
INTRO :
இலங்கையில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையால் நாடளாவிய ரீதியில் கொரோனா தொடர்பில் பல்வேறுபட்ட போலி தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைக்கின்றது.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்ற பஸ் விபத்திற்குள்ளான சந்தர்ப்பத்தில் பலர் தப்பி ஓடியதாக ஒரு தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த செய்தி போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Public Media News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” தனிமைபடுத்தல் நிலையத்திற்கு சென்ற பஸ் விபத்து – பலர் தப்பி ஓட்டம்…!✅
READ MORE 👇👇👇
தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் அதில் பலர் தப்பி ஓடுய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று கொரோனா நோயாளிகளைக் கொண்டு சென்ற பஸ் தனிமைப்படுத்துவதற்கு முகாமுக்குச் சென்று கொண்டிருந்தபோது நுவரெலியாவில் உள்ள ஹோல்ப்ரூக் பகுதியில் விபத்துக்குள்ளானது.
அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.” என இம்மாதம் 05 ஆம் திகதி (10.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
பொலிஸ் ஊடகப்பிரிவினால் தினமும் ஊடகங்களுக்கு அனுப்பப்படும் ஊடக அறிக்கையினை நாம் ஆய்வு செய்த போது குறித்த சம்பவம் தொடர்பாக எவ்விதமான செய்தியும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
மேலும் இது தொடர்பாக தகவலினை கண்டறிவதற்காக நாம் ராகல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினை நாம் தொடர்புக்கொண்டு வினவியபோது, இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்திற்குள்ளாகியமை உண்மை என தெரிவித்தார்.
எனினும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றவாறு யாரும் தப்பிச்செல்லவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து எம்மிடம் கருத்து வெளியிட்ட பொலிஸ் அதிகாரி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் ஐவர் மட்டுமே அதில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் இராணுவத்தின் பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்டதாகவும், மேலும் PPE Kit அணிந்திருந்ததாகவும் தெரிவித்த அவர், எக்காரணத்திற்காகவும் குறித்த பஸ் கதவுகள் திறக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தலுக்கு இராணுவம் பொறுப்பேற்றுள்ளமையால், நாம் இது குறித்து இராணுவ ஊடகப்பிரிவினரிடம் விசாரித்தபோது, தனிமைப்படுத்தலுக்கு கொண்டு சென்றவர்கள் நுவரெலியாவுக்கு தப்பிச் சென்றதாக வெளியான தகவல்கள் முற்றிலும் போலியானது எனவும் அவர்கள் பாதுகாப்பாக ரண்டம்பே தனிமைப்படுத்தல் முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
நாம் குறித்த செய்தி தொடர்பில் மேலும் தேடியவேளையில், குறித்த பிரதேசத்தில் செய்திகளை வெளியிடும் பேஸ்புக் பக்கமான හඟුරන්කෙත-(Hanguranketha) கடந்த 9 ஆம் திகதி (090.10.2020) வெளியிடப்பட்ட செய்தியினை மக்கள் தவறான முறையில் பகிர்ந்து வருகின்றனர் என்று அவரின் பக்கத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
இதற்கமைய தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்ற பஸ்ஸில் இருந்து பலர் தப்பி ஓட்டம் என வெளியான செய்தி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எமது சிங்களப்பிரிவின் அறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
நாம் மேற்கொண்ட தேடுதலின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்ற பஸ் விபத்தின் போது பலர் தப்பி ஓட்டம் என வெளியான செய்தி போலியானது என ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.

Title:தனிமைப்படுத்தல் நிலையத்திற்குச் சென்ற பஸ் விபத்து பலர் தப்பி ஓட்டமா?
Fact Check By: Nelson ManiResult: False