட்டியெழுப்பலாம்..? உங்களுடைய ஆலோசனையை கூறுங்கள் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று ரயில் பயணிக்கும் போது ரயில் பாதையொன்று சரிந்து வீழ்ந்திருக்கும் பட்சத்தில் அது குறித்து, பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும். எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் பிரதான ஊடகங்களில் அண்மையில் வெளியாகவில்லை என்பது உறுதியானது.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் ரயில் பாதைகள் சேதமடைந்து காணப்பட்டன. அவ்வாறான பாதைகளை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
எனவே மேற்குறிப்பிட்ட காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, பேஸ்புக்கில் குறித்த காணொளி கடந்த 19 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
“இந்த முறையில் இவற்றை எப்போது முடிப்பது? வேறு தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்த வேண்டாமா?” என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி பகிரப்பட்டிருந்தது. எனினும் அந்த காணொளியில் ரயில் பயணிக்கும் போது இந்த பாதை சரிந்து வீழ்ந்ததாக அந்த குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
மேலும் அந்த பதிவின் மூலமும் இது மீளமைக்கப்பட்டு வரும் ரயில் பாதை என்பதனையே அறியமுடிந்தது.
மேலும் அந்த பதிவில் கொடுக்கப்பட்டிருந்த கமென்ட்கள் மூலம் இது புத்தளம் குடா ஓயா ரயில் பாதை என்பதனை அறியமுடிந்தது.

எனவே நாம் இது தொடர்பில் மேலும் ஆராயும் போது சீரற்ற காலநிலையால் சேதமடைந்த கொழும்பு – புத்தளம் ரயில் பாதையின் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையிலான ரயில் பாதை துரிதமாக புனரமைக்கப்பட்டு வருகிறது.
வலஹபிட்டிய உப ரயில் நிலையத்திற்கு அண்மையில், சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழைமையான இரும்பு ரயில் பாலத்துடன் இணைந்த நிலப்பகுதி நீரோட்டத்தினால் சேதமடைந்திருந்த நிலையில், அதுவும் சீர்செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ், சிலாபம் – போலவத்தை ரயில் பராமரிப்புப் பிரிவின் ஊழியர்கள் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து இந்த புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். என தெரிவிக்கப்பட்டு பல செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது. Link | Link | Link
அந்த செய்திகளை நாம் ஆராய்ந்த போது குறித்த செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இந்த காணொளியின் காட்சிகளுடன் ஒத்துப்போவதனை காணமுடிந்தது. அந்த புகைப்படங்கள் பின்வருமாறு
மேலும் நாம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியின் கமென்ட்கள் தொடர்பில் ஆராய்ந்தபோது அதில் பலர் இது புனரமைக்கப்படும் ரயில் பாதையின் பரீட்சார்த்த நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட காணொளி என குறிப்பிடப்பட்டிருந்ததுடன், சிலர் தற்போது புனரமைக்கப்பட்டு வரும் பாலத்துடனான ரயில் பாதையின் உண்மையான புகைப்படங்களை பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.

எனவே நாம் அந்த புகைப்படத்தினையும் ஆய்வுக்கு உட்படுத்தினோம். இதன்போது குடா ஓயா ரயில் பாலத்தின் தற்போதைய நிலை என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
அத்துடன் குறித்த பாலம் புனரமைக்கப்படும் காட்சிகள் சில பிரதான ஊடகங்களிலும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
நாம் இது குறித்து புத்தளம் பிராந்திய ஊடகவியலாளர்களிடம் வினவியபோது மேற்குறிப்பிட்ட காணொளியானது சேதமடைந்த குடா ஓயா ரயில் பாலத்தின் புனரமைப்பு பணிகளின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதனை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
நாத்தாண்டிய ரயில் நிலையம்
எனவே நாம் இது குறித்து நாத்தாண்டிய ரயில் நிலையத்தை தொடர்புகொண்டு வினவியபோது வெள்ளம் காரணமாக புத்தளம் ரயில் பாதையில் குடா ஓயாவிற்கு மேலுள்ள ரயில் பாலத்துடன் தொடர்புடைய கீழ் பகுதி நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது எனவும் தற்போது சேதமைடைந்த பகுதியை புனரமைக்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்ததுடன், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அந்த வழியுடனான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும் கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்தில் தற்போது கொழும்பிலிருந்து நாத்தாண்டிய வரை ரயில் சேவைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை ரயில்வே திணைக்களம்
அதேபோன்று அண்மையில் ரயில் பயணிக்கும் போது ரயில் பாதை சரிந்து வீழ்ந்த சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றதா என நாம் ரயில்வே திணைக்களத்தை தொடர்புகொண்டு வினவியபோது, அவ்வாறான எந்த சம்வங்களும் அண்மையில் பதிவாகவில்லை என்பதனை அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர்.
அத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி தொடர்பிலும் நாம் அவர்களிடம் வினவினோம். இதன்போது, குடா ஓயாவிற்கு மேலாக செல்லும் ரயில் பாதையை புனரமைக்கும் சந்தர்ப்பத்தில் கருங்கற்களை நிரப்பி அந்த வழியை நிரப்பும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது எனவும், இதன்போது இடம்பெற்ற பரீட்சார்த்த நடவடிக்கைகளின் போதே அந்த கற்கள் சரிந்து வீழ்கின்றன எனவும் இவ்வாறான புனரமைப்பு நடவடிக்கைகளின் போது சில சமயங்களில் இவ்வாறு நடக்கக் கூடும் என்பதனையும் அவர்கள் தெரிவித்தனர்.
அதேபோன்று போன்று மிகவிரைவில் இந்த வழி ஊடான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பதனையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ரயில் பயணிக்கும் போது ரயில் பாதை சரிந்து வீழ்ந்ததாக பகிரப்படும் காணொளி தவறானது என்பதுடன், அது வெள்ளத்தினால் சேதமடைந்த புத்தளம் ரயில் மார்க்கத்தில், குடா ஓயாவிற்கு மேலுள்ள ரயில் பாலத்தின், புனரமைப்பின் போது, மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகளில் அங்கு நிரப்பப்பட்டிருந்த கற்கள் சரிந்து விழும் காணொளி என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:ரயில் பயணித்த போது சரிந்து வீழ்ந்த ரயில் பாதை என பகிரப்படும் காணொளி உண்மையா?
Fact Check By: Suji ShabeedhranResult: Misleading


