
INTRO:
பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விடயங்கள் தொடர்பில் உரிய விதத்திலான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதால் தவறான தகவல்கள் சமூகத்தில் பரப்பப்படுகின்றன.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை! எனும் தலைப்பில் சமூக ஊடகங்களின் ஊடாக செய்திகள் பரவிவருகின்றன.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
திரிபோஷா நிறுவனத்தை மூடும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதா என்று நாம் முதலில் ஆராய்ந்தோம்.
திரிபோஷா நிறுவனத்தை மூடும் தீர்மானத்திற்கு புதிய அரசாங்கம் வந்துள்ளதாக மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டுக் குழு உறுப்பினர் புபுது ஜயகொட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்த கருத்தை அடிப்பைடையாகக் கொண்டு பல செய்திகள் வெளியாகியுள்ளமையை எம்மால் காண முடிந்தது.
அநுர குமார அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதனைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் 27 ஆம் திகதி 2403/ 53 ஆம் இலக்க வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாகவும் குறித்த வர்த்தமானியின் 8 ஆம் பக்கத்தில் 36 ஆவது பிரிவிற்கமைய அரசாங்கம் திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
2024 செப்டம்பர் 27 ஆம் திகதி 2403/ 53 ஆம் இலக்க வர்த்தமானி தொடர்பில் நாம் எமது அவதானத்தை செலுத்தியிருந்தோம். அதன் போது குறித்த வர்த்தமானியானது அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு தினங்களுக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ளதனை காணமுடிந்தது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 44 (1) வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் புதிய அமைச்சுக்களுக்கான நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களின் கடமைகளை வழங்குவதற்காக 2403/ 53 ஆம் இலக்க வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியை பார்வையிட
உண்மையில், 36 ஆவது கருத்தின் கீழ், அட்டவணையின் 11 வது வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் செயல்பாடுகள் கலைக்கப்பட வேண்டும் அல்லது பிற நிறுவனங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
11ஆவது வரிசையில் உருப்படி எண் 54 முதல் 57 வரை குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களில், உருப்படி எண் 57 இல் திரிபோஷா நிறுவனம் பின்வருமாறு காணப்படுகிறது.
நிதி அமைச்சின் செயலாளர்
எனவே இதுதொடர்பில் சரியான தகவல்களை அறிந்துகொள்ளும் நோக்கில் நிதியமைச்சின் செயலாளர் கே.எம்.எம் சிறிவர்தனவிடம் நாம் வினவினோம்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்போதைய அரசாங்கம் இலங்கை திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளாது எனவும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்திலும் போசாக்கான குழந்தைகளின் தலைமுறையைக் கட்டியெழுப்புவதுடன், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு நிறைந்த உணவுத் திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலே குறிப்பிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலும் நாம் அவரிடம் வினவினோம்
இதன்போது, குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் பதவிப் பிரமாணம் செய்து கொண்டவுடன் வெளியிடப்பட்ட அறிவித்தல் எனவும், அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உரிய வேலைத்திட்டங்களை விரைவாக அறிவிப்பதே இந்த வர்த்தமானி அறிவித்தலின் முதன்மை நோக்கமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக, புதிய ஜனாதிபதியின் கீழ் ஏற்கனவே இருந்த வர்த்தமானி அறிவிப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு முன் ஆய்வுகளும் இன்றி ஏற்கனவே இருந்த வர்த்தமானி அறிவித்தலை புதிய ஜனாதிபதியின் கீழ் புதுப்பித்தமையினாலேயே இந்த பிரச்சினை உருவாகியுள்ளமை புலனாகின்றது.
எனினும் இலங்கை திரிபோஷா நிறுவனம் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2403/53-ல் உள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பல்வேறு தரப்பினர் செய்திகளை உருவாக்க முயல்வதாகவும், இலங்கை திரிபோஷ நிறுவனத்தை கலைக்க அரசாங்கம் எந்த திட்டமும் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவ்வாறு செய்வது புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு பொருந்தாது எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை திரிபோஷா நிறுவனம்
குறித்த விடயம் தொடர்பில் நாம் திரிபோஷா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் வினவினோம்.
திரிபோஷா நிறுவனத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளுடன், திரிபோஷா உற்பத்தி தொழிற்சாலையின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகக் கூறினார். திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கான தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் தமக்கு எதுவும் அறிவிக்கவில்லை எனவும், அவ்வாறான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும், திரிபோஷா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
மேலும் வர்த்தமானி அறிவிப்பில் சில கவனிக்கப்படாத காரணங்களால், சிலர் ஊடகங்களுக்கு இதுபோன்ற பொய்யான தகவல்களைக் கூறினர். ஆனால், வர்த்தமானி அறிவித்தலுக்குப் பிறகு, அத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருந்தால், இந்த நிறுவனத்தை இப்போது மூட வேண்டும். அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட சூழலில்,உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு பொய்யான தகவல் பரப்புவோர் திரிபோஷா நிறுவனத்திடம் இது குறித்து விசாரிக்காமல் வதந்தி பரப்புவதாக, அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையிலுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் போசாக்கினை அதிகரித்து போசாக்கான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் சுகாதார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் செயற்படும் ஒரு அரச நிறுவனமே இலங்கை திரிபோஷா நிறுவனம். Link
இதற்கு முன்னர், அஃப்லாடாக்சின் என்ற நச்சுப் பொருள் திரிபோஷாவில் இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக இருப்பதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு, திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:திரிபோஷ நிறுவனத்தை மூடும் தீர்மானம் தொடர்பான உண்மை என்ன?
Written By: Fact Crescendo TeamResult: False
