
ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் கப்பல்கள் என தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில் ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் இந்தக் கப்பல்கள் அனைத்தின் தலைவிதியும் ஈரானின் கைகளில் உள்ளது. கடந்து செல்லலாம் என்று அது சொன்னால், கடந்து போகலாம். தடை என சொன்னால், காத்திருக்க வேண்டும். டிரம்ப்பாலோ, நெதன்யாகுவாலோ ஈரானை அதன் சொல்லைக் கேட்க வைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டு 2026.03.25 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அந்தக் காணொளியில் ஹோர்முஸ் ஜலசந்தி காட்டப்படவில்லை என்பதுடன் அது உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான சிங்கப்பூர் ஜலசந்தியைக் காட்டுகிறது என்பதனையம் எமது விசாரணைகளின் போது உறுதிசெய்யப்பட்டது. மேலும் அது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கும் ஒரு விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
இந்தக் காணொளி முதலில் மார்ச் 17 அன்று, இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கான பயணக் காணொளியின் ஒரு பகுதியாகப் பதிவிடப்பட்டது, அதில் ஹோர்முஸ் ஜலசந்தி பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. காணொளியைப் பதிவிட்ட நபரின் கணக்கில் அந்தக் காணொளியை ஆய்வு செய்ததில், அது மத்திய கிழக்கில் அல்ல, சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.

மேலே உள்ளதைப் போன்ற காட்சிகளைக் கொண்ட காணொளிகள் இதற்குமுன்னரும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன. அந்த காணொளிகளை கீழே பார்க்கலாம். அது சிங்கப்பூர் ஜலசந்தியில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களை விமானங்களிலிருந்து பார்ப்பது போல் காட்டுகிறது.
மேலும், கடல்சார் கண்காணிப்பு அமைப்பான TankerTrackers.com இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்தக் காட்சிகள் ஹோர்முஸ் ஜலசந்தி அல்ல, சிங்கப்பூருக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கடல் வழி போக்குவரத்தின் உண்மை நிலை
ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படவில்லை என்றும், நட்பு நாடுகளின் கப்பல்கள் சில நிபந்தனைகளின் கீழ் பயணிக்க அனுமதிக்கப்படுவதாகவும் ஈரான் அதிகாரிகள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும், நடைமுறையில் அங்கு சாதாரண செயல்பாடுகள் இடம்பெறவில்லை.
ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்திச் சேவையின் தகவலின்படி, இந்த வழித்தடத்தைப் பயன்படுத்துவதற்கு ஈரான் அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு அவசியமானது என்பதுடன், சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக உலகளாவிய கடல்சார் துறையில் கடும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், தாக்குதல்கள் நடத்தப்படக்கூடிய அபாயம், கடல் கண்ணிவெடிகள் மற்றும் அதிகப்படியான காப்பீட்டுக் கட்டணங்கள் (Insurance premiums) காரணமாக உலகின் முன்னணி கப்பல் நிறுவனங்களும் காப்பீட்டு அமைப்புகளும் இப்பிராந்தியத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றன. அறிக்கைகளின்படி, கடல் வழி போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளதோடு, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்கள் மாத்திரமே கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பயணிக்கின்றன.
ஏதேனும் ஒரு கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்தாலும், அது ஒரு விதிவிலக்கான சந்தர்ப்பமே தவிர, அந்த கடல் வழித்தடம் முழுமையாகத் திறக்கப்பட்டிருப்பதற்கான சான்றாக அமையாது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் கப்பல்கள் என தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன், அது சிங்கப்பூர் ஜலசந்தியில் காணப்படும் அதிகப்படியான கப்பல் போக்குவரத்தைக் காட்டும் காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
மேலும் 2026 பெப்ரவரி இறுதி முதல் ஹோர்முஸ் ஜலசந்தியின் கடல்சார் நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை உண்மையாக இருந்தபோதிலும், இந்த காணொளி தவறானது என்பது தெளிவாகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


